|
Post by Amritha Varshini on Jan 12, 2024 4:56:07 GMT 5.5
திருப்பள்ளி எழுச்சி - நங்கநல்லூர் J K SIVAN மணிவாசகர்
மார்கழி 27ம் நாள்
7ம் பாடல்.
7. ''அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் இதுஅவன் திருஉரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டு கொண்டு இங்கு எழுந்தருளும் மதுவளர் பொழில்திரு உத்தரகோச மங்கை உள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா! எது எமைப் பணி கொளும் ஆறு? அது கேட்போம் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.!'
இந்த பாடலின் பொருள்:
''பழம் பொருளான பரமசிவன் நினைவு கனியின் சுவை போன்றது எனவும், அமுதத்தை ஒத்தது எனவும் அறிவதற்கு அருமையானது எனவும், அறிதற்கு எளிமையானது எனவும் வாதிட்டு, தேவரும் உண்மையை அறியாத நிலையில் எம்பெருமான் இருப்பார்; இதுவே அப்பரமனது திருவடிவம்; திருவுருக் கொண்டு வந்த சிவனே அப்பெருமான் என்று நாங்கள் தெளிவாகச் சொல்லும் படியாகவே, இவ்வுலகத்தில் எழுந்தருளுகின்ற, தேன் பெருகுகின்ற சோலை சூழ்ந்த திரு உத்தர கோசமங்கையில் எழுந்தருளி இருப்பவனே! திருப் பெருந்துறைக்கு அரசனே! எம் பெருமானே! எம்மைப் பணி கொளும் விதம் யாது? அதனைக் கேட்டு அதன்படி நடப்போம். பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக''
என்று துயிலெழுப்புகிறார் மாணிக்கவாசகர்.
|
|