|
Post by Amritha Varshini on Sept 26, 2017 6:28:20 GMT 5.5
"அந்த நாலு விளாம்பழ ஓட்டையும் (தோல் மேல்உள்ள ஓடுகள்) ரசத்திலே போடு, கொஞ்ச நேரம் ஊறட்டும்."-பெரியவா.
மெலட்டூர் ராமசாமி அய்யர் என்பவர் ஸ்ரீமடத்தின் பக்தர்.
ஒரு தடவை தரிசனத்துக்கு வந்தபோது நன்றாகப் பழுத்த உயர்ந்த ரக விளாம்பழங்கள் வாங்கி வந்து பெரியவா முன் வைத்து, "பெரியவா குக்ஷியில் (வயிற்றில்) இவை சேரணும்" என்று பிரார்த்தித்தார்.பெரியவா மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
விளாம்பழக் கூடை உட்புறம் அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அரை மணி கழித்துப் பார்த்தால், கூடை காலி! ஒரே ஒரு பழம் கூட இல்லை.
பூஜைக் கட்டில் பணி செய்யும் இருவர், சுவையான உட்பகுதியைத் தின்றுவிட்டு,விளாம்பழ ஓடுகள் நான்கை ஜன்னலில் வைத்திருந்தார்கள்.
பெரியவா பிக்ஷைக்கு வந்தார்கள்.
"விளாம்பழத்தை என்ன செய்தே?"
எல்லோருக்கும் தேள் கொட்டின மாதிரி சுரீரென்றது. பெரியவா இப்படியெல்லாம் குறிப்பாகக் கேட்டு வாங்கிச் சாப்பிடுகிற வழக்கமில்லையே?......
இறுக்கமான மௌனம்.பெரியவாளுக்குப் புரிந்து விட்டது. கண்களை அங்குமிங்கும் சுழல விட்டார்கள்-பெரியவா.
"அந்த நாலு ஓட்டையும் (விளாம்பழ) ரசத்திலே போடு, கொஞ்ச நேரம் ஊறட்டும்."
அந்த ரசத்தை உணவில் சேர்த்துக்கொண்டு சுவைத்தார்கள்.
பெரியவாளுக்கு விளாம்பழத்தின் மீது தனி ஆசை ஏதும் இல்லை. சுமார் நூறு விளாம்பழங்களைக் கொண்டு வந்து சமர்ப்பித்த பக்தரின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டுமே? என்ற கரிசனம்.
பழங்கள் காணாமல் போய்விட்டன. நல்ல காலமாக, நாலு ஓடுகளாவது இருந்தனவே! விளாம்பழ ஓட்டுச் சுவை சேர்ந்த ரசத்தைச் சாப்பிட்டதால் பக்தரின் பிரார்த்தனைப்படி, 'குக்ஷியில் கொஞ்சம்' சேர்ந்துவிட்டது.
பக்தர்களிடம் அத்தனை பரிவு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா ; தட்டச்சு;வரகூரான் நாராயணன்
|
|