Post by jksivan on Aug 20, 2013 9:12:35 GMT 5.5
ரெண்டே அடியில் மிக உயர்ந்த தத்துவங்களைச் சொல்ல சிலரால் தான் முடியும். தத்துவங்கள் என்றாலே புரியாத விஷயம் என்று நாம் நினைக்கும் தருணத்தில், கால கட்டத்தில், அவற்றைப்படிக்க விருப்ப மூட்டும் வகையில் அமைந்திருப்பது இந்த ராஜாவின் நீதி வாக்யங்கள் திருக்குறளில் இதே போன்று அருமையான விஷயங்கள் உள்ளது. எனினும் சில குரள்களை மற்றொருவர் விளக்கிச்சொன்னால் மட்டுமே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சில நேரடியாகவே புரிகிறது. ராஜா அப்படியல்ல. எளிய தமிழில் சிறப்பாக சொல்கிறான். ஒரு சமாசாரம் என்னவென்றால் அவன் சொல்லும் விஷயத்தின் தன்மை. மும்மலம், சுழுமுனை, இடை பிங்கல விவகாரங்களை ஏற்கனவே கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொண்டிருந்தால் இந்த வாக்யங்கள் பூரணமாக தெட்டத் தெளிவாக மண்டையில் ஏறும். .
மிகவும் சக்தி வாய்ந்த மருந்துகளை நிறைய சாப்பிடக்கூடாது. வெறும் வயிற்றில் அம்மாதிரியான மருந்துகளை உட்கொள்ளக்கூடாது. அதுபோலவே இந்த நீதி வாக்யங்களை ஒவ்வொன்றாகத்தான் அனுபவித்து படிக்கவேண்டும். அது பற்றி சிந்திக்க வேண்டும். அப்போது தான் அவற்றின் உள்ளே புதைந்து கிடக்கும் உயர்ந்த கருத்து புலப்படும்.
இன்றைக்கு ராஜாவின் உபதேசங்கள் இவையே:
வவ்வெழுத்தும் மவ்வெழுத்தும் வாளாகும் சிவ்வெழுத்தும்
அவ்வெழுத்தின் உள்ளே அடங்கி நிற்பது எக்காலம்?
எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே
அழுத்தமாய்ச் சிந்தையை வைத்தன்பு கொள்வது எக்காலம்?
அருளாய் உருவாகி ஆதி அந்தம் ஆகின்ற
குருவாக வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம்?
நான் என்று அறிந்தவனை நான் அறியாக் காலம் எல்லாம்
தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம்?
என் மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்த பின்பு
தன் மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம்?
ஒளியில் ஒளியாம் உருப்பிறந்த வாறதுபோல்
வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம்?
ஒளிஇட்ட மெய்ப்பொருளை உள் வழியிலே அடைத்து
வெளியிட்டுச் சாத்திவைத்து வீடு உறுவது எக்காலம்?
காந்தம் வலித்து இரும்பைக் கரத்திழுத்துக் கொண்டதுபோல்
பாய்ந்து பிடித்திழுத்துன் பாதத்தில் வைப்பது எக்காலம்?
பித்தாயம் கொண்டு பிரணவத்தை ஊடறுத்துச்
செந்தாரைப் போலே திரிவது இனி எக்காலம்?
ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள் எலும்பாய்க்
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம்?
ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்?
சூதும் களவும் தொடர்வினையும் சுட்டிக் காற்று
ஊதும் துருத்தியைப் போட்டு உனை அடைவது எக்காலம்?
ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்?
கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவைகளாய்ப்
புல்லாய் பிறந்த சென்மம் போதும் என்பது எக்காலம்?
தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்
பக்குவமாய் நின் அருளைப் பார்த்திருப்பது எக்காலம்?
தூரோடு அசைந்து சுழன்று வரும் தத்துவத்தை
வேரோடு இசைந்து விளங்குவதும் எக்காலம்?
பாகம் நடு மாறிப் பயந்தெழுந்த சித்திரத்தை
ஏகநடு மூலத்து இருத்துவதும் எக்காலம்?
ஓரின்பம் காட்டும் உயர்ஞான வீதி சென்று
பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்பது எக்காலம்?
காரணமாய் வந்து என் கருத்தில் உரைத்ததெல்லாம்
பூரணமாக் கண்டு புகழ்ந்திருப்பது எக்காலம்?
ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன்பின்
நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம்?
குறியாகக் கொண்டு குலம் அளித்த நாயகனைப்
பிரியாமல் சேர்ந்து பிறப்பறுப்பது எக்காலம்?