Post by Amritha Varshini on Sept 11, 2016 8:20:23 GMT 5.5
அனைவருக்கும் வணக்கம் !
மஹான்களின் வரிசையில் பக்தை மீராவின் வாழ்க்கை சரிதம் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று. அதை கவிதையாக சொல்லலாம் எனக் கருதி ஒரு சிறு முயற்சி செய்துள்ளேன்.
மீராவின் பாடல்கள் மிகவும் பிரசித்தமானவை. மீராவின் பாடல்கள் நமது ஸம்ப்ரதாய பஜனைகளில் இன்றும் பாடப்பட்டு வருகிறது. மீராவின் மீதான காதல் நமது எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அம்மா நடித்த மீராவை பார்த்த பிறகு மேலும் வலுப்பெற்றது.
மீரா ராதையின் அவதாரம் என்று கூறப்படுவதுண்டு. இக்கவிதையை ராதையின் பிறந்த நாளான இன்று ராதாஷ்டமி தினத்தன்று வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இக்கவிதையை நூற்றான்று விழா காணும் நமது எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அம்மாவிற்க்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
மீராவின் சரிதத்தை தெரிந்தால் இந்த கவிதையை நன்கு ரசிக்க முடியம் என்பதால் அவளின் சரிதத்தையும் சிறு குறிப்பாக இத்துடன் இணைத்துள்ளேன்.
இக்கவிதையில் ஏதும் குறையிருப்பின் அது என் குற்றமே, நிறையிருப்பின் அது அந்த பரமனையே சேரும்.
ராதே கிருஷ்ணா ! ராதே! ராதே!
ஆனந்த் வாசுதேவன்
ராதாஷ்டமி | 9th Sep 2016
தருமமிகு சென்னை
--------------------------
மீராபாய்
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் மேட்தா என்னும் இடமுள்ளது. அங்கே பூநாயகன்-சந்திரமுகி தம்பதிக்கு, ஐப்பசிப் பௌர்ணமியில் மகளாகப் பிறந்தவள் மீராபாய். மிஹிரா பாய் என்றால், சூரிய, சந்திர தேஜஸ் உள்ளவள் என்று பொருள். சுருக்கமாக மீராபாய்.
சிறுமியான மீராபாய் ஒருசமயம் அரண்மனை உப்பரிகையிலிருந்து தன் அன்னையுடன் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது மேளதாளங்களுடன் ஒரு ஊர்வலம் சென்றது. "அது என்ன' என்று மீரா தன் தாயிடம் கேட்க, "நாளைக்கு திருமணம்; மாப்பிள்ளை ஊர்வலம் போகிறது' என்றாள். "அப்படியென்றால் எனக்கு யார் மாப்பிள்ளை?' என்று மீரா கேட்க, தாயானவள் வேடிக்கையாக, "மதுரா பிருந்தாவன துவாரகாதீச கண்ணன்தான் உன் கணவன்' என்றாள். பிஞ்சு மனதில் அது ஆழமாகப் பதிந்துவிட்டது.
ஒருமுறை ராயிதாஸ் என்னும் கிருஷ்ண பக்தர் அரண்மனை வந்தார். அவரிடம் அவர்வழிபட்டுவரும் ஒரு அடி உயர கிருஷ்ண விக்ரகம் இருந்தது. சிறுமி மீரா அதைக்கேட்டு அழ, அவர் தர மறுத்துவிட்டார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய கண்ணன் அந்த விக்ரகத்தை மீராவிடம் சேர்க்குமாறு கூற, மறுநாள் ராயிதாஸும் அப்படியே செய்தார். மிக மகிழ்வுடன் அதைப் பெற்றுக்கொண்ட மீரா, தினமும் அதை வணங்கினாள். சக தோழிகளுடன் சேர்ந்து கண்ணனைப் பற்றி பாடி நெகிழ்ந்தாள். கிருஷ்ண ஜெயந்தி வந்துவிட்டால் மீராவுக்கும், அவள் தோழிகளுக்கும் கொண்டாட்டம்தான். ராதையின் மறு அவதாரமே மீரா என்பார்கள் பிரேம பக்தர்கள்.
