Post by J.K. SIVAN on Aug 8, 2013 18:43:54 GMT 5.5
99. "உள்ளக் காய்ச்சல், உடல் எரிச்சல்"
துக்காராம் தன்னுடைய அபங்கங்களை எல்லாம் இந்த்ரியாணி நதியில் ஒட்டு மொத்தமாக போட்டு விட்டார். அவை அவரது ஒரே உடைமை இந்த உலகில், ஏன் அவருயிர் என்று கூட சொல்லலாம். விட்டலன் மேல் அன்பும் பாசமும் பக்தியும் கலந்து உள்ளம் வடித்த தேன் துளிகள் அவருடைய அபங்கங்கள் . ராமேஷ்வர் பட் என்ற பிராமணரால் வந்த துன்பம் இது. பின்னால் விட்டலனே ஆற்றில் இறங்கி அவற்றை ஜாக்ரதையாக மீட்டு தன தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அவை துக்காராமிடமே வந்து சேர்ந்தது. பதிமூன்று நாள் அன்ன ஆகாரமின்றி வீடு திரும்பாமல் இந்த்ரியாணி நதிக்கரையிலே வெறித்துப் பார்த்துக் கொண்டு துக்காராம் அமர்ந்திருந்தார். எதனால் இந்த துன்பம் ஞாபகம் இருக்கிறதா?
"நீ ஒரு படிக்காத முட்டாள். சம்ச்க்ரிதம் அறியாத நீ இதிகாசங்களையும் பாகவதத்தையும் அவை எழுதப்பட்ட, சொல்லப்பட்ட, சம்ச்க்ரிதத்திலேயே சொல்லி விளக்காமல் ஒரு மிலேச்ச பாஷையான மராத்தியில் எழுதுவதோ சொல்வதோ பிரவசனம் செய்வதோ மகா பாவம். உடனே இதெல்லாம் நிறுத்து. உன் அபங்கங்களை எல்லாம் அழித்து விடு" என்று பொறாமையினால் ராமேஷ்வர் பட் சொல்ல, பாவம், அதை உண்மை என நம்பி அவ்வாறே செய்துவிட்டாரே துக்காராம்!.
அதற்கப்பறம் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உங்களுக்கு இந்த 99வது பாண்டுரங்கன் கதை.
ராமேஷ்வர் பட் படித்தவன், பிராமணன். ஏட்டு சுரைக்காய் கறிக்குதவ வில்லையே! யாரும் அவன் ப்ரவசனத்தையோ, பிரசங்கத்தையோ பாண்டித்யத்தையோ லட்சியம் பண்ணவில்லை. கிராமம் முழுதும் துக்காராம் அபங்கங்களையே நாடுவது, அவரது பக்தி பூர்வ பிரசங்கங்களுக்கு திரண்டு செல்வது, அவனை தூக்கமின்றி செய்தது, பொறாமை கொள்ள வைத்தது அல்லவா?
அந்த ராமேஷ்வர் பட் ஒரு நாள் வெளியூர் புறப்பட்டான். வெகுதூரம் நடந்தவன் கடும் வெயிலில் மாட்டிக்கொண்டான். அனல் காற்று, புழுதியுடன் அவன் மேல் நெருப்பாக வீசி, ஏற்கனவே களைத்திருந்தவனுக்கு எங்காவது நிழலில் சிறிது களைப்பாற, குளிர்ந்த நீர் எங்காவது குடிக்கக் கிடைக்குமா என்று தேட வைத்தது. வாகோலி என்கிற கிராமத்துக்கு வந்து சேர்ந்தான். கால்கள் ரெண்டும் அப்பளமாக சுடுமணலில் கொப்புளித்திருந்தது. அங்கு ஒரு பெரிய தோட்டம் கண்ணில் பட்டது. ஏதோ ச்வர்கத்தையே பார்த்தவன் போல் ஆனான் ராமேஷ்வர் பட். மெதுவாக அருகில் சென்றான். கதவு திறந்திருந்தது. உள்ளே ஒரு அழகான தாமரைக்குளம். தெளிந்த குளிர்ந்த நீர்.
