Post by J.K. SIVAN on Aug 7, 2013 19:50:44 GMT 5.5
97 "காணிக்கை"
இதுவரை எத்தனையோ கதைகள் பாண்டுரங்கனைப் பற்றி. அதில் நடு நடுவே பிராமணர்கள் வருகிறார்களே ஏன்?. அவர்களைப் பற்றி அப்படி ஒன்றும் உயர்வாக சொல்லும்படியாக நடந்து கொள்ள வில்லையே. ஜாதி த்வேஷம், தீண்டாமை, இதெல்லாம் அவ்வளவு மோசமாகவா அந்த காலத்தில் இருந்தது? நீங்கள் ஏன் ஒவ்வொரு கதையிலும் இதை மிகைப் படுத்துகிறீர்கள் என்று கேட்பது காதில் விழுகிறது.
1850 களில் ஒருவர் சுலோகங்களாக 1200களில் நடந்த நிகழ்வுகளை, வாழ்ந்தவர்களைப் பற்றி எல்லாம் எழுதி, அதை 1920 களில் ஒருவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 2012ல் நான் படித்துவிட்டு அதிலிருந்து சுவாரஸ்யமாக சில விஷயங்களை கிரஹித்து உங்களுக்கு கதையாகத் தந்திருக்கிறேன். துரதிர்ஷ்ட வசமாக பல, சில அல்ல, பல பிராமணர்கள் இவ்வாறு நடந்ததாகத் தெரிகிறது. தீண்டாமை நம் நாட்டில் ஒழிய பல மகான்கள் உதவியிருக்கிறார்கள், நமது கதையில் வரும் உன்னத புருஷர்களும் உயிர்கள் எல்லாம் ஒன்றே, வித்யாசம் ஏன்? என்று கேட்டு அவஸ்தை பட்டிருப்பதையும் பார்க்கிறோம்.
இனி இந்தக்கதைக்குள் செல்வோம்
துக்காராம் அம்பியே என்பது அவர் முழுப்பெயர். சிறு வியாபாரி. வசதியான குடும்பம். நாட்டில் பஞ்சம் வந்தது உணவின்றி அவர் மனைவி மாண்டாள். மகனும் இறந்தான். வியாபாரம் நொடித்தது. வறுமை வாட்டியது. உறவினர்கள் நழுவினர். ரெண்டாவது மனைவி ஜீஜாபாய் ரொம்ப பொல்லாதவள். துக்காராமுக்கு வாழ்க்கை வெறுத்தது. அவர்கள் வீட்டின் எதிரில் மூதாதையர் நிறுவிய ஒரு சிறு பாண்டுரங்கன் கோயில் இருந்தது. பரம்பரை பரம்பரையாக அந்த குடும்பத்தினர்கள் விட்டல பக்தர்களாச்சே ]அவர் பாண்டுரங்கன் கோவிலை சுத்தம் செய்தார் விளக்கேற்றினார். அங்கே நடக்கும் நாம சங்கீர்த்தனங்கள் அவரை ஈர்த்தது. அவருக்கு முன் தோன்றிய ஞானதேவ், நாம்தேவ் போன்றோர் இயற்றிய அபங்கங்கள் அவரை ஆட்கொண்டது. ஒருநாள் கனவில் விட்டலன் தோன்றினான். பாபாஜி சைதன்யா உன்னைத் தேடி வருவார் உபதேசம் செய்வார் என்றான். பாபாஜி (விட்டலன் தான் அது ) வந்தார். சிரசைத்தொட்டு உபதேசம் செய்தார் " ராமகிருஷ்ண ஹரி" காய்ந்த கட்டையில் தீ வெகு வேகமாக பற்றியது. கொழுந்து விட்டு எரியலாயிற்று. காட்டுத்தீயானது.
