Post by Amritha Varshini on Sept 7, 2014 7:21:05 GMT 5.5
அருள் வேண்டி நின்ற அருணகிரி - உமா பாலசுப்ரமணியன்
நாவலர் பாடிய நூலிசையால் வரு நாரதனார் ஒருமுறை முருகனைக் காணுவதற்காகத் தவம் இயற்றினார் . முருகனும் நாரதரின் தவத்தில் உவந்து எதிரே தோன்றி ,’ ஏதேனும் விரும்பிய வரம் கேள் தருகிறோம்! ‘ என்றார் . ‘ நாராயணா ‘ எனும் நாமத்தை எப்பொழுதுமே சொல்லிக் கொண்டு திரியும் முனிவரும் , ‘ தங்கள் கமல விமல மரகத மணி கனக மருவும் இரு பாதங்களை இந்த அடியேன் எப்போதும், எந்நிலையிலும் மறவாது இருக்க வரம் அருளுங்கள் ‘ என்று கூறினார் முருகனிடம்.
‘ மகிழ்ச்சி ! அவ்வண்ணமே அருளினோம் !. இருந்தாலும் உமக்கு ஏதாவது மற்றுமொரு வரம் தர வேண்டுமன்று என் மனம் விழைகின்றது . எது வேண்டுமானாலும் தயங்காது கேட்பாயாக!. நாம் தருவோம்! ‘ என்று கூறினார் முருகவேள் .
பலமுறை சிந்தித்துவிட்டு நாரதமுனி என்ன வரம் கேட்டார் தெரியுமா ?
“ ஐயனே மீண்டும் மீண்டும் யாம் தங்களிடம் வேறு ஒரு வரம் கேட்கக் கூடாத தன்மையுடைய மனத்தினை தந்தருள வேண்டுகிறேன் ‘ என்றார்.
அப்படிப்பட்ட மனம் யாரிடம் இருக்கிறது ?
ஆனால் இதற்கு நேர் மாறாக, அருணகிரிநாதர் முருகனிடம் , ஒரே பாடலில் பல அருள்களை வேண்டுகிறார் என்று அறிந்தால் யாவருக்கும் விந்தையாகத்தான் இருக்கும் . கொங்கணகிரிக்குள் வளர் பெருமான் முருகனிடம் ‘ ஐங்கரனை ஒத்த மனம் ‘ என்னும் பாடலின் மூலமாக , தொடர்ந்து ஏழு வரங்களைக் கேட்கிறார் . முருகனை முன் இருத்திப் பதினாயிரம் திருப்புகழ் பாடல்களைப் பாடிய அருணகிரிநாதருக்கு வரங்கள் கேட்பதற்குத் தகுதியும் , உரிமையும் இருக்கிறது .இருந்தாலும் அவர் ஏன் வரங்கள் கேட்கிறார்? என்ற சிறிய சந்தேகம் நம் மனத்தில் உதிக்கிறதல்லவா? அவர்தான் ஆன்மீக வக்கீலாயிற்றே ! அறிவிலிகளான நமக்காகத்தான் இறைவனிடம் வக்காலத்து வாங்கி வரம் கேட்கிறார் என்பதை நாம் நன்கு புரிந்துகொள்ளல் வேண்டும்
அப்படி , கந்தனிடம் என்னென்ன அருள் வேண்டி நின்றார் ?
அந்திபகல் அற்ற நினைவு அருள்வாயே !
உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே !
முத்தி பெற சந்திர வெளிக்கு வழி அருள்வாயே !
எண்திசை மதிக்க வளர் சம்ப்ரம விதத்துடனெ அருள்வாயே !
மனம் உந்தனை நினைத்து அமைய அருள்வாயே !
சுபரக்ஷை புரி வந்தணைய புத்தியினை அருள்வாயே !
தென் கரையில் அப்பர் அருள் கொண்டு உடலுற்ற பொருள் அருள்வாயே ! என்ற வரங்கள்தாம்.
