Post by Amritha Varshini on Nov 25, 2013 6:13:01 GMT 5.5
”காஞ்சிபுரத்தில் ஓர் அதிகாரி இருந்தார். அவர் வேற்று மதத்தவர் என்றாலும், மகாபெரியவாமீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர்.
ஒருமுறை, அவரின் மனைவிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. வயிற்றில் ஒரு கட்டி; அதை ஆபரேஷன் செய்து அகற்றினால்தான் உயிர்பிழைப்பார் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். துக்கம் தாளாமல், மகாபெரியவாளைத் தரிசிக்க வந்தார் அவர். அன்று மகா பெரியவா காமாட்சியம்மன் கோயிலில் இருந்தார். அதிகாரியும் கோயிலுக்குச் சென்றார். அங்கே சரியான கூட்டம். பெரியவா வாயே திறக்கலை. அவர் கையில் ஏலக்காய் மாலை ஒன்று இருந் தது. அதிகாரியை அருகில் அழைத்து, கையை நீட்டச் சொல்லி அந்த ஏலக்காய் மாலையைக் கொடுத்துவிட்டு, கையைத் தூக்கி ஆசீர்வதித்தார்.
அதிகாரியும் நம்பிக்கையுடன் திரும்பினார். அதன்பிறகு, மறுபடியும் தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அந்த அதிகாரி. பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள், ‘கட்டி இருந்ததாகவே தெரியலையே?! ஆபரேஷன் எதுவும் வேண்டாம்’ என்று கூறிவிட்டார்கள். அதிகாரிக்குத் தெரியும்… இந்த அற்புதம் மகா பெரியவாளின் அனுக்கிரகத்தால் நிகழ்ந்தது என்று. இன்றைக்கும் அந்த ஏலக்காய் மாலையைப் பத்திரமாக வைத்திருக்கிறார் அந்த அதிகாரி.
ஒருமுறை, அவரின் மகனுக்கு பரீட்சை ரிசல்ட் வந்தது. பேப்பர்ல தன்னோட நம்பரை சரியா பார்க்காம, ஃபெயிலாயிட்டோம்னு நினைச்சு, வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டான். அவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்போதும் மகாபெரியவாளிடமே வந்து சரணடைந்தார் அந்த அதிகாரி. ‘பையன் கிடைச்சுடுவான். கவலைப்படாதே!’ என்று அருளினார் மகா பெரியவா. பையன் எங்கேயெல்லாமோ சுத்திவிட்டு, மூணு மாசம் கழிச்சு வீடு வந்து சேர்ந்தான். அதிகாரிக்குச் சந்தோஷம் தாளலை. ஓடி வந்து மகா பெரியவாகிட்ட விஷயத்தைச் சொல்லி, கண்கள் கசிய வணங்கிச் சென்றார். பரீட்சையில் அவன் நல்ல மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றிருந்தது கூடுதல் சந்தோஷம்!
மகா பெரியவாளின் பரிபூர்ண அனுக்கிரகம் இருந்தா போதும்.. எல்லாம் நல்லதாகவே முடியும்.”