மீரா வளர்ந்துவிடவே, அவளுக்கு மணம் புரிவிக்க பெற்றோர் விரும்பினர். ராஜகுல வழக்கப்படி போஜராஜன் (ராணா கும்பா என்ற பெயருமுண்டு) என்ற மன்னனைத் தேர்ந்தெடுத்தார்கள். மீராவோ தன் தாயிடம் "கண்ணனே என் கணவன்' என்றாள். திகைத்த அவள் கண்ணனிடமே முறையிட்டாள். அன்றிரவு மீராவின் கனவில் தோன்றிய கண்ணன், "உன் அந்தரங்க பதிபக்தியை மெச்சினேன். உன் பெற்றோர் தேர்ந்தெடுத்தவரை மணந்து கொள்' என்று சொன்னான்.
அந்த போஜராஜனும் சிறந்த பக்திமான்; ஞானவான். ஸ்ரீஜெயதேவரின் கீதகோவிந்தத்திற்கு வடமொழியில் "ரஸிகப்பிரியா' என்ற விரிவுரை செய்தவன். "சங்கீத ராஜம்' என்னும் லட்சண கிரந்தம் எழுதியவன். இருவருக்கும் மிகச்சிறப்பாகத் திருமணம் நடந்தது. அனைவருக்கும் பேரானந்தம். திருமணச் சடங்குகளின்போது மீரா கணவனின் முகத்தைப் பார்த்தாள். அவளது மனோநிலை - கண்ணன்மீது கொண்ட ஆழ்ந்த பக்தியாக இருக்கலாம். போஜராஜனிடம் கண்ணன் உருவத்தையே கண்டாள். எனவே, அவளுக்குத் தன் வேண்டுதல் நிறைவேறியதில் மிகமிக ஆனந்தம்.
திருமணமான பெண் கணவன் வீடு செல்வதுதான் முறை. அவ்வாறே தனது கண்ணன் விக்ரகம் மற்றும் உடமைகளுடன் சித்தூர்கட் அரண்மனைக்கு கணவனுடன் வந்துசேர்ந்தாள். புதிதாக மணமானாலும், அவள் கணவனுடன் இன்பத்தில் ஈடுபடவில்லை. கணவனுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்தாள். குடும்பத்தினரிடமும் இதமாக இருந்தாள். மற்ற நேரங்களில் கண்ணன் வழிபாட்டிலும் பாடலிலும் ஆடலிலும் தோழியருடன் ஈடுபட்டாள். பக்தர்களும் அந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
மீரா வாழ்ந்த காலத்தில் முகலாய மன்னர் அக்பரின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. பல அரசுகள் அவருக்கு கட்டுப்பட்டு கப்பம் செலுத்திக்கொண்டிருந்தனர். அக்பர் சிறந்த கலாரசிகர். அவர் அரண்மனையில் "தான்சேன்' என்ற மிகச்சிறந்த பாடகர் இருந்தார். ஒருமுறை தான்சேன் பாட, அதிலொரு பாடலில் மெய்ம்மறந்த அக்பர், "இது யாருடைய பாடல்?' என்று கேட்டார். "இது சித்தூர்கட் ராணி மீராபாயுடையது. அவள் சிறந்த கிருஷ்ண பக்தை' என்றார் தான்சேன். "மீராவின் பாடலை நான் கேட்கவேண்டும்' என்று அக்பர் சொல்ல, "அவள் அரண்மனையில் இருப்பாள். ராஜபுத்திரர்கள் நமக்கு எதிரிகளல்லவா?' என்றார் தான்சேன். "மாறுவேடத்தில் செல்வோம்' என்றார் அக்பர். அக்பரின் கலாரசிகத் தன்மையின் ஆழத்தை நாம் உணரவேண்டும். அக்பரும் தான்சேனும் குதிரைகளில் புறப் பட்டுச் சென்று, ஒரு அடர்ந்த காட்டில் சந்நியாசி வேடமிட்டுக்கொண்டு சித்தூர்கட் அரண்மனை சென்றனர். அங்கு மீராபாயின் நெஞ்சுருகும் பாடலைக் கேட்டு நெகிழ்ந்தனர். அனைவரும் சென்றபின் அக்பர் மீராவின் பதம் பணிந்து, தன் கழுத்திலிருந்த முத்துமாலையை எடுத்து மீராவிடம் கொடுத்து, "இதை உங்கள் கண்ணனுக்கு அணிவியுங்கள்' என்று சொல்லி விடைபெற்றார். அவர்கள் காட்டுக்குள் சென்று வேடம் கலைத்து குதிரையேறிச் செல்ல, தற்செயலாக இதை சிலர் பார்த்துவிட்டனர். விவரமறிந்த ராஜகுடும்பம் பரிதவித்து, மீராவை சிறையிலடைத்தனர். சந்நியாசிகள், பக்தர்கள் வருவதையும் நிறுத்தினர். அப்போதும் அவள் கண்ணனைப் பாடுவதை நிறுத்தவில்லை. பாலில் விஷம் கலந்து கொடுத்தனர்.