அருணகிரிநாதர் இள வயதில் வல்லாள கோபுரத்தினிருந்து , ‘ முருகா’ என்று கூறிக்கொண்டு கீழே விழும்போது , வடக்குக் கோபுரத்தில் வீற்றிருந்த ‘ பக்தரருகனான’ முருகன் தானே வந்து அவரைத்தாங்கிப் பிடித்து , ‘ நாதா ‘ என்று அழைக்கவில்லையா? அதனால் அருணகிரிநாதர் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவருக்குப் பல அருட்களைப் பொழிவதற்குத் தயாராக இருக்கிறார் விநோதப் பெருமாள் .
முதலில், கேவல சகல நிலையான மறப்பும் , நினைப்புமில்லாத நிலையைக் கேட்கிறார் முற்றும் தெரிந்த முனிவர் . ‘ இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே? ‘ ( கந்தர் அலங்காரம் )என்று கூறும்படியான அப்படிப்பட்ட இரவு பகலற்று நிற்கும் அந்தக் கடினமான நிலையைத்தான் அவர் கேட்கிறார்.
‘ இரவு பகலற்ற இடத்து ஏகாந்த யோகம் வர உன் திருக்கருணை வையாய் பராபரமே ‘ என்று கூறும் தாயுமானவரின் வாக்கிற்கு இணங்க மற்றுமொரு
கந்தர் அலங்காரத்திலும் ( பாடல் 17 ) அருணகிரிநாதர் “.......... அல்லும் பகலும் இல்லாச் சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப் போதாய் இனி மனமே தெரியாது ஒரு பூதற்குமே ! ” என்கிறார்.
அடுத்து , ‘ நிறையிலி , முறையிலி, அன்புதான் இலி ‘யான ( நிணமொடு குருதி) நான், ‘ காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி “ அன்பர் தமக்கான நிலைப் பொருளோனை’ அன்பாக வந்து உன் தாள் பணிந்து ‘ ‘ உன்புகழே பாடி அன்புடன் ஆசார பூஜை செய்து உய்ந்திட வீணாள் படாது அருள ‘ ( கொம்பனையார் ) என்றும் செம்மையாக இருக்கும் தமிழினால், அன்பொடு துதிக்கும் மனத்தினைத் தந்தருள வேண்டும் என்கிறார் . .
மூன்றாவதாக “ நாம மதி மீதில் ஊறும் கலா இன்ப அமுதூறல் நாடி , அதன் மீதுபோய் நின்ற ஆனந்த மேலை வெளி ஏறி, நீ இன்றி, நான் இன்றிநாடி. இனும் வேறுதான் இன்றி வாழ்கின்றது ஒருநாளே! “ ( மூளும் வினை ) என்பதற்கு ஏற்ப , ஆறு ஆதாரமும் கடந்து , பிரமரந்திரமும் தாண்டி சந்திர வெளிக்கு வழி அருள வேண்டுகிறார்.
அடுத்து , பல்லக்கு, பெருமை முதலியவைகளை விரும்பும் ஆன்மாக்களும், அவைகளை இறைவனிடம் கேட்டுப் பெற்று உலகில் உய்யும் பொருட்டு, தான் கேட்பது போல், எண்திசைகளும் மதிக்குமாறு சம்ப்ரம விதத்துடன் அருள்புரிவாய் ! என்று உமையாள் குமாரனைக் கேட்கிறார் .
ஐந்தாவதாக , மற்ற தீய வழிகளில் மனம் செல்லாது உந்தனையே எப்பொழுதும் நினைக்குமாறு அருளவேண்டும்! என்று வேண்டுகிறார்.அருணகிரியார் . அடுத்ததாக இரவும் , பகலும் அரசர்கள் மன்னுயிரை நன்னெறியுடன் புரக்க, முருகனை வேண்டுகிறார்.
கடைசியாக , திருப்புக்கொளியூர் எனும் அவிநாசி என்னும் திருத்தலத்தில் உள்ள குளத்தினின்றும் , சிவபெருமானின் அருள் கொண்டு, இழந்த பாலகனின் உயிர் பெற்று, முதலை வாயினின்றும் உடம்பு வெளிப்பட வைத்த அந்த மகத்தான இரகசியப் பொருளை எனக்கு அருள்வாய் முருகா ! என்று கந்தனை , அஷ்டமா சித்திகளையும் விராலிமலையில் பெற்ற அருணகிரிநாதர் வேண்டுகிறார்.
திருப்புக்கொளியூர் என்று முன்னாளில் போற்றப்படும் அவிநாசி என்னும் தலத்தில் , கங்காதரன் என்பவர் வசித்து வந்தார் அவருக்கு வெகுநாட்களாகக் குழந்தையில்லாது , அத்தலக் கோயில் இறைவன் அவினாசிலிங்கேஸ்வரரையும் , இறைவி கருணாம்பிகையையும் வேண்டி , அவர்கள் அருளால் ஒரு குழந்தை பிறந்தது . அதற்கு’ அவினாசிலிங்கம்’ எனப் பெயர் வைத்து, பின் அவன் வளர்ந்து ஐந்து வயதை அடைந்தபொழுது தன் வயதை ஒத்த எதிர் வீட்டுச் சிறுவன் ஒருவனுடன் விளையாடக் கிளம்பி, இருவரும் தாமரை நிறைந்த குளத்தை அடைந்தனர். விளையாடிக் கொண்டே தாமரைக் குளத்தில் இறங்கி ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை இறைத்து நேரம் போவதே தெரியாது மயங்கினர். அத்தருணத்தில் .குளத்தில் இருந்த ஒரு முதலை அவிநாசிலிங்கத்தின் காலைப் பற்றி இழுத்தபோது இருவரும் செய்வதறியாது விழித்து அலறினர் . பின் அவிநாசிலிங்கத்தின் நண்பன் , ஊருக்குள் ஓடிச் சென்று , பெரியோர்களிடம் விவரத்தைக் கூற, பெற்றோர்களும் , உற்றோர்களும் புடைசூழ யாவரும் குளத்திற்கு வந்து பார்த்தபோது, சிறுவனும் , முதலையும் அங்கு இருந்த சுவடே காணாது திகைத்தனர் . ஒருவருக்கும் குளத்தில் இறங்கிப்பார்க்கும் தைரியமுமில்லாது வெட்கி , வகை தெரியாது , யாவரும் முதலை ,சிறுவனை விழுங்கி இருக்க வேண்டும் எனத் தீர்மானித்து, பின் ஊர் திரும்பினர். இந்நிகழ்ச்சி நடந்து இரண்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன.
அன்று அவினாசிலிங்கத்துடன் விளையாடிய சிறுவனுக்கு உபநயனம் , தாளம் , மேளம் , மகிழ்ச்சி ,ஆரவாரம் என்று அந்தத் தெருவே கோலாகலமாக இருந்தது.. ஆனால் கங்காதரனும் அவர் மனைவியும் , எதிர் வீட்டுப் பையனை ஒத்த தன் மகன் இருந்திருந்தால் அவனுக்கும் இதேபோல் உபநயனம் நடந்திருக்குமே ! அருமையாக வளர்த்த மகனை , அநியாயமாக ஒரு முதலை விழுங்கிவிட்டதே! என நினைத்து நினைத்துப் புலம்பி அழுதனர் . ஒரே தெருவில் ஒரு வீட்டில் மகிழ்ச்சி ஆரவாரம் போன்ற மங்கல ஒலி , ஆனால் நேர் எதிர் வீட்டில் அழுகை , துக்கம் நிறைந்த .அமங்கல ஒலி .
அப்பொழுது அத் தலத்திருக்கு எழுந்தருளிய சுந்தரர் , இரண்டு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த இந்நிகழ்ச்சியைக் கேட்டு அதிர்ந்து , ஊர் மக்களுடன் சம்பவம் நிகழ்ந்த,தாமரைக் குளத்தை அடைந்தார். சிவபெருமானை மனமுருக வேண்டி நின்று,
“எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம் பெருமானையே
உற்றாயென்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால்
புற்றாடரவா ! புக்கொளியூர் அவிநாசியே !
