Post by jksivan on Aug 14, 2013 20:11:20 GMT 5.5
100. "தெவிட்டாத விட்டலா"
"தெவிட்டாத விட்டலா" என்று ஏன் உன்னை மனமார, வாய் மணக்க, அழைக்கிறோமே எதற்காக?
கிருஷ்ணனாக உன்னைப்பார்த்ததும், ரசித்ததும் உன்னைக் காதார கேட்டதும் அலுக்கவில்லை. அதில் இல்லாத ஒரு சுகம் உன்னை விட்டலனாக பார்க்கும்போது கிடைத்ததே, அது தான் அலாதி சுகம். நீ யுத்தம் புரியவில்லை. நாடாள வில்லை. சங்கு சக்ரம் ஏந்தவில்லை. குழல் ஊத வில்லை. இடுப்பில் கையுடன் உன்னை எம்மில் ஒருவனாக, தோள் மேல் கை போட்டுக்கொண்டு நண்பனாக, வேலைக்காரனாக, வியாபாரியாக, பெண்ணாக, பணியாளாக, ஏன். இந்த 100 கதைகளிலும் மயக்கினாய்? எளிமையில் எளிமையாக அன்பின் உறைவிடமாக அன்றும் இன்றும் என்றும் எம்மோடு வாழ்ந்து எம்மை உன்னோடு இணைத்துக்கொள் விட்டலா.
நூறு கதையிலும் இனித்த "தெவிட்டாத விட்டலா" உன் பெருமை வெறும் நூறில் அடங்குமா? இந்த கிணற்றுத் தவளை தாண்ட முடிந்த தூரம் அவ்வளவு தான்! கடலை எவ்வாறு கடப்பேன்? பல ஜன்மங்களில் இதைத் தொடர அருள்செய். முயன்று பார்க்கிறேன்.
இந்த நூறு கதைகளிலும் வந்த விட்டலன் எழுத்தில் தான் நிறைவு பெறுகிறான். எண்ணத்தில் அல்ல. மெயிலில் நின்று போனாலும் மனத்தில் தொடர்கிறான். புத்தகத்தில் வருவான்,
உங்களில் சில அன்பர்கள் முன்வந்தால். கிருஷ்ணன் அப்படித்தான் 31.8.2013 வெளிவருகிறான். இவை காசுக்கோ, பேருக்கோ ஆசைப்பட்டு எழுதியவை அல்ல. வருங்கால வாரிசுக்கு நமது பண்டைய வாழ்க்கை, நம்பிக்கை, வழிபாடு, மகான்களின் வரலாறு போன்றவை சிறு கதைகளாக அடங்கிய இலவச புத்தகமாக பள்ளிக் குழந்தைகளுக்கு அளிக்கவே. இந்த முயற்சி விட்டலன் அருளால் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் 100 வது கதைக்குள் நுழைவோம்
****.
ஒன்றாவது கதையில் வந்த குதிரை வீரன் சிவாஜி காத்திருந்து நூறாவதில் வருகிறார் .
ஆரம்பமே எதோ ஒன்றின் முடிவு தானே, என்பதும், ஒன்றின் முடிவில் தான் நிச்சயம் மற்றொன்று ஆரம்பம் என்ற தத்துவத்தை புரிய வைக்கத்தான் சிவாஜி முயல்கிறாரோ?
