Post by Amritha Varshini on Nov 28, 2014 6:01:34 GMT 5.5
திருநீலகண்ட நாயனார் புராணம்
அளவிலா மரபின் வந்த மட்பல மமுதுக் காக்கி
வளரிளந் திங்கட் கண்ணி மன்றுளா ரடியார்க் கென்றும்
உளமகிழ் சிறப்பின் மல்க வோடளித் தொழுகு நாளின்
இளமைமீ தூர வின்பத் துறையினி லெளிய ரானார் - பெரிய புராணம்
சிதம்பரத்திலே குயவர் குலத்திலே, பொய் கூறுதல் சிறிதுமின்றித் தரும நெறியிலே வாழ்கின்றவரும், இல்லறத்தில் இருப்பவரும் ,இறைவனுடைய அடியார்களிடம் எல்லையில்லா அன்புடையவருமாக ஒரு சிறந்த தொண்டர் இருந்து வந்தார். அவர் தம் குலத்துக்கு ஏற்ப, மண்ணால் ஆன கலயங்கள் செய்து அதைவிற்றுப் பிழைப்பு நடத்தி வந்தார்.
இருப்பினும், சிவனடியார் உணவு ஏற்று உண்ணும் திருவோடுகளைச் செய்து, அடியார்களுக்கு வழங்கும் தொண்டும் புரிந்துவந்தார். அவர், ஆதி காலத்தில் பரமசிவன், திருப்பாற்கடலில் அமுது உண்டாவதற்குமுன் எழுந்த ஆலகால விஷத்தை உலகம் உய்யும் பொருட்டு உண்டபொழுது , அவருடைய கண்டமானது ( கழுத்து ) அவர்தம்மை அடைக்கலம் புகுந்தோரின் இடர்களை நீக்கியருளுவார் என்பதை உலகத்தார் அறியும் பொருட்டு, அதற்கு அறிகுறியாய் நஞ்சு உள்ளே புக ஒட்டாது தடுத்துத் தானே தரித்துக் கொண்டது என்று அக்கருணையை நினைந்து நினைந்து அக் கடவுளுடைய கண்டத்தை “திருநீலகண்டம்” என்று எப்பொழுதும் சிறப்பித்துப் பாராட்டிக் கொண்டிருப்பார். அதனால் அவருக்கு “ திருநீலகண்ட நாயனார்” என்னும் பெயர் உண்டாயிற்று.
சேக்கிழார் பெருமான் திரு நீலகண்டத்தைப் பற்றி மிகவும் சிறப்பித்துக் கூறுகிறார்.,
புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சுண்ண யாஞ்செய்
தவ நின்று தடுத்தது என்னத் தகைந்துதான் தரித்தது என்று
சிவன் எந்தைக் கண்டந் தன்னைத் திரு நீலகண்டம் என்பர்
இத்தகைய பக்தர், இளமையின் மிடுக்கால், ஒருநாள் ஒரு விலைமகளிடம் சென்றுவிட்டு வீடு திரும்ப, கற்பிலே சிறந்த அவர் மனைவியார் இதனை அறிந்து, அவரிடம், "திருநீலகண்டத்தின் மீது ஆணை. இனி எம்மைத் தீண்டக் கூடாது “ என்று கூறினாள். அதைக் கேட்ட நாயனாருக்கு நல் உணர்வு உண்டாகி , தாம் செய்த பிழையை நினைந்து இரங்கினார். “இனி நான் உன்னைத் தீண்டுவதில்லை. எம்மைத் தீண்டக்கூடாது எனப் பன்மையில் உரைத்ததினால், பெண் குலத்தினர் யாரையுமே தீண்டமாட்டேன் “ என்று உறுதி பூண்டார்.
இல் வாழ்க்கையில் மற்ற அறம் யாவும் தடையின்றி நடைபெற, கணவனும் மனைவியும் இன்பம் துய்க்காது பலகாலம் வாழ்ந்து, முதுமை அடைந்தனர். ஆனால் சிவ பக்தியில் ஒரு குறையுமின்றிப் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு அவர்கள் இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டபோது, இறைவன் அவர்களுடைய பெருமையை உலகுக்கு வெளிப்படுத்த எண்ணி, ஒரு சிவயோகி வடிவங்கொண்டு கையில் ஓடு ஒன்று ஏந்தி, திருநீலகண்டரை நாடி வந்தார்.
திருநீலகண்டரும் அந்தச் சிவனடியாரை எதிர்கொண்டு வரவேற்று , ஆசனத்தில் இருத்தி, நெறிப்படி பூஜை செய்து வணங்கி எழுந்து, பல உபசாரங்கள் செய்தார்.
