Post by jksivan on Aug 14, 2013 21:04:08 GMT 5.5
ஒரு ராஜா கதறுகிறான்
சகல சௌபாக்கியம் அனைத்தும் நிரம்ப இருந்து அதில் திளைத்து வாழ்க்கையின் லட்சியமே இது தான் என்று சந்தோஷத்தில் இருந்தான் ஒரு ராஜா. ஒரு மின்னல் வெட்டு, வானத்தில் இருந்து மழைகாலத்தில் வருமே அது அல்ல. அவன் வீட்டுக்கு உள்ளேயே அவனால் ஆசையாக நேசிக்கப்பட்ட மனைவி அவனுக்கு துரோகம் செய்தாள் என்று அறிந்தவுடன் அவனை அடியோடு மாற்றிய மின்னல்.
ஏதோ ஒரு சக்தி இத்தனை நாளாக அவனுக்குள் புகைந்து கொண்டிருந்து தக்க தருணத்தில் தலை தூக்கியிருக்க வேண்டும். .மனைவி இதற்கு காரண தேவதை என்று வேண்டுமானால் கொள்ளலாம். அரசன் ஒரு கணத்தில் ஆண்டியானான். அனைத்தையும் உதறித்தள்ளினான் கோவணாண்டியாக கப்பரையோடு திரிந்தான் அவன் உள்ளம் கரைந்து நெஞ்சின் வெடிப்பில் சிதறி விழுந்தன வார்த்தை முத்துக்கள்
அவன் வாக்கிலிருந்து அருமையான சில வாக்யங்கள் புறப்பட்டன அவற்றில் சிலவற்றை தருகிறேன். மனம் என்று ஒரு கரும்பு பிழியப்பட்டு அதன் இனிய சாறாக அவை கீழே சிந்தியுள்ளதை எடுத்து (படித்து) ருசியுங்களேன். நான் அனுபவித்த மனச் சாந்தி உங்களுக்கும் உரித்தாகட்டுமே. கடைசியில் அவன் யாரென்று தெரிந்து கொள்ளலாம்."இவ்வளவு நாள் முட்டாளாக இருந்து விட்டேனே. இறைவா உன்னருளால் இனி இதையெல்லாம் பெறுவது எப்போ? "என்று ராஜா கதறுகிறானே!
ராஜா சொல்வதே அழகாக புரியும்போது நான் யார் அதற்கு விளக்கம் சொல்ல.
"ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டெரித்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம்?
நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து
தேங்காக் கருணைவெள்ளம் தேக்குவதும் எக்காலம்?
தேங்காக் கருணைவெள்ளம் தேங்கியிருந் துண்பதற்கு
வாங்காமல் விட்டகுறை வந்தடுப்ப தெக்காலம்?
ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல்,
மாயாப் பிறவி மயக்கறுப்ப தெக்காலம்?
மாயாப் பிறவி மயக்கத்தை ஊடறுத்துக்
காயா புரிக்கோட்டை கைக்கொள்வ தெக்காலம்?
சேயாய்ச் சமைந்து செவிடூமை போல்திரிந்து
பேய்போல் இருந்துஉன் பிரமைகொள்வ தெக்காலம்?
பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்த பெண்ணைத்
தாய்போல் நினைத்துத் தவம்முடிப்ப தெக்காலம்?
கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகம்காட்டி
மால்காட்டும் மங்கையரை மறந்திருப்ப தெக்காலம்?
பெண்ணினல்லார் ஆசைப் பிரமையினை விட்டொழித்துக்
கண்ணிரண்டும் மூடிக் கலந்திருப்ப தெக்காலம்?
தந்தை, தாய், மக்கள் சோதரரும் பொய்யெனவே
சிந்தைதனில் கண்டு கிறுகிறுப்ப தெக்காலம்?
வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி
யம்பழமும் ஓடும்போல் ஆவதினி எக்காலம்?
பற்றற்று நீரில் படர்தா மரை இலைபோல்
சுற்றத்தை நீக்கிமனம் தூரநிற்ப தெக்காலம்?
கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையே காணாமல்
தேடித் தவிப்பவள்போல் சிந்தவைப்ப தெக்காலம்?
கண்ணால் அருவி கசிந்து முத்துப் போல் உதிரச்
சொன்ன பரம்பொருளைத் தொகுத்தறிவ தெக்காலம்?
ஆக மிகவுருக, அன்புருக, என்புருகப்
போக அனுபூதி பொருத்துவதும் எக்காலம்?
ராஜா சொல்வதெல்லாம் கேட்கும்போது அவன் நிலைமை புரிகிறது. அவனது கூக்குரலை ஒரே நாளில் எப்படி கேட்டுத்தீர்ப்பது. நாளைக்கு கொஞ்சம் கேட்கலாமே!.