***
முகலாய பேரரசு சிவாஜியை சும்மா இருக்க விடவில்லை. எத்தனையோ எதிர்ப்புகள். ஒவ்வொன்றையும் சாமர்த்தியமாக சமாளித்தார். ஒரு தடவை ஒரு படையை வென்று காட்டுக்குள் திரும்பும்போது களைத்து, ஒரு ஆற்றங்கரையில் இளைப்பாறினார். ஆற்றில் அரச இலைகள் மிதந்து போவதைப்பார்த்த சிவாஜி அவற்றில் ஏதோ எழுதப் பட்டிருப்பதைப் பார்த்து ஒன்றை எடுத்துப் படித்தார். ஒவ்வொரு இலையிலும் சிறந்த வாக்யங்கள் எழுதப்பட்டிருந்தது . ஆர்வத்தோடு ஆற்றோரமாகவே மிதக்கும் இலைகளைத் தொடர்ந்து சிவாஜி சென்று சஜ்ஜன் காட் என்ற இடம் வந்து சேர்ந்தது. அங்கு ஒரு சிறிய ஆஸ்ரம குடில். அதில் சுவாமி சமர்த்த ராமதாசர் அமர்ந்திருந்தார். சிவாஜி அவரைக் கண்டதும்
"வா சிவாஜி வா, உனக்காகவே நான் இங்கு காத்திருந்தேன். நீ ரொம்ப களைத்து முகம் வாடியிருக்கிறது. கை கால் கழுவி உடனே சிறிது ஆகாரம் சாப்பிடு. பிறகு பேசுவோம் "
"சுவாமி நான் தனியனாக வரவில்லை ஒரு படையுடன் எதிரிகளைச் சந்தித்து அவர்களை முறியடித்து விட்டு வந்திருக்கிறேன். அவர்களை ஊரில் காக்க வைத்துவிட்டு நான் மட்டும் உண்பது எப்படி?
"நீ ஒரு மகாராஜா, சுத்த வீரன், நீ தனியாக வரமாட்டாய். உன்னுடன் ஒரு சிறிய படையோ, வீரர்கள் கூட்டமோ எப்போதும் இருக்கும் என எனக்குத் தெரியாதா? அனைவருக்குமே இங்கு உணவிருக்கிறது.. போய் அவர்களையும் அழைத்து வா1"
சிவாஜி திகைத்தார். இந்த சிறிய குடிலில் எப்படி அனைவருக்கும் உணவு செய்திருக்கிறார்கள். யாருமே காணோமே உள்ளே? என்ன உணவு? எப்படி எல்லோருக்கும்?"
"ஒருவரும் இல்லாமல் தன்னந்தனியே இந்த குருநாதர் எப்படி எனக்கும் என் சேனைக்கும் ஆகாரம் தரப்போகிறாரோ தெரியவில்லையே? . குருநாதரின் சொல் தட்டாமல் நடப்பதே என் போன்ற சீடனின் கடமை" என்று உணர்ந்து சேனை சகிதம் வந்து சேர்ந்தார். அவர் முகத்தில் இருந்த கவலையை நொடியில் ராமதாசர் புரிந்து கொண்டார்.
"சிவாஜி, அதோ எதிரில் இருக்கும் சிறு மலைக் குகை வாயிலில் ஒரு பெரிய கல் மூடி யிருக்கிறதே, அதைக் கொஞ்சம் நகர்த்தேன் "
சிவாஜிக்கு ஆச்சார்யனின் போக்கு பிடிபடவில்லை. இருப்பினும் சொன்ன வண்ணமே செய்தார். மாவீரன், பலசாலி, சிவாஜியாலேயே அந்த கற்பாறையை நகர்த்த முடியவில்லை. எனினும் முயற்சி செய்தார். குகை வாசல் உள்ளே வெளிச்சம் பரவியது. என்ன ஆச்சர்யம்! பாத்திரங்களில் வித விதமான அன்ன ஆகாரங்கள், பானங்கள் பழங்கள், பதார்த்தங்கள், சுவையான பக்ஷணங்கள் எல்லாம் எதேஷ்டமாக கண்ணில் பட்டது. அதோடு யானை, குதிரை, பசுக்கள் போன்றவைக்கும் தேவையான பல்வகை ஆகாரங்களும் இருந்தது.
சிவாஜிக்குத் தன் கண்ணையே நம்பமுடியவில்லை. ஆச்சார்யனைப்பார்த்தார். அவரோ முதலில் எல்லோரும் வயிறார உண்ண வேண்டும் என்று கட்டளையிட்டார். விருந்து முடிந்தது.
