|
Post by Amritha Varshini on Nov 2, 2023 5:12:45 GMT 5.5
ஆதியிலிருந்தே காஞ்சியில் ‘கடிகாஸ்தானம்’ என்கிற வித்யாசாலைகள் நிறைய இருந்திருக்கின்றன. வடக்கே இருந்த நாலந்தா, தக்ஷசீலம் இவைபோல், இந்த கடிகாஸ்தானங்களும் யூனிவர்ஸிடி போலப் பெரிதாக இருந்திருக்கின்றன. திருவல்லத்துக்கு அருகே உள்ள ஒரு கல்வெட்டில் ‘கடிகை ஏழாயிரவர்’ என்று காண்பதிலிருந்து ஏழாயிரம் வித்யார்த்திகள் இங்கு கல்வி பயின்றதைத் தெரிந்து கொள்ளலாம். மைசூரில், ஷிமோகா ஜில்லாவில், ஷிகார்பூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கே பிரணவேச்ரஸ்வாமி ஆலயத்தில் ஒரு மிகப் பழைய கல்வெட்டு இருக்கிறது. அதில் கி.பி. நாலாம் நூற்றாண்டில் கர்நாடகத்தை ஆண்ட மயூரவர்மன் தன் குருவான வீரசர்மனுடன் ‘பல்லவேந்திரபுரி’யான காஞ்சி கடிகையில் படிக்க வந்த விஷயம் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அரக்கோணத்தருகே வேலூர் பாளையத்தில் உள்ள ஒரு ஸம்ஸ்கிருதக் கல்வெட்டு, இன்று லோகப் பிரசித்தமாயிருக்கிற கைலாஸநாதர் கோயிலை நரசிம்மவர்மா என்கிற ராஜசிம்ம பல்லவன் கட்டினான் என்று சொல்வதற்கு முன்பாக, அவன் காஞ்சிபுரத்திலிருந்த பழைய கடிகையை மீண்டும் நிறுவியதை முக்கிய விஷயமாகச் சொல்கிறது. அப்பர் சுவாமிகளும் “கல்வியில் கரையில்லாத காஞ்சி” என்கிறார்.
|
|