Post by Amritha Varshini on Oct 20, 2013 19:50:13 GMT 5.5
மகா பெரியவாவின் வாக்கு அவர் மெய்யன்பரின் உயிரை காத்த நிகழ்வு!
இது நடந்து பல வருடங்கள் இருக்கும். திருநெல்வேலியை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முதியவர் அவர். வயது 80 ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. பெரியவாளின் பரம பக்தர். தன்னால் இயன்றபோதெல்லாம் காஞ்சி வந்து மடத்தில் தங்கி பெரியவாளை தரிசித்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அப்படி ஒருமுறை வந்திருந்து மடத்தில் நான்கு நாட்கள் தங்கினார். ஐந்தாவது நாள்… சாப்பிட்டுவிட்டு ஊருக்கு கிளம்ப தயாராகிக்கொண்டிருந்தார். கிளம்பும் முன் பெரியவாளிடம் ஆசி பெற்று ஊர் திரும்ப வேண்டி அவர் முன் போய் நின்றார்.
“என்னப்பா கிளம்பிட்டியா?”
“ஆச்சு சுவாமி”
“சாப்பிட்டாச்சா?”
“அதுவும் ஆச்சு சுவாமி”
“சரி பார்த்து பத்திரமா போ. பசிச்சா கூட வழியில நீ எதுவும் சாப்பிட மாட்டே. தாகம் கீகம் எடுத்தா சோடா எதாச்சும் வாங்கி குடி” என்கிறார்
சரி என்று உத்தரவு பெற்று கிளம்பிவிடுகிறார்.
காஞ்சியில் இருந்து செங்கல்பட்டு வந்து அங்கே திருநெல்வேலி செல்லும் விரைவு பேருந்து ஒன்றை பிடிக்கிறார். பேருந்தில் முன்பகத்திலேயே ஜன்னல் ஒர சீட் கிடைக்கிறது. சுகமான பயணம்.
பேருந்து திருச்சியை அடைந்த தருணம் ஒரு நான்கு இளைஞர்கள் பேருந்தில் ஏறுகிறார்கள். கல்லூரி மாணவர்கள் போல. அவர்கள் ஏறியதிலிருந்து பேருந்தில் ஒரே கலாட்டா தான்.
அடுத்தவர்களை தொந்தரவு செய்யாத வரையில் எதுவும் ஒ.கே தான். ஆனால் அவர்கள் வரம்பு மீறி நடந்துகொள்வதும் கூச்சலிடுவதுமாக இருந்தது. பேருந்தில் உள்ள பெண் பயனிகளை எல்லாம் கூட ஒரு கட்டத்தில் ஜாடை மாடையாக டீஸ் செய்ய ஆரம்பிக்கிறார்கள். பேருந்தில் உள்ள எவருக்குமே அவர்களின் ஆட்டிட்யூட் பிடிக்கவில்லை. அவர்களிடம் எதற்கு பேச்சு கொடுப்பானேன் என்று யாரும் வாயை திறக்கவில்லை.
இதனிடையே பேருந்து மதுரை தாண்டியதும் அருகே ஒரு சாலையோர கடையில் நிற்க, பயணிகள் சிலர் இயற்கை உபாதையை கழிக்க பேருந்தில் இருந்து இறங்குகிறார்கள்.
நம்ம பெரியவருக்கோ ஒரே தாகம். ஜன்னல் வழியே பார்க்க, எதிரே பெட்டிக்கடை ஒன்று தெரிகிறது. அங்கு இவருக்கு முதலில் கண்ணில் படுவது சோடா தான். பெரியவர் தாகம் எடுத்தா சோடா ஏதாவது குடின்னு சொன்னாரே…. அவர் சாதாரணமா எதுவும் சொல்லமாட்டாரே? என்று பலவாறாக நினைத்து தான் கொண்டு சென்ற மஞ்சள் பையை தனது சீட்டில் வைத்துவிட்டு தாக சாந்தி செய்ய கீழே இறங்குகிறார்.
கடைக்கு சென்று சோடா குடித்துவிட்டு மீண்டும் பேருந்தில் ஏறுகிறார்.
இங்கு சீட்டில் இவர் வைத்த மஞ்சள் பையை காணவில்லை. அதற்கு பதில் அந்த நான்கு இளைஞர்களில் இருவர் அந்த சீட்டை ஆக்ரமித்து அமர்ந்திருக்கின்றனர்.
“என்னா பெரிசு? இன்னா தேடறே?”
அடுத்த சில நிமிடங்களில் அவர்களின் கிண்டல் சற்று அதிகமானது.
“என்னோட பை….பையை இங்கே வெச்சிருந்தேன்…. பார்த்தீங்களா…?”
” போய் வெச்ச இடத்துல தேடிப் பாரு….”
“நான் இங்கே தான் வெச்….சேன்….”
“அப்போ என்னா நாங்க எடுத்துட்டோம்னு சொல்றியா?”
“இல்லே… இங்கே தான் நான் உட்கார்ந்திருந்தேன்…”
“என்ன நீ இங்கே உட்கார்ந்திருந்தியா? பெரிசு சரக்கு கிரக்கு அடிச்சிருக்கும்போல… போ… போ… போய் வெச்ச இடத்துல தேடிப்பாரு….’” என்று விரட்ட…. இவருக்கு என்னவோ போலாகிவிடுகிறது.
சக பயணிகளுக்கு உண்மை தெரியும் என்றாலும் எவருக்கும் இவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க எவருக்கும் தைரியம் இல்லை.
இவர்களிடம் வாயை கொடுப்பது வீண் வேலை என்று நினைத்த அந்த பெரியவர் பஸ்ஸில் வேறு எங்காவது பையை வைத்திருக்கிறார்களா என்று தேட ஆரம்பிக்கிறார்.
கடைசி சீட்டுக்கு முந்தைய சீட்டில் இவரது பையை பார்க்கிறார். அங்கு போய் உட்கார்ந்துகொள்கிறார்.
மதுரையை தாண்டி பஸ் நெடுஞ்சாலையில் வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. ஒரு மணிநேரம் கழிந்திருக்கும். திடீரென ‘டமார்’ என்று சப்தம் கேட்கிறது. அசுர வேகத்தில் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பஸ் மீது மோதிவிட முன்பக்கத்தில் இருந்த சீட்டுக்கள் அப்படியே நொறுங்கிப் போய்விடுகின்றன.
பெரியவரை கேலி செய்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிடுகின்றனர். வேறு சிலருக்கு படு காயம்.
பெரியவர் அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்து போய் விடுகிறார்.
மகா பெரியவா ஏன் வழியில் தாகம் எடுத்தா சோடா ஏதாவது குடிக்குமாறு என்று சொன்னார் என்று அப்போது தான் இவருக்கு புரிகிறது.
ஒருவேளை தான் மட்டும் சோடா குடிக்க இறங்காதிருந்திருந்தால் அந்த இளைஞர்கள் இவர் சீட்டில் உட்கார்ந்திருக்க வாய்ப்பில்லை. அங்கு உட்கார்ந்திருந்த இவர் இந்நேரம் பலியாகியிருப்பார்.
ஆனால் அந்த சூழ்நிலையிலும் அந்த இளைஞர்களுக்காக இவர் பரிதாபப்பட தயங்கவில்லை. அவர்களுக்காக அனுதாபப்பட்டு அவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்தித்துக்கொண்டார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது ? சான்றோர்கள் மற்றும் இறைவனின் மெய்யடியார்களின் தரிசனமும் அவர்களது ஆசியும் நம்மையறியாமல் நமக்கு வரவிருக்கும் மிகப் பெரிய ஆபத்துக்களிலிருந்து நம்மை காப்பாற்றும் என்பது தான்.