|
Post by Amritha Varshini on Aug 23, 2022 5:17:40 GMT 5.5
சாஸ்திரத்திலே “இந்த மாதிரி இருக்க வேண்டும், இந்த மாதிரி இருக்கக் கூடாது” என்று சொல்லி இருக்கிறது. இந்த விதி நிஷேதங்களை நாம் அனுஷ்டித்தால் நமக்குத்தான் சிரேயஸ் ஆகும். இதை உதாஸீனம் பண்ணினால் நமக்குத்தான் அசிரேயஸ், நாம் ஆசரிக்காமல் விட்டால் சாஸ்திரத்திற்கோ அல்லது சாஸ்திரத்தை உபதேசித்த ஈச்வரனுக்கோ ஒரு நஷ்டமும் இல்லை. அதே மாதிரி நாம் பள்ளியில் படிக்கிறோம். நம் ஆசிரியர், “நன்றாக படி, இந்த மாதிரி இருக்காதே; இந்த மாதிரி இரு” என்று சொல்லிய வண்ணம் செய்தால் நாம் பரீட்சையில் பாஸ் ஆகி அடுத்த வகுப்பிற்கு போவோம். அவர் சொன்ன மாதிரி செய்யவில்லையெனில் நாம் பரீஷையில் ஃபெயில் ஆகி அங்கேயே உட்கார்ந்திருப்போம். நாம் அவர் சொன்ன மாதிரி செய்தாலும் செய்யாவிட்டாலும் அவருக்கொன்றும் ஆகப்போவது இல்லை. அவருடைய காரியம் அவருக்கு நடந்து கொண்டே இருக்கிறது. அதேபோல், முன்னோர்கள் நமக்கு செய்த உபதேசங்கள் நம்முடைய சிரேயஸ்ஸிற்காக செய்த உபதேசங்களே ஆகும். அந்த உபதேசங்களை ஆசரிக்க வேண்டியது நமக்கு அவசியம்.
|
|