|
Post by Amritha Varshini on Apr 25, 2022 5:00:14 GMT 5.5
வேதம்
வேத பாஷ்யம்
நாம் ஒரு விவாஹம் செய்கிறோம், உபநயனம் செய்கிறோம், ஸீமந்தம் செய்கிறோம் என்றால், அதற்கு இரண்டு நாள் முந்தி பாஷ்யக்ஞரான வேத பண்டிதரை வரவழைத்து, அதிலே பிரயோகமாகிற மந்திரங்களுக்கு என்ன அர்த்தம், சடங்குகளுக்கு என்ன தாத்பரியம் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவெண்டும். கர்மாவைப் பண்ணுகிறபோதே கேட்டுத் தெரிந்து கொள்வதென்றால் பொழுது இருக்காது. முன்னாடியே தெரிந்து கொண்டால்தான் மனஸிலும் ஊறும்; கர்மா பண்ணுகிறபோது அதில் மனஸாரப் பிடிப்பும் இருக்கும்.
இப்போது நடக்கும் கல்யாணங்களில் ஒரு மாஸத்துக்கு முன்கூட அவகாசம் இருப்பதில்லை. யார் Band வைக்கலாம், யார் டான்ஸ் வைக்கலாம், எப்படி ஊர்வலம் விடலாம் என்று ஏற்பாடு பண்ணுவதற்கே காலம் போதமாட்டேன் என்கிறது! எதுதான் இத்தனைக்கும் உயிர்நிலையோ, எதை வைத்துதான் கல்யாணமோ அந்த மந்திரங்களையும், அவற்றைச் சொல்லி நடத்தி வைக்கும் வைதிகர்களையுந்தான் கடைசி பக்ஷமாக வைத்திருக்கிறோம்! யாருக்காவது சிரத்தை ஏற்பட்டு, அவகாசமும் கிடைத்து, தான் செய்யவேண்டிய கர்மாக்களின் மந்த்ரார்த்தங்களை தெரிந்து கொள்ளப் பிரியப்பட்டால், அதைச் சொல்லி விளக்குவதற்குச் சிலரையாவது தயார்ப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில்தான் வேதபாஷ்யம் சொல்லிக் கொடுத்து பரீக்ஷைகள் நடத்துகிறோம்.
(தெய்வத்தின் குரல்)
|
|