Post by Amritha Varshini on Oct 26, 2013 11:27:48 GMT 5.5
தீபாவளி சிந்தனை - Article by Sri J.K. Sivan (jksivan@gmail.com)
'ஆமாம் தீபாவளி ரொம்ப கிட்டவே வந்துடுத்து. இன்னும் கொஞ்ச நாள் லே நமக்கெல்லாம் ஆபத்து. காது செவிடுபட தெருவெங்கும் பட்டாசு சத்தம் கேட்கும். நமக்கு கதி கலங்கும்'' பசு சொன்னது.
''எல்லா தெருவிலும் இது நடக்கும்போது நாம் எங்கே ஒதுங்குவது."" நாய் மாட்டை கேட்டது.
''நீயாவது ஒரே ஓட்டம் ஒடுவிடுவாய். நான் எங்கே நகர்வது'' . ஒரே இடத்தில் எங்காவது ஜாக்ரதையாக ஒரு சில நாட்கள் கழிக்க வேண்டுமே. தெருவில் போனாலாவது யாராவது வாழைப்பழம், கீரை, காய்கறி தோல், தண்ணீர், கழுநீர், கொடுப்பார்கள். ஏதாவது கிடைக்கும் சாப்பிட. அதுக்கும் ஆபத்து தான். '' பசு பொருமியது.
''ஜிம்மியை உள்ளே கட்டில் மேலேயே படுக்க வை. பயந்து நடுங்கும். சத்தம் கேட்டு அழறது. பால் குடிக்காது. --- கிட்டுவுக்கு தனது நாய்க்குட்டியின் கவலை.
தெருநாய்க்கு இந்த அளவு அக்கரை யார் காட்டுவார்கள்?. மிருகங்களின் வாலில் பட்டாசு கட்டிவிட்டு கொளுத்தி அவை திணறி ஓடுவதில் வேடிக்கையும் கோலாகலமும் கொள்ளும் மனித வக்கிரங்களும் உள்ளனவே.
''சாமளா, ஜன்னலை சாத்து. சத்தம் தாங்கமுடியலை. தூக்கி தூக்கி போடறது''. ஒரு தாத்தாவின் வேதனையை ஒரு பாட்டியின் குரலுக்கு ஒப்பாக கொள்ளலாம்.
''அடே, சீனு வெளிலே போகும்போது, வரும்போது, எல்லாம் அந்த கதவை சாத்திட்டு போப்பா. வாசலுக்கு பக்கத்திலே இருக்கு இந்த கதவும் ஜன்னலும். வெளிலே எல்லோருமா கொளுத்தற பட்டாசு புகை என்னுடைய இருமலை அதிகப்படுத்தறதே. தாங்க முடியலை. எழுந்து எழுந்து பாத்ரூம் போக முடியலைடா.''
கோதண்டம் தீபாவளி ஆரவாரம் முடியும் வரை வயிற்றில் நெருப்பைக்கட்டிக் கொள்பவன். ஏன்? அவனது வீடு முக்கால்வாசி குடிசை, ஓலைப்பகுதி ஜாஸ்தி. பால் வியாபாரம். மாடு பயத்தில் பால் கறக்காது. அவன் வீட்டுக்கு எதிரே ஒரு அடுக்கு வீடு. பத்து குடித்தனத்தில் பதினைந்து வானரங்களாவது இருக்குது என்பான். ஒண்ணு மாத்தி ஒண்ணு எதாவது வெடி வாணம் கொளுத்துமே. விடாம அதுகளை மேய்க்கணுமே. கொஞ்சம் அசந்தாலும் குடிசை மீது அல்லது ஓலை மீது நெருப்பு படலாம்.
