Post by jksivan on Jan 12, 2014 8:03:15 GMT 5.5
மார்கழி 28ம் நாள்
''கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்''
வில்லிப்புத்தூரில் விஷ்ணு சித்தர் என்கிற சாது ஆழ்வாரின் மகளாக அவதரித்த கோதை நாச்சியார், தாம் வாழும் வில்லிப் புத்தூரையே மனதளவில் கண்ணன் வாழ்ந்த கோகுலமாக, வில்லிபுத்தூரில் கோவில் கொண்டுள்ள வட பத்ர சாயி யையே கண்ணனாகவும் அந்த சிறு கோவிலையே (அவள் வாழ்ந்த காலத்தில் இருந்ததைச் சொல்கிறேன், இப்போது தமிழக அரசு தனது அரசியல் சின்னமாக எடுத்துக்கொண்டு பெருமையளிக்கும் பெரிய அழகிய கோபுரம் கொண்ட கோவிலை அல்ல) கண்ணன் வாழ்ந்த நந்தகோபனின் மாளிகையாக கற்பனை செய்து இந்த பின்னணியில் அற்புதமாக 30 பாசுரங்களை காலத்தால் அழியாத காவியமாக அளித்துள்ளாள் உருவகிக்கிறார். தன்னையும் தன் தோழியரையும் ஆண்டாளாகவும் அவளது தோழிகளாகவும் காட்டுகிறாள். பதினைந்து வயதே வாழ்ந்த அவள் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவராக நிலை பெற்றுவிட்டாள்.
மேலெழுந்தவாரியாக படித்தால் திருப்பாவை என்பதில் ஆண்டாள் என்கிற ஆயர்பாடி சிறுமி, அவள் தோழிகள், கண்ணனது வளர்ப்புத் தந்தை நந்தகோபனின் அரண்மனை அதன் வாயி காவலாளி, கண்ணனை வளர்த்த அன்னை யசோதை, தந்தை நந்தகோபன் சகோதரன் பலராமன் இவர்களைச் சுற்றியே முப்பது பாசுரங்களும் பிணைக்கப்பட்டிருக்கிறது. எல்லோரையும் விடியற்காலை துயிலெழுப்பி, கண்ணபிரானை அவனுடைய சிம்மாசனத்தில் அமரச்செய்து அவனிடம் தங்களது நோன்புக்காண வேண்டுகோளை அருள்வாயாக என்று உரிமையோடு கேட்டுக்கொள்வது. கண்ணன் மறுவார்த்தை பேசாமல் கேட்டதைக் கொடுத்துவிட்டான். நன்றியோடு அவரை போற்றிப் புகழவேண்டாமா ?
ஏற்கனவே 26வது பாசுரத்தில் நமது ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வதை குறிப்பிடுகிறாள் கோதை. ஆமை போன்று புலன்களை உள்ளிழுக்க முடிந்தவன் யோகி. ஏகாதசி விரதம் போன்ற கட்டுப்பாடு நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஐம்புலனில் ஒருசிலவற்றின் கண்ட்ரோல். உடம்புக்கு எதற்கு சிங்காரம். பகட்டான பளபளக்கும் ஜிலுஜிலுக்கும் உடை தேவையா.? மற்றவன் அறுத்துக்கொண்டு ஓடுவதற்காக நாம் நிறைய நகைகளைச் சுமக்கவேண்டுமா? காசு கொடுத்துக் கண்ணைக் கெடுக்கும் ரசாயன படைப்பில் மை, வாசனைப் பொடிகள், பவுடர், இந்த விரதத்தின் போதாவது அவசியமில்லையே என்கிறாள் ஆண்டாள் வாயிலாக கோதை.
ஒரு விரதம் என்று எடுத்துக்கொண்டால் நாக்கை அடக்கவே பால், நெய் கலந்தவற்றை சாப்பிடவேண்டாம். விரத காலஹ்தி பூவைச்சூடவேண்டாம். நாம் விரதத்தில் இருக்கிறோம் என்று ஞாபகப்படுத்தவே இது.
சத்சங்கம், இறைவனைப் பற்றியே பேசுவது, பாடுவது, கேட்பது, நினைப்பது ஒன்றே குறியாக இருக்கலாமே. உடலின் நினைப்பை மறந்து உள்ளத்தைத் திறந்து அவனை உள்ளே கொள்வோமே. இதால் நமக்கு மன அமைதி கிட்டும். பேச்சு குறையும். வம்பு கிட்டே வராது.அதை வெளியே தள்ளி அன்பு கிட்டே வரும். காலம் செல்லச் செல்லா அடிக்கடி இப்படி விரதமிருந்தால் உடல் வலிமை பெருமை. வாய்மை, பொறுமை எல்லாம் தானாகவே வந்து சேரும்.
கள்ளம் கபடம் அறியாத உள்ளம் கொண்ட ஆண்டாளூம் அவள் தோழியரும் எவ்வளவு உண்மையான பக்தி கொண்டவர்களா யிருந்தால் அந்த பரந்தாமனிடம் “என்னவேண்டும்?” என்று அவன் கேட்டபோது, கொடி கொடு,, துணி கொடு, தம்பட்டம் கொடு,என்று இன்னசண்டாக கேட்டார்கள். நம்மிடம் அதனால் தான் இறைவன் உனக்கு என்னவேண்டும் என்று கனவில் கூட கேட்பதில்லை!!! கிருஷ்ணன் ஆண்டாளிடம் "ஏ! சிறு பெண்ணே, இதுமட்டும் தான் வேணுமா, இந்த அழியும் அல்ப வஸ்துகள் தவிர வேறு பெரிசா எதாவதும் கேளேன்" என்றான்
" கிருஷ்ணா, பெருமானே, நாங்கள் சிறுமிகள், யமுனை ஆத்துக்கு அந்தபக்கம், கீழண்டை பனந்தோப்புக்கு அடுத்து இருக்கிற கிராமத்துலே, அதோதெரியுதே அந்த வேலங்காட்டுக்கு வடக்கே, கூட என்ன இருக்கு என்று தெரியாத மாடு மேய்க்கிற அறிவிலிகள். உன்னோடு சேர்ந்து சாப்பிடணும்கிற ஆசையிலே உன்னை மரியாதைக் குறைவா பேசியிருந்தோம்னா எங்களை, கிருஷ்ணா, நீ கொஞ்சம் மன்னிச்சுடு. நீ உலகையே படைத்து காக்கிறவன். வேதங்கள் கூறும் பரம்பொருள் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன். இவ்வளவு பெரிய உன்னை ஒண்ணுமே தெரியாத சிறிசுகள் நாங்கள் தப்பா பேசியிருந்தா எங்க மேலே கோவம் வேண்டாம். மன்னிச்சு காப்பாத்து. உன்னைவிட்டா எங்களுக்கு யாரும் இல்லையே” . ஆண்டாள் தனது பக்தியை எவ்வளவு சிம்பிளா வெளிப் படுத்தியிருக்கிறாள் பார்த்தீர்களா. இன்னும் ரெண்டு நாள் மட்டுமே பாக்கியிருக்கு இந்த மார்கழி 28ம் நாளோடு..இன்று அந்த ஆண்டாள் ஸ்ரீ வில்லிபுத்தூரில் தங்க பல்லக்கில் வீற்றிருந்த கோலத்தில் நமக்கு காட்சி தருகிறாள்!!
++
அம்மா கோதை நீ இந்த ஆண்டாள் மூலமா பக்தி, சரணாகதி என்றால் எப்படி பண்ணவேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்தியிருக்கிறாய். எப்படியம்மா உன்னால் இது முடிந்தது.?
அப்பா நான் நினைப்பது, பேசுவது, பார்ப்பது, பாடுவது சகலமும் அந்த அரங்கனை என்று ஒரு பழக்கத்தை, ஏன் ஒரு வழக்கத்தைஏற்படுத்திக்கொடுத்ததே நீங்கள் என்று இருக்கும்போது நான் எழுதியவற்றில் உங்களிடமிருந்து தெரிந்துகொண்டது மட்டும் தானேஇருக்கும் இதில் என்ன ஆச்சர்யம் என்று சிரித்தாள்.