பாலைக் குடித்தாள். அவளை விஷம் எதுவும் செய்யவில்லை. ஆனால் கண்ணன் விக்ரகம் கருநீலமாக மாறிவிட்டது. பார்த்தவர் அதிசயித்தனர். பிறகு ஒருமுறை பூஜைக்கான மாலை இருப்பதாகச் சொல்லி ஒரு பிரம்புப் பெட்டியை அவளிடம் கொடுத்தனர். அவள் சாகட்டும் என்ற நோக்கில் அதில் கருநாகப் பாம்பை வைத்திருந்தனர். கண்ணனுக்கு மணமுள்ள மல்லிகை மாலை பிடிக்குமே என்றெண்ணியபடி அவள் பெட்டியைத் திறந்தாள். அதற்குள் அவள் விரும்பியபடியே மல்லிகை மாலை இருந்தது! பாம்பு மாலையாயிற்று! போஜராஜன் இறந்து, அவனது தம்பி ஆட்சிசெய்து கொண்டிருந்தான். மேற்கண்ட சதிவேலைகளைச் செய்தவள் அரசனின் தங்கைதான். கண்ணனை வழிபட இத்தனை தடையேற்படுகிறதே என்று வருந்தினாள் மீரா.
ஒருநாள் இரவு கண்ணன் உருவத்தைப் பார்த்து மனதாரப் பேசிக்கொண்டிருந்தாள். கண்ணனும் பேசினான். அரசனின் தங்கை ஊதா ரகசியமாக அங்குவந்தாள். சிறைக் குள் பேச்சுக்குரல் கேட்கிறதே என்று, இருளில் வாளை வீசினாள். கண்ணன் மறைந் தான். "இரவில் வேறொரு ஆடவனுடன் பேசிக்கொண்டிருக்கிறாயே' என்று மீராவை நாடு கடத்தினர். அவள் கிருஷ்ண விக்ரகத்துடன் சாதுக்கள் சங்கங்களைத் தேடிச்சென்று ஆடிப்பாடி, சாதுக்கள் கொண்டுவரும் பிரசாதத்தை உண்டு வாழ்ந்து, கண்ணன் ஆணைப்படி பிருந்தாவனம் வந்துசேர்ந்தாள். கிரிதர கோபாலன் என்ற நாமம் அவளுக்கு மிகவும் பிடித்தமானது. அவளது பாடல்களின் முத்திரை அடி "மீரா கே ப்ரபு கிரிதர ராஜா' (மீராவின் பிரபு கிரிதாரி) என்றிருக்கும். கண்ணன் லீலாவினோதங்கள் புரிந்த பிருந்தாவனப் பகுதிகளை வலம் வந்து உருகினாள். பின்னர் அங்குள்ள கிருஷ்ண சைதன்ய மகாபிரபுவின் சீடரான ரூபகோஸ்வாமியின் ஆசிரமம் சென்று, சுவாமியை தரிசிக்க விரும்பினாள்.
ஆனால் அங்கிருந்த சீடர், "எனது குருநாதர் பெண்களைப் பார்க்க மாட்டார்' என்று சொல்லித் தடுத்தார். மீராவோ, "பிருந்தாவனத்தில் கண்ணனைத் தவிர வேறு ஆண்கள் உண்டோ?' என்று கேட்டாள். அவள் கேள்வியால் திகைத்த சீடன் உள்ளே சென்று குருவிடம் சொல்ல, மீராவின் பக்தி தரத்தை உணர்ந்த அவர் உடனே எழுந்து வெளியேவந்து, மீராவை வணங்கி உள்ளே அழைத்துச்சென்றார்.