பின்பு , “ சுவாமி ! அடியேன் தேவரீருக்குச் செய்ய வேண்டிய குற்றேவல் யாது ? “ என்று வினவ , அடியாராக வந்த சிவபெருமானும் , தன் கையில் உள்ள ஓட்டைக் காட்டி, "இந்தத் திருவோடு கிடைப்பதற்கு அரிதானது. இது விலை மதிப்பிடற்கரியது. இதுபோன்ற ஒன்றை மூவுலகத்திலும் பெற இயலாது, தன்னிடத்திலே சேர்ந்தபொருட்களெல்லாவற்றையும் சுத்தி செய்வதாகும் . இப்படிப்பட்ட மேன்மை பொருந்திய திருவோட்டை உம்மிடம் வைத்துச் செல்கிறேன். மீண்டும் நான் வந்து கேட்கும் பொழுது கொடுத்தால் போதும்" என்று கூறினார். நாயனாரும் அப்படியே செய்வதாகக் கூறி , அடியவரை வணங்கி , அவ்வோட்டை வாங்கிக் கொண்டு , வீட்டிலே பாதுகாப்பான இடத்திலே வைத்து விட்டு, சிவனடியாருக்கு விடைகொடுத்து வீடு திரும்பினார்.
நெடுநாட்கள் சென்றபின், சிவபிரான் தாம் திருநீலகண்டரிடம் கொடுத்த ஓட்டை அதை வைத்த இடத்தினின்றும் மறையச் செய்தார். பின் அவரிடம் வந்து, "நாம் முந்நாளிலே உம்மிடத்திலே வைத்துவிட்டுப்போன திருவோட்டை இப்பொழுது தாரும் “ என்றார்.
“சாலநாள் கழிந்த பின்பு தலைவனார்தாம் முன் வைத்த
கோலம் ஓர் ஓடுதன்னைக் குறி இடத்து அகலப் போக்கிச்
சீலம் ஆர் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர் தம்பால்
வாலிது ஆம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார்.”---
நாயனாரும் திருவோட்டை வைத்த இடத்தில் போய்ப் பார்த்தார். எங்கு தேடியும் அதைக் காணாமல் பதை பதைத்து நின்றார். சிவனடியாரும், "நொடிப்பொழுதில் வருவேன் என்று சொன்னவன் ஏன் நேரம் தாழ்த்துகிறாய்?" என்று சினம் கொண்டார்.
திருநீலகண்டரும், "சுவாமி! தேவரீர் என்னிடம் தந்த திருவோட்டை வைத்த இடத்திலும் , மற்ற எல்லா இடங்களிலும் தேடிக் காணேன். பழையதாகிய அந்தத் திருவோட்டைக் காட்டிலும் நான் தங்களுக்குப் புதிதாக ஒரு திருவோடு தந்துவிடுகிறேன். அதை ஏற்றுக் கொண்டு அடியேன் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும்" என்று கெஞ்சினார். சிவனடியார் அவர் கூற்றுக்குச் சம்மதியாது, "அப்பொழுதே அதன் அருமையைச் சொன்னேனே ! நான் உன்னிடத்திலே வைத்த அடைக்கலப் பொருளை நீ கவர்ந்துகொண்டு, இப்பொழுது இல்லையென்கிறாயா? எனக்கு அதுதான் வேண்டும்.” என்று தீர்மானமாகக் கூறினார்.
“சுவாமி! தேவரீர் தந்த ஓட்டை நான் கவர்ந்தவனல்லன். அடியேனிடத்தே களவில்லாமையை, எப்படி தங்களுக்குத் தெரியப்படுத்துவேன்? தாங்களே சொல்லும் “ என்றார்.
உடனே சிவனடியாரும் “ அப்படியானால் நான் அதை எடுக்கவில்லை என்று சத்தியம் செய்து தருவீரா ? “ என்று கேட்டார்.
“செய்து தருகிறேன்" என்றார் திருநீலகண்டர். “சரி! அப்படியானால் உம்முடைய மகன் கையைப் பிடித்துக் கொண்டு குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்து தாரும்!" என்று விடாப்பிடியாகக் கூறினார் அடியார் வேடத்திலிருந்த இறைவன் .
திருநீலகண்டரும் , "அப்படிச் சத்தியம் செய்து தருவதற்கு எனக்கு மகன் இல்லையே ! யாது செய்வேன் ? நீரே கூறும்" என்றார்.
“அப்படியாயின் உன் மனைவியின் கையைப் பற்றி , முழுகிச் சத்தியம் செய்து தா" என்றார் மாயம் வல்ல மகேசன் .
இப்போது நாயனாருக்கு தர்மசங்கடமான நிலை உண்டாயிற்று. தம் மனைவியைத்தாம் பல நாட்களாகத் தீண்டுவதில்லை என்பதை வெளியிடுவதா என்று சிந்தித்து , கடைசியில் ,“அவ்வாறு செய்வதற்கில்லை" என்று விடையளித்தார்.