சரவணன் எப்போதும் தன்னை உயர்த்திப்பேசி தன பேச்சில் தானே மகிழ்பவர். இந்த தெருவிலேயே நிறைய பட்டாசு வெடிக்கிறது எங்க வீட்டிலே தான் என்பதில் ஒரு கர்வம் அல்லது பெருமை. என் பையன் குறைஞ்சது பதினைந்து ஆயிரத்துக்காவது வெடி, வாணம் வாங்குவான். சொன்னா கேக்க மாட்டான்". தான் சொன்னதை யார் எல்லாம் கேட்டார்கள் என்று துருவித் துருவி கண்ணாடி வழியாக பார்த்து விட்டும் சந்தேகத்துக்கு மறுபடியும் ஒருமுறை உரக்க சொல்வார்.
அன்ன பூரணி இரவு பூரா உழைத்து பக்ஷணம் செய்து அதை விற்று நாலு காசு பார்ப்பவள். அவள் தீபாவளியை வரவேற்றாள். தீபாவளிக்கு நாலு நாள் முன்பே இரவும் பகலும் எண்ணைச் சட்டி முன்பு தான்.
சோமு வாத்தியார் கண் மங்கல் என்று கைக் குச்சியால் தட்டி தட்டிப் பார்த்து நடப்பவர். ஒரு முறை ஒரு பட்டாசு அரை உயிர் போய் அவர் குச்சி பட்டதால் புனர் ஜன்மம் பெற்று படார் என்று அவர் காலடியில் வெடித்தபோது சோமு தனது வாழ்க்கையிலேயே மிக உயரமாக எழும்பி மூன்றடி குதித்து தாண்டினார். அதை அடுத்து அவர் தெருப் பசங்களை .
பேசிய பேச்சு, அல்லது ஏச்சு, எழுதுவதற்கு நாகரீகம் இல்லாதது.
நாராயணியின் பெண், அப்பா இல்லாதவள். அம்மா பல வீடுகளில் பெருக்கி துவைத்து, அவர்கள் தரும் மீந்த உணவில் வாழ்ந்து அவளை வளர்த்தாள். அந்த சிறுமி தெருவில் அரை வாசி எரியாத மத்தாப்பூ பட்டாசு எல்லாம் பொருக்கி வந்து தனி தீபாவளி கொண்டாடும்.
ராஜகோபால் வழக்கம் போல் இந்த வருஷமும் தீபாவளிக்காக 100 - 150 லட்டு பொட்டலம் கட்டி மலையடிவாரத்தில் உள்ள ஒரு அரசாங்க ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.
ஆட்டோ ரிக்ஷா சங்கத்தினர் ஒன்றாக சேர்ந்து பொதுவில் ஒரு ஒலிபெருக்கி வைத்து பழைய எம்ஜீயார் பாட்டுகளை போட்டு கல்கண்டு வழங்க தீர்மானம் போட்டனர்.
நிறைய வீடுகளில் புது மாபிள்ளைக்கு சீர் வரிசைக்கு பட்ஜெட் போட்டு போட்டு கை சலித்தனர்.
ஜவுளி ஜம்புலிங்கம் பழைய புடவைகளை சல்லிசான விலைக்கு தள்ளிக்கொண்டிருந்தான். அதிலும் கொஞ்சம் லாபம் பார்த்து விடாமலா வியாபாரம்.
சிறுவர்கள் பெற்றோரைத் துளைத்து நிறைய பட்டாசு வாங்க முயன்றனர்.
பத்திரிகைகள் நடிகை நடிகர் கூட்டம் தீபாவளி எப்படி கொண்டடப்போகிறது என்ற கவலையோடோ , ஆவலோடோ காத்திருக்கும் வாசகர்களுக்காக கட்டுரைகள் படங்கள் சேமிப்பதற்கு ஆள் அனுப்பி வேட்டையாடின.
கிட்டத்தட்ட இதுமாதிரி விஷயங்களைத்தான் இன்று நாம் காண்கிறோம். உண்மையில் தீப வழிபாடு நடக்கிறதா? அமைதியாக விடியலில் கங்கா ஸ்நானம் நடக்கிறதா. வீட்டில் கிருஷ்ணனுக்கு பிரதானம் கொடுக்கப்படுகிறதா? மனம் கிருஷ்ணன் பால் செல்கிறதா?.
