Post by Amritha Varshini on Aug 6, 2013 19:40:42 GMT 5.5
அவர் யாரையும் மன்னித்ததில்லை. ஏன்? அவர் யாரையும் தவறு செய்தவர்கள் என்று ஒரு க்ஷணமும் எண்ணியதில்லை என்று பார்த்தோம்.
ஓர் சம்பவம்.
அடியார் ஐயனிடம் உத்தரவு கேட்டு வந்தார், மறு நாள் விடியலில் ஊர் திரும்ப.
ஐயன் திருவாய் மலர்ந்தார், 'நன்னா இருக்குடா, விடிஞ்சா ஸ்ரீ ராம நவமி, விடியலுக்கு ஊர் கெளம்பறேன் அப்டிங்கறியே? மடத்திலே இருந்து ராம நவமி பூஜை பாத்துட்டு, பிரசாதம் வாங்கிண்டு போ, இல்லே இப்பவே கெளம்பி, விடியலுக்கு ஆத்துக்கு போய், அங்கே பூஜை ல கலந்துக்கோ, ரெண்டும் இல்லாத பூஜை சமயத்திலே பஸ் லேயும் டிரெயின் லேயும் ஆ போயிண்டு இருப்பே?'.
அடியார் சொன்னார் 'எனக்கு இந்த ராம நவமி, கிருஷ்ண அஷ்டமி இதிலே எல்லாம் நம்பிக்கை இல்லே பெரியவா, இதெல்லாம் வேதத்திலே சொல்லி இருக்கா என்ன?, இதெல்லாம் கொண்டாடனுமா என்ன, இப்படியே ஒண்ணொண்ணா தேவை இல்லாமே நாம்ப தான் சேர்த்திகிண்டே போறோம், இதுக்கெல்லாம் என்ன ஆதாரம்?'.
ஐயன் ஆரம்பித்தார், 'ஆமாண்டா அப்பா, எல்லாத்தையும் வேதத்திலே சொல்லறாப்பல தான் நீ தினமும் பண்ணிண்டு வரே பாரு, கார்த்தாலே எழுந்து மொத நாள் உபயோகிச்ச எச்ச பிரஷ் ல என்ன என்னவோ போட்டு பண்ணின பேஸ்ட் வெச்சு பல்லு தேய்க்கறே. இது எந்த வேதத்திலே சொல்லி இருக்கு?
அப்பறம் ஒன் சம்சாரம் காப்பி போட்டு கொடுக்கறா, காப்பி எந்த வேதத்திலே சொல்லி இருக்கு.
ரெண்டு நாள் முன்னாடி அறச்ச மாவிலே குக்கர் ல இட்லி வாத்து டிபன் பாக்ஸ் ல போட்டு தரா, அதையும் நீ தோள் ல தொங்க போட்டுண்டு ஆபிஸ் போறே, இது எந்த வேதத்திலே சொல்லி இருக்கு.
அங்கே பல பேரு சாப்பிட்ட எச்ச டேபிள் ல வெச்சுண்டு இதை சாப்பிடறே, இது எந்த வேதத்திலே சொல்லி இருக்கு.'
என்று நாள் முழுதும் செய்யும் விஷயங்களை பட்டியல் போட்டு ஒரு பிடி பிடித்தார்.
முத்தாய்ப்பாக, 'ஆமாமாம், எந்த வேதத்திலே சொல்லி இருக்கு, என்ன மாதிரி ஒரு சந்நியாசி இப்படி ஒரு மடத்திலே ஒக்காந்துண்டு ஒங்களுக்கு இதெல்லாம் சொல்லணும் ன்னு. நான் கொடுக்கற பிரசாதம் கூட எந்த வேதத்திலேயும் சொல்லி இருக்காது, அது கூட ஒன்ன மாதிரிப்பட்டவாளுக்கெல்லாம் தேவையா இருக்காது' என்றார்.
அடியார் தெரியாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொண்டோமே என்று ஐயன் கால்களில் கண்ணீர் மல்க மன்னிக்க கோரினார்.
அந்த தெய்வம் தொடர்ந்தது.
'அப்டி இல்லேடா, எல்லாத்தையும் வேதத்திலே சொல்லிண்டு இருக்க முடியாது, வேத தர்மத்துக்கு ஹானி இல்லாத எதையும் நம்ப கொண்டாடலாம். ராமச்சந்திர ப்ரபுவும் , கிருஷ்ண பரமாத்மாவும் நமக்கு பண்ணி இருக்கற உபகாரம் கொஞ்சமா, நஞ்சமா, அவா ஜெயந்தி கொண்டாடறதிலே என்ன தப்பு?'
'சரி பெரியவா, என்ன க்ஷமிக்கணும். தெரியாம அப்டி பேசிப்பிட்டேன், இங்கேயே தங்கி மடத்து பூஜை பாத்துட்டு நாளை மதியம் ஊருக்கு கிளம்பறேன்'.
'நன்னா பொழுது விடிஞ்சு ராம நவமி கொண்டாட்டத்திலே ஆரம்பிச்சு அதுக்கப்புறம் வேத பாராயணம், யாக யக்ஞாதிகள் ன்னு வளர்ந்து நீ பெரிய வாஜபேயம் வரைக்கும் போகணும் டா, அப்டின்னு அந்த ராமச்சந்திர ப்ரபு கிட்ட ப்ரார்த்திச்சிகறேன். க்ஷேமமா இருப்பே நீ' என்றது அந்த ராமச்சந்திர பிரபுவின் கலியுக அவதாரம்.