“நீ வேண்டுமென்றே ஓட்டை ஒளித்து வைத்துவிட்டு சத்தியம் செய்ய மறுக்கிறாய். இந்த அக்கிரமத்தை தில்லைவாழ் அந்தணர்களுடைய தரும சபையில் நான் முறையிடுவேன்" என்று கூறி திருநீலகண்ட நாயனாரையும் அழைத்துக் கொண்டு சென்று அவையினர் முன் தன் வழக்கை இறைவன் எடுத்துரைத்தான். “இந்தக் குயவன் தன்னிடத்திலே நான் வைத்திருக்கும்படிக் கொடுத்த ஓட்டைத் தர மறுக்கின்றான். அப்படி அவன் அதை இழந்தானாயின், தன் மனைவியின் கைபிடித்துக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்து தருகின்றவனாகவும் இல்லை" என்றார்.
அவையவர்கள் “திருநீலகண்டரே !,நடந்த நிகழ்ச்சியை மறைக்காமல்சொல்லவும் “ என்று வற்புறுத்தினர்.
உடனே திருநீலகண்டரும், " சுவாமிகாள் ! இவர் தந்த திருவோடு நான் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்தினின்றும் மறைந்துபோய்விட்டது. நான் எங்கு தேடியும் அதைக் காணோம் . இதுதான் நடந்தது." என்றார்.
“அப்படியென்றால் உம் மனைவியின் கையைப் பற்றிக்கொண்டு, குளத்தில் மூழ்கி எழுந்து, சத்தியம் செய்து கொடுப்பதுதானே முறை?" என்றனர் அந்தணர்கள். நாயனாரும் திருப்புலீச்சரத்துக்கு அருகிலுள்ள திருக்குளத்திற்குச் சென்று ஒரு மூங்கில் தடியை எடுத்து, ஒரு பக்கத்தைத் தாம் பிடித்துக் கொண்டு, மற்றொரு பக்கத்தைத் தம் மனைவியாரைப் பற்றிக் கொள்ளச் செய்து, குளத்தில் மூழ்கப்போனார்.
அப்பொழுது வழக்கிட்ட மறை முனிவன் , “இது தகாது! கையைப் பற்றிக் கொண்டு மூழ்கினால்தான் நான் நம்புவேன் “ என்று சொன்னார். இந்த நிலையில் தம்முடைய விரதத்தை யாவரும் கேட்கச் சொல்வதைத்தவிர வேறு வழியில்லை எனக் கருதி , திருநீலகண்ட நாயனார் அந்த வரலாற்றை ஆதிமுதல் கூறிவிட்டுக் குளத்தில் மூழ்கினார்.
வாவியின் மூழ்கிஏறும் கணவரும் மனைவியாரும்
மேவிய மூப்பு நீங்கி விரும்பு உறும் இளமை பெற்றுத்
தேவரும் முனிவர் தாமும் சிறப்பொடு பொழியும் தெய்வப்
பூவின் மாமழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற
என்னே அதிசயம்! மூழ்கி எழுந்த அளவில் கணவன் , மனைவி இருவரும் மூப்புத்தன்மை நீங்கப் பெற்று, இளமைப் பருவத்தை எய்தினர். யாவரும் இவ்வதிசயத்தைக் கண்டு மகிழ்ந்து அவரைப் போற்றினர். பூமாரி பொழிந்தது. சிவனடியாராக வந்த சிவபெருமான் தன் அடியார் கோலத்தை மாற்றி , பார்வதி தேவியுடன் விடையின் மேல் எழுந்தருளிக் காட்சி கொடுத்தான்
கண்டனர் , கைகள் ஆரத் தொழுதனர்; கலந்த காத
லண்டரும் ஏத்தினார்கள்; அன்பர்தம் பெருமை நோக்கி
விண்டரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார்தம்மைத்
தொண்டரும் மனைவியாருந் தொழுதுடன் போற்றி நின்றார்
பின்பு திருநீலகண்ட நாயனாரும், அவரது மனைவியாரும் இளமை நீங்காது பலகாலம் இவ்வுலகில் வாழ்ந்து தொண்டு புரிந்து ,அப்பால் இறைவனுடைய திருவருளைப் பெற்று பேரின்ப வாழ்வடைந்தனர்!
விறலுடைத் தொண்டனாரும் வெண்ணகைச் செவ்வாய் மென்றோ
ளறலியற் கூந்த லாரா மனைவியும் மருளி னார்ந்த
திறலுடைச் செய்கை செய்து சிவலோக மதனையெய்திப்
பெறலரு மிளமை பெற்றுப் பேரின்ப முற்றாரன்றே !
அயல் அறியாத வண்ணம் அன்னலார் ஆணையுய்த்த
மயலில் சீர்த் தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்திப்
புயல் வளர் மாடநீடும் பூம்புகார் வணிகர் பொய்யில்
செயல் இயற்பகையார் செய்த திருத்தொண்டு செப்பலுற்றேன்.
Article by Smt Uma Balasubramanian (uma_kbs@yahoo.com)