பின்னர் கண்ணன் அரசு புரிந்து மறைந்த துவாரகை வந்து, கண்ணன் வாழ்ந்திருந்த பகுதிகளைக் கண்டு ஆடிப்பாடினாள். அப்போது சித்தூர்கட்டிலிருந்து அரச வம்சத்தினர் மீராவிடம் வந்து, மீரா சென்றபிறகு நாட்டின் வளம் சீர்குலைந்துவிட்டதாகவும், மீண்டும் நாடு திரும்பவேண்டுமென்றும் அவளிடம்வேண்டினர். "நான் கண்ணனைக் கேட்கிறேன்' என்று துவாரகை ஆலய கர்ப்பக்கிரகம் சென்றாள். அப்படியே கண்ணன் விக்ரகத்துக்குள் கலந்துமறைந்தாள்.
அவள் பாக்கள் இன்றும் பக்தர்களின் உள்ளங்களை உருகச் செய்கின்றன.
மீராவின் இந்த வாழ்க்கை சரிதத்தை படிப்பவர்க்கு பக்தி ரசம் பெருகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
ராதே கிருஷ்ணா ! ராதே! ராதே!
-------------------------------------
மீரா மீட்டிய தம்புரா
மீராயெனும் பாவையவள் நெஞ்சம்
நீராய் மனம் உருகியது கொஞ்சம்
மாறாத சிந்தனையே அவளை மிஞ்சும்
ஆராவமுதனை அடைந்தாளவள் தஞ்சம்
பெற்றோரை இளமையிலிழந்த இளமயிலவள்
உற்றோர் யாருமின்றி வளர்ந்த சிறுமலரவள்
சுற்றம் புரியாமல் பரிதவித்த இளந்தளிரவள்
கற்றோர் போற்றிக் கொண்டாடும் கவிக்குயிலவள்
தெய்வத்துறவியளித்த கிரிதாரியின் பொம்மை
மெய்யெனக் கருதி தன்னை இழந்த பதுமை
செய்யுளால் பாடி அவள் செய்த புதுமை
உய்யக் கேட்பதுவே நமக்கென்றும் இனிமை
முப்பிறவியில் மிஞ்சியதோர் வாசனை
இப்பிறவியிலும் தொடர்ந்த அவ்யோசனை
முப்பொழுதும் கண்ணனிடம் ஆலோசனை
எப்பிறப்பிலும் மறவாள் அஜ்ஜகதீசனை
இராசகுலத்துதித்த இராஜஸ்தானத்து பெண்மணி
இராசனையிழந்து உளம் வெதும்பிய கண்மணி
இராசதந்திரங்களை திருவருளால் வென்ற நாரிமணி
இராசலீலை புரிந்தவனைப் போற்றிப் பாடிய கவிமணி
காணும் பொருள்யாவிலும் கண்ணனைக் கண்டாள்
பேணும் செயலனைத்தும் அர்ப்பணம் செய்தாள்
உண்ணும் உணவனைத்தும் ப்ரசாதமெனக் கொண்டாள்
எண்ணம் அனைத்தும் அவன் நினைவாகவே இருந்தாள்
அவன் அருளாலே அரவம் மலரானது
அவன் அருளாலே நஞ்சும் அமுதானது
அவன் அருளாலே சொற்களும் கவியானது
அவன் அருளாலே அற்புதங்கள் நடந்தேறியது
அஞ்சுவோர்க்கு அபயம் நல்கும் ப்ருந்தாவனம்
கெஞ்சுவோர்க்கு காட்சி தரும் ப்ருந்தாவனம்
பிஞ்சுக் காலடிபட்ட புனிதமிகு ப்ருந்தாவனம்
நெஞ்சம் வாடி தஞ்சம் புகுந்த ப்ருந்தாவனம்
உள்ளமும் உடலும் கலந்த பிரேமரசம்
அள்ளக் குறைவின்றி பெருகும் பக்திரசம்
கள்ளம் கபடமின்றி கலந்த இன்பரசம்
தெள்ளத் தெளிவாக இனிக்கும் நாமரசம்
ஆற்றாமையால் நாடினாள் மாலவனின் பாதம்
ஊற்றுப்போல் பெருகியதே அவளின் கீதம்
மாற்றுக் குறையாத மங்கையவளின் வேதம்
காற்றினிலே கரைந்து கண்ணனைக் கலந்த நாதம்
ஆனந்த் வாசுதேவன்
ராதாஷ்டமி | 9th Sep 2016 | தருமமிகு சென்னை