தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(12)
கீர்த்தனை-தப்பி-ப்ப்ரதிகி (11)-ராகம் தோடி-தாளம்-ரூபகம்
காம பேய்களிடமிருந்து நம்மை காத்துகொள்ளும் வழி
இக்கலியில் மாந்தர் பேராபத்துக்களில் அகப்படாமலும்
சிற்றின்பக்குளத்தில்மூழ்காமலும் திடமான மனத்துடன்
தப்பிப் பிழைத்து போவது சாத்தியமா?
வெண்கலம்,முதலிய உலோகங்களையும்
செல்வம் பொன் முதலியவற்றையும் பார்த்து
அவைகள் விஷம் என்றும் பானை ஓடுகள் என்றும்
எண்ணி மனத்தை அவற்றில் அண்டவிடாமலும்,கபடம் நிறைந்த மாதரின் மேலாடை வனப்பையும்
முடி அழகையும் கண்டு உள்ளத்தில்
ஆசை கொள்ளாமலும் தப்பி பிழைக்க முடியுமா?
சாதி, மல்லிகை,மந்தாரை ,தாமரை மலர்
இவற்றால் மனமார தியாகராஜன் அடிபணியும்
இராகவனை ராஜமார்க்கமாக பூசிக்காமல்
தப்பி பிழைக்க வேறு வழி ஏதும் உண்டா?
ஸ்வாமிகள் காலத்தில் இல்லாத பல பிசாசுகள்
நமக்கு ஆசை காட்டி நம்மை படுகுழியில்
தள்ள தற்போது உள்ளன
கை விரல்கள் மூலம் வம்பை விலைக்கு வாங்கி அழிந்து போக வகை செய்யும் கைபேசியும்,தொலை காட்சிகளும் வலைதளமும் அவர் காலத்தில் இல்லை.
கவைக்குதவாத தகவல்களை தந்து மனிதர்களை கசடர்களாக ஆக்கும் தினசரிகளும்ஊடகங்களும் அவர் காலத்தில் இல்லை.
அவர் குறிப்பிட்டுள்ள ஒரு சில பிசாசுகளே மனிதர்களின் மனதை மயக்கி மாளா துன்பத்தில்
ஆழ்த்திமீளா பிறவிக்கு வழிவகுக்கும்
என்றால் இன்றைய நிலையை பற்றி
ஒன்றும் சொல்லவே வேண்டாம்.
எனவே இவைகளில் அகப்படவேண்டாம் என்று
விரும்புபவர்கள் ராமபிரானின் திருவடிகளை சரணடைவதை தவிர வேறு வழியில்லை.
மோகத்தை கொன்றவன் ராமபிரான் ஒருவன்தான்.
எனவே அவனை சரணடைந்தால்தான்
நம்மை மயக்கி முடிவில்லா துன்பத்தில் ஆழ்த்தும்
காம பேய்களிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள இயலும்