துக்காரம் அம்பியே, துக்காராம் சுவாமிகள் இப்போது. பண்டாரா டொங்கார் என்று ஒரு சிறு குன்று. அதில் தான் துக்காராம் அடிக்கடி அமர்ந்து த்யானம் செய்தார். விட்டலன் நெஞ்சில் குடிபுகுந்தான். அபங்கங்கள் பொங்கியது. பக்தர்கள் குருவைக் கண்டு கொண்டனர். பிராமணர்கள் எதிர்த்தனர். அவரை தூஷித்தனர். அவரோ இதையெல்லாம் லட்சியம் செய்யும் நிலையை எப்போதோ தாண்டிவிட்டாரே.
பிராமணர் ராமேஷ்வர் பட் யாகம், யக்ஞம், மந்த்ரம் சம்ச்க்ரிதம் இதைப்பற்றி மட்டுமே கவலைப்பட்டு அதன் மூலம் தான் கடவுளை வழிபடுவது முறை என்று நம்புபவர். துக்காராம் நீச மொழியான மராத்தியில் அபங்கங்கள் மூலம் விட்டலனை வழிபடுவது பிடிக்கவில்லை அவருக்கு. ராமேஷ்வர் பட் துக்காராமின் மராத்தி அபங்கங்கள், ப்ரவச்சனங்கள் எல்லாம் அனாசாரம் என்று கருதியதோடு இல்லாமல்
அவர் மீது அபாண்டமாக ஒரு வழக்கு நீதிமன்றத்தில் போட்டார். குறிப்பிட்ட நாளில் நீதிமன்றத்துக்கு துக்காராம் அழைக்கப்பட்டார்.
அவருக்கு என்ன வழக்கு, யார் போட்டார்கள் எதற்காக, வக்கீல் உண்டா, இல்லையா, தேவையா, ஒன்றுமே தெரியாது புரியாது. கவலையுமில்லை
நேராக நீதிமன்றத்தில் நிற்க வைத்தார்கள். வெள்ளைக்கார நீதிபதி இவரைப் பார்த்ததுமே அருவருப்பு அடைந்தான்
"நீர் தான் துக்காராமா"
" அப்படித்தான் என்னை எல்லோரும் அழைக்கிறார்கள்"
"அபங்கங்கள் எல்லாம் சொல்வாயா, எழுதுவாயா"
"நான் வாழ்வதற்கு ஜீவாதாரமே அவை தான். "
"அபங்கங்கள் நீயே இயற்றி எழுதியவையா"
"இல்லை. விட்டலனே இயற்றி விட்டலனே எழுதியவை"
என்னவோ பேசினார்கள். கடைசியில் நீதிபதி தீர்ப்பு கொடுத்து விட்டான் .
"துக்காராமின் தலையை மொட்டையடித்து அவனைக் கழுதை மீது ஏற்றி தண்டோரா போட்டு தெருத் தெருவாக ஊர்வலம் செல்ல வேண்டும்"
அவ்வாறே செய்தார்கள் நீதிமன்ற சேவகர்கள். தன்னை கவுரவித்து ஒரு வாகனத்தின் மீது ஏற்றி மேள தாளங்களுடன் ஊர்வலமா! விட்டலா, என்னே உன் கருணை!
"அய்யா, துரைமார்களே என்னை அழைத்து செல்லும்போது என் வீட்டு தெரு வழியாகவும் அழைத்து செல்லுங்களேன் என் மனைவி பார்த்து மகிழட்டுமே"
விட்டலன் நாமதேவர் இருவருமே துக்காராமின் கனவில் வந்து அவரை அபங்கங்கள் பாடச்சொல்லி அவரை ஊக்குவித்தனர். "என் வாழ்வில் நான் செய்ய முடியாததை நீ செய்" என்றருளினார் நாமதேவர்.