உண்மையிலேயே தீபாவளி எதற்காக, ஏன் கொண்டாடப்பட்டது?
கிருஷ்ணன் கோவிலில் ஒரு தாத்தா ஏதோ த்யானம் செய்து கொண்டு குழந்தைகளை புன்னகையோடு வரவேற்று ஆசீர்வாதம் அளித்துக்கொண்டிருந்தார். நிறைய கிருஷ்ணன் படம் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு கொடுப்பார். அவரிடம் ஒரு பையன் கேட்டான். தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம் தாத்தா?
'' ஆதிகாலத்தில் ஸ்ரீமன் நாராயணன் லக்ஷ்மியை மணம் செய்துகொண்ட நாள் என்று சிலரும், வங்காளத்தில் காளியை பூஜை செய்வதற்கும், விநாயகரை வேண்டுவதற்கும் ஹிந்துக்கள் பல்வேறு கோட்பாடுடன் கொண்டாடினர். ஜைனர்கள் தீபாவளியை மகாவீரர் உன்னதமான ''நிர்வாண '' நிலை பெற்ற நாளாகவும், வேறு சில இடங்களில் ராமர் ராவணனை வென்று பதினான்கு ஆண்டு வனவாசம் முடிந்து லக்ஷ்மணனோடு அயோத்யா திரும்பிய நாளென்றும், கொண்டாடினர். தீபாவளி நான்கு நாள் பண்டிகையாக கூட இருந்தது. முதல் நாள், கிருஷ்ணன் நரகனை வதம் செய்த நரக சதுர்த்தியாகவும், ரெண்டாவது நாள் அமாவாசை அன்று லக்ஷ்மி பூஜையும், அன்றே சிலர் நாராயணன் வாமனனாக மகாபலி சக்ரவர்த்தியை கொன்ற நாளாகவும் கொண்டாடுகிறார்கள். மகாபலி விருப்பப் படி வருடத்திற்கு ஒருநாள் தீபாவளி அன்று அவன் பூமிக்கு வருவதாக ஐதீகம்.
இருளைப்போக்க தீபம். மன இருளைப்போக்க ஞானம் தீபமாக இருக்க வேண்டியே தீபாலங்காரம். மூன்றாவது நாள் மகாபலி தனது பாபங்கள் தீர்ந்து நரகத்தில் இருந்து மீண்டு பூமிக்கு அரசாள வருகிறான். இது விஷ்ணு அளித்த வரம். நான்காவது நாள் சகோதரர்கள் சகோதரிகளின் அழைப்புக்கு இணங்கி மரியாதை பெறுதல். வடக்கே இதை ''பாய் தூஜ் '' விழா என்பார்கள்.
ஒளியும், வாண வேடிக்கைகளும் வானுக்கு, ஆகாயத்துக்கு, நாம் நன்றியுடன் அளிக்கும் வழிபாடு, மழை பொழிய, ஞானம், செல்வம் கல்வி, அபிவிருத்திக்கு ஒரு வேண்டுதல். உங்கள் ஆசியால் நாங்கள் சுகமாக, சுபிட்சமாக நன்றாகவே இருக்கிறோம் என்று சொல்லும் செய்தியாகவே வாண ஒலி ஒளி வெடிகள்.
அநீதியை நீதியும், அதர்மத்தை தர்மமும் வென்ற நாள் தீபாவளி என்று ஒரு சம்ப்ரதாயமாகவே தீபாவளி காலம் காலமாக நமது தேசத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இருளை விரட்ட ஒளிமயம். மன இருளைப்போக்க கிருஷ்ண பக்தி என்கிற ஒளி என்றுமே இன்பத்தை அளிக்கும். ''
தாத்தா எனக்கு ஒரு ஸ்லோகம் சொல்லித் தரியா?
ஆஹா எங்கே என்னோடு சேர்ந்து சொல்
''ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ''