Post by jksivan on Dec 17, 2013 6:58:03 GMT 5.5
''மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய்.''
இந்த நோன்பு நமக்கு வேண்டிய நன்மைகளைத் தருவது மட்டும் அல்ல. தீமைகளையும் விரட்டி விடுமே.அப்படித்தானே ஆண்டாள் "" என்றாள் ஒரு சிறுமி.
''ஆமாமடி''.
''ஏண்டி கிருஷ்ணனை அவன் அம்மா கட்டிப்போட்டாள்? அவ்வளவு விஷமமா பண்ணுவான்?
''
''பாவம் டி அவன் சின்ன குழந்தை இல்லையா. வயிற்றிலே கயிற்றால் கட்டினால் அந்த மெல்லிய வயிற்றில் கயிறு அழுத்தி அவனுக்கு எவ்வளவு வலித்திருக்கும்?'' என்றாள் ஒரு சிறுமி.
''அதெல்லாம் ஒண்ணுமில்லை. எல்லாம் வேஷம். அந்த மாயக்ரிஷ்ணனை கட்டவா முடியும். அம்மா பேரில் இருந்த பாசம், அன்பு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான். அவனுக்கு யாராவது தூய மனத்தோடு ஒரு துளி ஜலம், ஒரு துளசி தளம், கொடுத்தாலே திருப்தி அடைவானே.
மனம், வாக்கு காயம் மூன்றும் அவனையே, அவனைப்பற்றியே, அவனுக்காகவே ஈடுபட்டால் அதைவிட சிறந்த தவம் எதுவுமில்லை. அவன் எதுக்கு வேணாலும் கட்டுப்படுவான் என்றாள் '' ஆண்டாள் .
ஆண்டாள் வாய் மூலம் கோதை உரைத்த பாவை பாசுரம் விஷ்ணுசித்தரை சிலையாக்கியது. அவர் மனத்தில் ஆயர்பாடி சிறுமிகள் சம்பாஷணை திரும்ப திரும்ப ஒலித்தது.
இன்னிக்கி மார்கழி 5ம் நாள் உங்களுக்கு கிருஷ்ணனை பத்தி கொஞ்சம் கூடவே சொல்லப்போறேன்.
இதை கேளுங்கடி, கிருஷ்ணனை நினைச்சு மனசார பாடி ஆடி வேண்டினால், நெருப்புலே போட்ட துரும்பு புல் மாதிரி நம் கஷ்டம் எல்லாம் காணாம போகும். அவன் வட மதுரையிலே பிறந்த வீராதி வீரன் டீ. இந்த யமுனையில் மீன் குஞ்சா நீந்தி விளையாடுவதை நாளெல்லாம் பார்க்கலாமே. ஆயர் பாடி கோபர்களுக்கு நடுவிலே அவன் ஒரு பளபளக்கும் விளக்கு டீ. அம்மா மேலே இருந்த பாசத்தினாலே அந்த மகா பலசாலி அவள் கட்டிய கயிறாய் அவளே அவிழ்க்கும் வரை வயிற்றில் கயிறோடு இருந்தவனாச்சே. அந்த கிருஷ்ணனை வேண்டி நிறைய பூவெடுத்து கை நிறைய போடுவோம். வேண்டிக்குவோம்.
“பசிக்குது ஆண்டாள்” என்றாள் ஒரு சிறுமி.
“இதோ கொஞ்சநேரம் அந்த கிருஷ்ணனை வேண்டிக் கொண்டு நாம் எல்லோரும் வீடு போய் விடலாம். அப்பறம் என்ன சொல்லுடி?
இன்னிக்கி இது போதும் உங்களுக்கு. விட்டு விட்டு சொன்னாதான் உங்களுக்கு மேலே மேலே தெரிஞ்ஜுக்க தோணும். நாளைக்கு மீதியை சொல்றேன். ''
வில்லிப்புத்தூரில் ;
ஆண்டாள் வாய் மூலம் கோதை உரைத்த பாவை பாசுரம் விஷ்ணுசித்தரை சிலையாக்கியது. அவர் மனத்தில் ஆயர்பாடி சிறுமிகள் சம்பாஷணை திரும்ப திரும்ப ஒலித்தது.
அமைதியான அந்த விடியற்காலையில் கோதையின் கணீர்க் குரல் இந்த பாசுரத்தை ஒலித்தபோது பெரியாழ்வார் மட்டுமல்ல அவர் நந்தவனத்திலிருந்த புஷ்பங்கள் கூட விகசித்தன. காற்றில் ஆடிய அவற்றின் தோற்றம் அந்த பாசுரத்தின் அருமையிலும் இனிமையிலும் தலை அசைப்பதை போன்று காணப்பட்டது.
விஷ்ணு சித்தர் அந்த பாசுரத்தின் இனிய உட்பொருளில் ஆழ்ந்தார்.
முன்வினை இவ்வினை பாபங்களை போக்கும் சக்தி வாய்ந்த பாசுரம். ஆண்டாள் என்ற இடைச் சிறுமி '' தோழியரே கவனமாகக் கேளுங்கள். இந்த நோன்பு விழாவிற்கு எந்த இடையூறும் இன்றி இனிதே முடிய அந்த மாயவனை, கிருஷ்ணனை வேண்டுவோம். நல்ல காரியத்திற்கு தான் எப்போதும் தடை,. கெட்ட காரியமே ஒரு தடை, அதற்கேது மற்றொரு தடை..
''என் உயிர் மூச்சே அரங்கா. என்னே உன் கருணை. இந்த இளம்பெண் மூலம் காலம் காலமாக விளக்கமுடியாத அற்புத விஷயங்கள் தெள்ளத்தெளிவாக புரியப்பண்ணுகிறாயே!''
ஒரு நல்ல காரியம் செய்வதற்குள் எத்தனை இடையூறுகள் நிகழ்கிறது. வசிஷ்டர் குறித்த நன்னாளில் ராமனுக்கு பட்டாபிஷேகம் நடந்ததா? ஆண்டாளின் தோழிகளில் படிக்காத அந்த பேதைப்பெண் மூலம் ''நீ அந்த கிருஷ்ணனை விடாமல் பூஜித்து வந்தால் அவன் நம்மை பாதுகாப்பானே. கெடுதல் வராதே. சுத்தமான பசும்பால் பருகினால் பித்தம் கிட்டே நெருங்குமா?
ராமன் ஏன் தனக்கு பட்டாபிஷேகம் வராமல் தள்ளி வைத்துக்கொண்டான் என்பதே அநேகருக்கு புரிவதில்லை. தனது பக்தர்கள், சுக்ரீவன், அங்கதன், விபீஷணன், தனது பாதுகை ,இவற்றை மதித்து அவற்றுக்கு பட்டாபிஷேகம் நடந்தபின்னரே தனது பட்டாபிஷேகம் நடக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டானே. அந்த ராமன் தானே இந்த கிருஷ்ணன். குழந்தையாக இருந்தபோதே யமுனையை வழி விட வைத்தான். யசோதை தன்னை கயிற்றால் கட்ட அனுமதித்தான். அவன் காருண்ய சிந்தோ அல்லவா?
ஏ தாமரை மலரே! அவன் திருவடிகளில் நீ குடியிருக்க கொடுத்துவைத்தவள். என் அருமை நந்தவனமே நீ மகராசி. வாரி வாரி புஷ்பங்களை வழங்கி அவை அத்தனையும் அந்த கோவிந்தனான அரங்கனை அலங்கரிக்க முடிந்ததே. உன்னோடுசேர்ந்து நானும் கொடுத்து வைத்தவனாகிவிட்டேனே. ''வாயினால் பாடி, மனிதனால் சிந்தித்து'' ...என்ன பாக்கியம்.!
பூக்களை பறித்துக்கொண்டே விஷ்ணு சித்தர் சிந்தனையில் இவ்வாறு இருக்கும்போது
அப்பா என்ற கோதையின் குரல் பெரியாழ்வாரை பூவுலகத்தில் வில்லிப்புத்தூர் நந்தவன ஆஸ்ரமத்திற்கு மீட்டது. பூக்குடலையுடன் வீட்டுக்குள் நுழைந்தார்.