அந்த தோட்டம் அனகட்ஷா என்ற முஸ்லிம் பக்கிருக்கு சொந்தமானது. அவர் அந்த தோட்டத்தை தனக்கு என்று மிக சுத்தமாக அழகாக வைத்திருந்தார். ராமேஷ்வர் உள்ளே நுழைந்தான். தனது அழுக்கு துணிகளை எல்லாம் அந்த தாமரைக்குகுளத்தில் முக்கி நன்றாக துவைத்தான். உள்ளே இறங்கி குளித்தான். தெளிந்த நீரைக் குடித்தான். அனகத்ஷா பாத்து விட்டார். அவரைக் கேட்காமல் உள்ளே நுழைந்து தனது குளத்தை ஒருவன் அசுத்தப்படுத்துவதைக் கண்டு சும்மாவா இருப்பார்?. உடம்பு குளுகுளு வென்று இருக்கவேண்டுமென்று தானே உள்ளே இறங்கினாய்? இந்த நிமிஷம் முதல் உனது உடல் முழுதும் திகு திகு என்று ஒரு எரிச்சல் விடாமல் உன்னைத் துன்புறுத்தட்டும் என்று அந்த பக்கிர் மந்திரம் செய்துவிட்டார். அவர் ஏவல் பில்லி சூன்யம் எல்லாம் தெரிந்த மாந்த்ரீகர் ஆச்சே. அது உடனே பலித்தது . அலறிக்கொண்டு ஓடினான் ராமேஷ்வர் பட். உடல் எரிச்சல் நிற்கவில்லை. எங்கெல்லாமோ அலைந்து திரிந்து நிவாரணம் தேடினான். பயனில்லை. ஆலண்டி சென்றான். சுவாமி ஞாநேஸ்வரின் சமாதியை அடைந்தான். அதன் முன் கதறினான்
"சுவாமி எப்படியாவது என் உடல் எரிச்சலைத் தாங்கள் தான் குணப்படுத்த வேண்டும்" என்று வேண்டினான். மூன்று நாள் அன்ன ஆகாரமின்றி சுவாமி ஞானேஸ்வர் சமாதியின் முன் பிரார்த்தனை செய்தான். அன்றிரவு அவன் கனவில் சுவாமி ஞானேஸ்வர் தோன்றினார்
"ராமேஸ்வரா,நீ மகான் துக்காராமின் மீது புகைச்சல், எரிச்சல் கொண்டாயல்லவா?. வேண்டுமென்றே அவரைத் துன்புறுத்தினாயல்லவா?. அதற்கு பிரதி பலன் தான் இப்போது நீ அனுபவிக்கும் உடல் எரிச்சல். இது குணமாக ஒரே நிவாரணம் நீ நேராக துக்காராமிடம் சென்று அவரது காலில் விழுவது தான். அவர் மன்னித்தேன் என்ற உடனே உன் உடல் எரிச்சல் தீரும்". ராமேஷ்வர் தான் செய்த ஈனச்செயலை உணர்ந்தான்.
நேராக அவரிடம் போக ராமேஸ்வருக்கு பயம், அவமானம், வெட்கம். எனவே ஒரு கடிதத்தில் தனது தவறுகளை ஒப்புக்கொண்டு அவரிடம் மன்னிப்பு கேட்டு எழுதி ஒருவனிடம் கொடுத்து அனுப்பினான்.
கடிதம் துக்காராமிடம் வந்தது. அவர் உடனே ஒரு பதில் எழுதினார்
"எந்த மனதில் வேற்றுமை இல்லையோ, எதில் சகல உயிர்களிடமும் அன்பும் பாசமும் மரியாதையும் உள்ளதோ, அந்த உள்ளத்தில் விட்டலன் குடியிருக்கிறான். யார் எது சொன்னாலும் செய்தாலும் அவை விட்டலனின் செயலே, அவன் அருளாலே என்ற எண்ணத்தில், நம்பிக்கையில் தான் வாழ்கிறேன். இப்படி நம்புபவனுக்கு உள்ளத்திலோ, உடலிலோ எந்த வலியும் துன்பமும் எரிச்சலும் இருக்காது, இருந்தால் உடனே நீங்கிவிடும்".
ஆவலாகக் காத்திருந்த ராமேஸ்வரிடம் பதில் வந்து சேர்ந்து அவன் கண்களில் நீரோடு படித்தான் "உடல் துன்பமும் எரிச்சலும் இருக்காது, இருந்தால் உடனே நீங்கிவிடும்" என்ற இடத்தை அவன் படித்ததுமே அவன் உடல் எரிச்சல் காணாமல் போனது. ஓடினான் துக்காராமிடம். அவர் பாதங்களைக் கெட்டியாக பிடித்துக்கொண்டான். திருந்தினான் அவர் சிஷ்யன் ஆனான். தனது புகழ் பரவி வருகிறது என்று கூட அறியாமல், அறிந்து கொள்ள விரும்பாமல், ஆனந்தமாக விட்டலனிடம் இரண்டறக் கலந்த துக்காராம் தனது உடலில் 41 வருஷங்கள் வாழ்ந்தார். எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு இந்த உடலோடு விட்டலனுடன் வைகுந்தன் சென்றார். எனினும் இன்றும் நம்மோடு அவர் அபங்கங்களில் இன்பமூட்டி வாழ்கிறார்.