துக்காராம் அபங்கங்கள் தெள்ளத் தெளிவானவை. பொருள் செறிவு மிகுந்தவை. துக்காராம் சுவாசித்தது விட்டலனை. பார்த்தது விட்டலனை, பாடியது விட்டலனை, கேட்டது விட்டலனை. 41 வருஷங்கள், தான் ஏழ்மையில் வாழ்ந்தாலும் அமர காவியமாக அபங்கங்களை அளித்து நமை செல்வந்தர் ஆக்கியவர் துக்காராம். அவர் மறைவு விட்டலனே நேரில் தேரில் வந்து விண்ணுலகுக்கு அழைத்து சென்றதாக அமைந்துள்ளது. லட்சோப லட்சம் மராத்திய இல்லங்களில் இன்றும் துக்காராம் பூஜை அறையில் அபங்கங்களாக மிளிர்கிறார் என்றால் அது விட்டலனின் விருப்பமே ஆகும். லட்சோப லட்சம் மராத்திய இல்லங்களில் இன்றும் துக்காராம் பூஜை அறையில் அபங்கங்களாக மிளிர்கிறார் என்றால் அது விட்டலனின் விருப்பமே ஆகும். இத்தனைக்கும் துக்காராமின் மராத்தி நடை தொழிலார்கள் கிராம வாசிகள் வயல்வெளியில் வேலை செய்யும் பயிர்த்தொழிலாளிகள் பேசும் மராத்தி. உயர்ந்த பிராமணர்கள் பேசும் நடை அல்ல. என்றாலும் அவரை எதிர்த்த அவருக்கு தடையாகவே இருந்த அந்த பிராமணர்களையோ அவர்களின் படிப்பையோ, அவர்கள் எழுத்தையோ காலம் நினைவில் கொள்ளவில்லை. 41 வயதில் 5000 த்துக்குமேல் அபங்கங்கள். யாரிடமும் எதையும் பெற்றுக்கொண்டதோ எதிர்பார்த்ததோ கிடையாது கொடுத்துக்கொண்டே இருந்த கை.
ஒரு தரம் ஒரு அபங்க ப்ரவச்சனத்தில் ஒரு பக்தன் துக்காராமின் அகண்ட பஜனைக்கு காணிக்கை வசூலித்துக் கொண்டிருந்தான். அவரவர் தங்கலாளிலியன்றதைக கொடுத்துக்கொண்டிருக்கும்போது ஒரு பிரபல பணக்கார வியாபாரியின் மனைவி தானும் ஏதாவது காணிக்கை கொடுக்க விரும்பினாள். அவள் கணவனோ கருமி, லோபி, நிழலிடமே வட்டி வசூலிப்பவன்.காலணா கேட்டால் காத தூரம் ஓடுபவன். மனைவி ஏதேனும் காணிக்கை கொடுக்க விடுவானா? அவள் யோசித்தாள். புழக்கடையில் ஒரு பழைய பித்தளைச் செம்பு நசுங்கி இருந்தது. அதைக் கொடுத்து விடலாம். கணவன் அதை கவனிக்க மாட்டானே. ஒரு பையில் போட்டு அதை எடுத்துக்கொண்டு போய் துக்காராமின் பக்தனிடம் கொடுத்தாள். யார் என்ன பொருள் கொடுத்தாலும் மக்களிடம் அதை காட்டி பெயர் சொல்லி பிறகு எடுத்துக்கொண்டான் அவன். அவளது பையைப் பார்த்து அதில் என்ன என்று கேட்டான். நசுங்கிய பித்தளை செம்பு என்று சொல்ல வெட்கப்பட்டு ஒரு தங்கச் செம்பு என்று சொல்லிவிட்டு நிராதரவாக துக்காராமைப் பார்த்தாள் அவள்.
அவள் தூய ஹ்ருதயம், அதில் உள்ள இயலாமை எல்லாவற்றையும் உணர்ந்தார் துக்காராம். அந்தப் பையைத் தான் வாங்கிக் கொண்டார். பிறகு பக்தரிடம் கொடுத்தார். அதை அவர் பிரித்து உள்ளே இருந்த செம்பை எடுத்து எல்லோரிடமும் காட்டி அந்த வியாபாரியின் பெயரை ச்சொல்லி அவர் மனைவி காணிக்கை ஒரு தங்கச்செம்பு என்று அதை எடுத்து வெளியே காட்டினார்.
என்ன ஆச்சர்யம்
உண்மையில் அது தங்கச்செம்பாகவே மாறியிருந்தது