மற்றாக வாழ்வேன் பசுபதியே ! பராபரமே ! “ ---- என்றுதொடங்கிப் பத்து பதிகங்கள் பாடத் தொடங்கினார் எங்கோ இருந்த முதலை எட்டிப் பார்த்தது . அப்பாடல்களில்
‘ வழிபோவோர் தம்மோடும் வந்துடன் கூடிய மாணி நீ
ஒழிவதழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே
பொழிலாருஞ் சோலைப் புக்கொளியூரிற் குளத்திடை
இழியாக் குளித்த மாணி யெனைக் கிறி செய்ததே ------ என்றும்
உரைப்பார் உரை உகத்து உள்கவல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே ------- என்றும்
பாடிய பதிகங்கள் சிறந்ததாகக் கருதப்படுகின்றன.. பதிகங்கள் பாடிக் கொண்டிருக்கும் பொழுது .என்னே அதிசயம் ! இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தான் விழுங்கிய பாலகனைக் கரையில் உமிழ்ந்துவிட்டுத் திரும்பியது முதலை . . அந்தச் சிறுவன் இடைப்பட்ட இரண்டு வருடங்களின் வளர்ச்சியைப் பெற்றிருந்தான் . அடியார் மேல் இறைவன் வைத்திருக்கும் கருணையைத்தான் என்னென்று சொல்வது?
அப்படிப்பட்ட ஒரு இரகசியப் பொருளை முருகனிடன் வேண்டுகிறார் அருணகிரிநாதர் .
இப்பொழுது பாடலை முழுமையாகப் பார்க்கலாம்
ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலன் அகற்றி வளர்
அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே
அம் புவி தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்தி உனை
அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே
தங்கிய தவத்துணர்வு தந்து அடிமை முக்தி பெற
சந்திர வெளிக்கு வழி அருள்வாயே
தண்டிகை கனப் பவுசு எண்திசை மதிக்க வளர்
சம்ப்ரம விதத்துடனெ அருள்வாயே
மங்கையர் சுகத்தை வெகு இங்கிதமெனுற்ற மனம்
உந்தனை நினைத்தமைய அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்த சுப ரட்சைபுரி
வந்தணைய புத்தியினை அருள்வாயே
கொங்கில் உயிர் பெற்று வளர் தென் கரையில் அப்பர் அருள்
கொண்டு உடலுற்ற பொருள் அருள்வாயே
குஞ்சர முகற்கிளைய கந்தனென வெற்றி பெறு
கொங்கணகிரிக்குள் வளர் பெருமாளே
ஐங்கரனை ஒத்தமனம் = ஐந்து கரங்களை உடைய விநாயகப் பெருமானைப் போன்ற மனத்தையும்( எப்பொழுதுமே ஆடிக்கொண்டே இருக்கும் யானைபோன்று அசைந்து கொண்டிருக்கும் மனம் ) ( எல்லாச் செயல்களுக்கும் முற்படுகின்ற மனம் ) ( இருந்த இடத்திலேயே உலகத்தைச் சுற்றிவந்தார் என்றும் கொள்ளலாம் )
ஐம்புலம் அகற்றி = மெய் , வாய் , கண் ,மூக்கு, செவி என்ற ஐம்புலன்களின் செயல்களை நீக்கி, வளர் அந்தி பகல் அற்ற=(அதன் பலனாகக் கிடைக்கும்)இரவு, பகல் என்ற வேறுபாடு இல்லாத நினைவு அருள்வாயே =நிலையை அருள் புரிவாயாக!
அம் புவி தனக்கு உள் வளர் = அழகிய இந்தப் பூமியில் என்றும் நிறைந்து வளரும் செந்தமிழ் வழுத்தி = செம்மையான தமிழால் போற்றி
உனை அன்பொடு துதிக்க = உன்னை அன்பினால் விரும்பித் துதிக்கும்
மனம் அருள்வாயே = மன நிலையை கொடுத்து அருள்வாயாக.
