Post by jksivan on Nov 3, 2013 9:03:42 GMT 5.5
கோப்பை வேதாந்தம்
கல்யாண சுந்தரம் ஒரு சாதாரணன். கோமளவல்லியை மணந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டனவே. இன்னும் ரெண்டு நாளில் ஒரு சிறு விருந்து வீட்டில் ஏற்பாடு செய்து நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் வரும்போது கோமளவல்லிக்கு ஆச்சர்யமாக தான் ஒரு பரிசு கொடுத்து அவளை அதிசயத்தில் ஆழ்த்த உத்தேசம். என்ன பரிசு கொடுப்பது. எது நம்மால் வாங்க முடியும் ?
ஒரு "சகலமும் கிடைக்கும்'' கடைக்கு சென்றான். எத்தனையோ பொருள்கள் அவனை ஈர்த்தன. விலைகள் விரட்டின. கோமளவல்லி காபி பிரியை ஆயிற்றே இந்த பரிசு சிறந்ததாக இருக்கும் என்று தீர்மானம் செய்து ஒரு அழகிய காபி குடிக்கும் கோப்பையை தேர்வு செய்தான். அது அழகாகவே இருந்ததுடன் அவனது பட்ஜெட் அனுமதி தரும் அளவில் அதன் விலையும் நட்போடு இருந்தது. மேலும் கோமளவல்லி அலங்காரமான, வினோதமான பொருள்களை விரும்பவள் என்றும் க.சு. அறிவான்.
அந்த காபி கோப்பை மண் பாண்ட வகையை சேர்ந்தது. நேர்த்தியாக செய்யப்பட்டு, பளபளவென்று வண்ணத்தில் கண்ணை காந்தமாக ஈர்த்தது. அதில் காப்பி அவள் குடிக்கும்போது அவள் எப்படி ரசிப்பாள் என்று கற்பனை செய்து பார்த்தான் க.சு.
கண்ணாடி மேசையில் குனிந்து ஆர்வமுடன் அந்த கோப்பையை பார்க்கும் வாடிக்கையாளனை வியாபாரி விடுவானா?
''அந்த கோப்பை பிடிக்குதுங்களா, வேணும்னா கையிலே எடுத்து பாருங்க ""
கோப்பை கல்யாண சுந்தரம் கையில் வந்தது. ''ரொம்பவே அழகாக இருக்குதுங்க இது. இதை மாதிரி பார்த்ததில்லை நான் ''
கல்யாண சுந்தரம் கோப்பையை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருக்கும்போது ''ஹலோ கல்யாணம். நான் இப்படியே என்னிக்கும் இருந்ததில்லை ''
யார் என்று க.சு. திரும்பிபார்த்தான். ஒருவருமில்லை. அருகேயும் யாருமில்லை. அங்கும் இங்கும் தன்னை கூப்பிட்டு பேசினவனைத் தேடினான்.
''நான் தான் காபி கப், பேசினேன்''. ஆச்சர்யமும் பயமும் கலந்த பார்வையை கோப்பை மீது திருப்பினான் க.சு.
''ஒரு காலத்தில் நான் ஒரு களிமண் கட்டியாக தான் இருந்தேன். சைதாப்பேட்டை குப்பண்ணன் தான் என்னை அள்ளி உருட்டி, பிசைந்து, தட்டி, அமுக்கி வஸ்த்ர காயம் பண்ணினான். ஐயோ ஐயோ உடு என்னை விடு வலிக்குது என்று கத்தினேன். அவன் விட்டானா?''
அவன் சிரிச்சுகிட்டே சொன்னான் "இரு இரு இன்னும் பாக்கி இருக்கு''
''என்னை ஒரு சக்கரம் மாதிரி ஒரு ராக்ஷச மிஷின் மேலே வச்சு ஒரு சுத்து சுத்தினான் பாரு. அலறினேன். கண்ணை இருட்டியது. '' நிறுத்து நிறுத்து என்னை கீழே இறக்கு'' . என்ன சொல்லியும் அவன் என்னை சக்கரத்திலே சுத்தினது நிக்கலை. ''மயக்கமா வருதே'' எதுக்கப்பா என்னை இப்படி பண்றே ''-- கெஞ்சினேன்.
''இன்னும் முடியலை வேலை '' என்று தான் அவன் பதில் வந்தது. என்னை நீட்டி, வளைத்து, உருட்டி நசுக்கி சித்ரவதை செய்தான் குப்பண்ணன். தவித்தேன். துன்பம் வந்தால் சேர்ந்து தானே வரும். என்னை திடீரென்று நெருப்பில் போட்டு விட்டான். சூடு தாங்க முடியலை. வெளியே வர வழியில்லாமல் நாலா பக்கமும் மூடிவிட்டான். நடுவே தீயில் வெந்தேன்.
''யாருமே காப்பாற்ற மாட்டார்களா'' என்று துடித்தேன். சரி நாம் தொலைந்தோம் என்று எண்ணம் தோன்றிய போது மெதுவாக கதவு திறந்தது. என்னை மௌனமாக எடுத்து பார்த்தான் படுபாவி குப்பண்ணன். ஒரு அலமாரியில் வைத்தான். ' ''அப்பாடா தப்பித்தோம்'' என்று சந்தோஷப்பட்டேன். சூடெல்லாம் ஆறியிருந்தேன். காற்று சுகமாக என் மீது வீசியது.