"என்ன சிவாஜி என்னைக் கண்கொட்டாமல் பார்க்கிறாய். உன் முகத்தைப்பார்த்தால் நீ ஏதோ என்னை கேட்க விழைகிறாய் போல் தோன்றுகிறதே"
"குருநாதா, நீங்கள் எவ்வாறு நான் இங்கு சேனையோடு வரப்போகிறேன் என்று அறிந்து எப்படி என் சேனை முழுவதற்கும் அறுசுவை உண்டி படைத்து அருளினீர்கள் என்று தெரிந்து கொள்ள எனக்கு அடக்க முடியாத ஆவலாக உள்ளதே?"
"இதற்கு எனக்கு விடை தெரியாதப்பா. உனக்கு உண்மையிலேயே இதற்கெல்லாம் விடை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தால் இங்கிருந்து தேஹூ செல்லும் பாதையில் பல காதங்கள் சென்றால் அங்கு துக்காராம் என்று ஒரு மகான் இருக்கிறார், அவரைப்போய் கட்டாயம் பார். அவர் உனக்கு விடை சொல்லலாம்.
எத்தனையோ வேலைக்கு நடுவில் சிவாஜியால் தேஹூ செல்லவோ துக்காராமை தரிசிக்கவோ முடியவில்லை. பலமாதங்களுக்கு பிறகு ஒருநாள் தேஹூ சென்றார். அவர் தேஹூ சென்று துக்காராம் மகாராஜின் சிறிய மண் குடிசையால் ஆன ஒரு ஓலைக்குடிசை ஆஸ்ரமத்தை அடைந்தார். துக்காராம் மண் திண்ணையில் அமர்ந்து நாமசங்கீர்த்தனத்தில் ஆழ்ந்திருந்தார். தனது படைவீரர்களை தூரத்தில் நிறுத்திவிட்டு தனித்து வந்த சிவாஜி துக்காராமை வணங்கினார். அவர் சிவாஜி மகாராஜா என்று அறிந்து மகிழ்ந்து இந்த கொளுத்தும் மதிய வெயிலில் இளைத்து களைத்து வந்திருக்கிறீர்களே. வாருங்கள் சிறிது விட்டல பிரசாதம் அருந்தி ஓய்வெடுங்கள்"|
"குரு மகாராஜ், எனது வீரர்கள் தூரத்தே நிற்கிறார்களே. அவர்களை விட்டு நான் எவ்வாறு உணவருந்த முடியும்?"
""நான் உங்களுக்கு சொன்னது அவர்களையும் சேர்த்துத்தான். ""
ஏற்கெனவே பட்ட அனுபவத்தில் சிவாஜி வியந்து வீரர்களையும் அழைக்க, அனைவருக்கும் ஆளுக்கு ஒரு துண்டு ரொட்டி விட்டலன் அருளால் துக்காராம் கொடுக்க அவர்களுக்கு பெரிய விருந்து உண்டதைப் போன்று வயிறு நிரம்பியது. சிவாஜிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை ஓலை குடிசை. நக்ஷத்திர பங்களா. எங்கு பார்த்தாலும் கூரையில் ஓட்டை . அதன் வழியாக சூரிய கிரணங்கள் உள்ளே எங்கும் வெளிச்சத்திட்டுகளாக. சட்டையில்லாத கந்தல் துணியில் குழந்தைகள். சட்டி பானைகள், கிழிசல் துணியும் பாயும்.! . வறுமையின் மொத்த உரு! ஆனால் யானை குதிரை காலாட்படை முதலாக எண்ணற்றோருக்கு அன்னதானம்! எப்படி இதெல்லாம்? முன்பு சமர்த்த ராமதாசிடம் கேட்ட அதே கேள்வியைக் கேட்டார் சிவாஜி துக்காராமிடம் .
"மகாராஜ், எனக்கு என்ன தெரியும்? இதெல்லாம் விட்டலன் அருள். அவனிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அவன் பார்த்துக்கொள்வான் என்ற அசையாத நம்பிக்கை. விவரம் சொல்லத் தெரியவில்லை. இதைத் தெரிந்துகொள்ள நீங்கள் சஜ்ஜன்காட் சென்று மகான் சமர்த்த ராமதாசைக் கேட்டால் அவர் புரியும்படி யாக சொல்வார்.""
முடிவு ஆரம்பமாவதை சிவாஜி புரிந்துகொண்டார்