தங்கிய தவத்து உணர்வு தந்து = என்றும் நிலைத்துள்ள தவநிலைஎன்னும் உணர்ச்சியைத் தந்து அடிமை= அடிமையாகிய நான்
முத்தி பெற= வீடு பேற்றை அடைய
சந்திர வெளிக்கு வழி = யோக நிலையில் நின்று , சந்திர வெளியைக் காணும்படியான மேலை வழியை.
அருள்வாயே = அருள் புரிவாயாக
தண்டிகை = பல்லக்கு
கனப் பவுசு = பெருமையுடன் கூடிய உயர்வு,கௌரவம் போன்றவைகளை
எண் திசை = எட்டுத் திசைகளில் உள்ளவர்களும்
மதிக்க = மதிக்கும் படியாக
சம்ப்ரமவிதத்துடனே = சிறப்பான வகையில்
அருள்வாயே= அருள் புரிவாயாக.
மங்கையர் சுகத்தை = மாதர்களின் இன்பத்தை .
இங்கிதம் என உற்ற மனம் = இனிமை தருவதாம் என்று நினைக்கும் எந்தன் மனம் உன்றனை நினைத்து அமைய = உன்னையே நினைத்துஅங்கேயே நிலைத்து அமைதியுடன் இருக்க அருள்வாயே= அருள்புரிவாயாக!
மண்டலிகர் = நாட்டு அதிகாரிகள்,அரசர்கள் யாவரும்
ராப்பகலும் வந்த = இரவும் பகலும்
சுபரட்சை புரி = அவர்கள் நன்மை அடைய வேண்டி
வந்து அணைய= என்னை வந்து அணுகவல்ல
புத்தியினை அருள்வாயே=நல்அறிவினைஎனக்குஅருள்வாயாக.!
கொங்கில் உயிர் பெற்று வளர் = கொங்கு நாட்டில் உயிர் (மீளப்) பெற்று வளர்ந்த தென் கரையில் = தென் கரை நாட்டுத் திருப்புக்கொளியூர் என்னும் அவி நாசித் தலத்தில் உள்ள அப்பர் = அந்தப் பரமராகிய சிவபெருமான்
அருள் கொண்டு = திருவருளைப் பெற்று
உடல் உற்ற பொருள் = உடலில் உயிர் பொருந்தி வந்த இரகசியத்தை
அருள்வாயே =. அருள்வாயாக.!
குஞ்சர முகற்கு = யானை முகக் கடவுளாகிய விநாயகப் பெருமானுக்கு
இளைய = இளையவராகிய
கந்தன் என வெற்றி பெறு = கந்த வேள் என்றுகூறும்படி அரக்கர்களையெல்லாம் வெற்றிப் புகழ் பெற்ற கொங்கண கிரிக்குள் வளர் பெருமாளே = கொங்கண கிரி என்னும் திருமலையில் வீற்றிருக்கும் பெருமைமிக்கவரே! ( கொங்கணகிரி கோவைமாவட்டம் சோமனூரிலிருந்து நான்கு மைல் தொலைவில் உள்ளது )
இவ்வாறு அருணகிரிநாதர் ஒரே பாடலின் மூலம் , மனம் அடங்கவும் , செந்தமிழால் துதிக்கவும் , மேலை வெளிக்கு வழியும் , இன்ப நிலையும், தியான நிலையும் , அரசர் நல்ல நெறியில் நிற்கவும் , திருவருட்செல்வமும் தந்தருள கொங்கணகிரிக்குள் வளர் பெருமானை வேண்டுகிறார் .
நாமும் , இரு போன்ற அடியார்களின் பாதையைப் பின்பற்றி அவர்கள் நமக்காக எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கும் அரிய நூல்களைப் படித்து இன்புற்று , உணர்ந்து ஓதினால் இறைவன் அருளுக்குப் பாத்திரமாவோம் என்பது திண்ணம் !
Article by Smt Uma Balasubramanian (uma_kbs@yahoo.com)