என்ன தோன்றியதோ அவனுக்கு தெரியவில்லை. என்னை எடுத்து மேசை மீது தன் எதிரே வைத்துக்கொண்டான். அவன் கையில் ஒரு பிரஷ். பக்கத்தில் சில கிண்ணங்களில் வண்ண வண்ண பெயிண்ட். பெயிண்டின் ரசாயன வாசனை என்னை திக்கு முக்காட வைத்தது. என் அங்கம் பூரா பெயிண்ட் பூச்சு. இந்த வாசனை கடினம். மூச்சு விடமுடியல்லை. போதும் நிறுத்தேன் என்று கத்தினேன்.
தலையாட்டினான் திருப்தியில்லாமல். இங்கே அங்கே என்று மேலும் சில வர்ணங்களை என் மீது எங்கெங்கோ பூசினான். ''இன்னும் சில வேலை செய்யணும்'' என்று அவன் முணு முணுத்தபோது ''நான் செத்தேன்'' என்று தோன்றியது.
''ஐயோ என்னை மீண்டும் அக்னி பிரவேசம் செய்ய வைத்து விட்டானே. இந்த தடவை கொஞ்சம் நீண்ட நேரமாகவே துடித்தேன். மூச்சு திணறியது. என் கெஞ்சலை யார் லட்சியம் செய்வார்கள்? ' கடவுளே காப்பாற்று'' என்று முறையிட்டேன்.
கதவு திறந்தது. என்னை மெதுவாக சிரித்துக்கொண்டே வெளியேற்றினான். மீண்டும் குளு குளு காற்றை அனுபவித்தேன் அலமாரியில் சூடிழந்தேன்.
என்னருகே சிரித்துக்கொண்டே வந்தான் ராக்ஷசன் குப்பண்ணன்
''இன்னும் என்ன பாக்கி சித்ரவதை எனக்கு வைக்கப்போகிறாய்?' தைரியமாகவே கேட்டேன் அவனிடம். இனி எனக்கு என்ன இருக்கிறது.''
''உன்னை இப்போ பார்''.
ஒரு கண்ணாடியில் நான் தெரிந்தேன். ''நானா அது? இல்லவே இல்லை ! இது ஏதோ அழகான ஒரு கோப்பை அல்லவா? நான் களிமண் ஆச்சே. நான் எப்படி இவ்வளவு அழகாக இருக்க முடியும்?
'' இப்போ புரிந்ததா. உன்னை நசுக்கி, அமுக்கி, பிசைந்து, இடித்து, உருட்டி, நீட்டி, பண்ணியபோது நீ கத்தினாயே என்று விட்டிருந்தால் இப்போ அழகாக இருப்பது போல் இருப்பாயா. விட்டிருந்தால், காய்ந்து போய் பாளம் பாளமாக விரிசல் விட்டு போயிருப்பாய். உன்னை தலை கிறுகிறுக்க சுத்தியது நீ வீணாக போகக்கூடாது என்பதற்காகவே. நெருப்பில் வாட்டியது கூட உன்னை ஸ்புடம் போட்டு பலப்படுத்தவே. உன்னை வண்ணப்பூச்சுக்கு ஆளாக்கினது கூட உன் அழகுக்கு அழகு சேர்க்கவே தானே. உன் வாழ்வில் பிறர் மெச்ச உன் அழகைத்தூக்கிக் காட்டுவது உன் வர்ணப்பூச்சு தான்.
உன்னை எவ்வாறு மேன்மை பெற ச்செயலாம் என்ற என் எண்ணம் உன்னை வெறும் களி மண்ணாக பார்க்கும்போது எனக்குத் தோன்றியது. இவ்வளவுக்குப்பிறகு நீ எவராலும் மெச்சப்படுகிறாயே. உன் வழியே சென்றிருந்தால் இது கிடைக்குமா சொல் ?''
''கல்யாண சுந்தரம் இப்போ புரிந்ததா குப்பண்ணன் ராக்ஷசன் இல்லை. என்னை காத்த கிருஷ்ணன்!'' கோப்பை மனமுருகி நன்றியோடு சொல்லியது.
க.சு. பேசவில்லை. பணத்தை கொடுத்தான். பரிசுப்பெட்டியில் ஜிலு ஜிலு பேப்பரில் சுற்றப்பட்டு உள்ளே இருந்த களிமண் கோப்பையை நினைத்தான். இல்லை இல்லை. அவன் மனம் நினைத்தது. ''கிருஷ்ணா, என்னைபோல் எத்தனை அரை வேக்காடுகள் உன் தர்மத்தை புரிந்துகொள்ளாமல் இருக்கின்றோம். எத்தனையோ பிறவிகள், துன்பங்கள், எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள், கஷ்டங்கள் வாழ்வில். நீ எங்களை மேம்படுத்த சீர் படுத்த அமைத்த படிகள் என்பதை கோப்பை மூலம் புரிய வைத்தாய். நன்றி நமஸ்காரம் உனக்கு ''