Post by Amritha Varshini on May 20, 2015 6:53:37 GMT 5.5
மே 17. ’திருப்புகழ்’ குருஜி ராகவனின் நினைவு தினம். அவர் ‘கல்கி’யில் 2002-இல் எழுதிய ஒரு கட்டுரை இதோ!
மருதமலை மாமணி - குருஜி ஏ.எஸ்.ராகவன்
மலையும் மலை சார்ந்த இடமும் தமிழ் மரபில் குறிஞ்சி நிலம் என்று அழைக்கப்படுவது நமக்குத் தெரியும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்படுகின்றன. இந்த இரு நில அழகுகளையும் தனதாக்கிக் கொண்டது போன்ற நூதனப் பெயருடன் ‘மருதமலை’ என அழைக்கப்படும் ஸ்தலத்தில் முருகன் இரட்டிப்புப் பிரகாசத்துடன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான்.. ‘இருநில மீது எளியனும் வாழ எனது முன் ஓடி வரவேணும்’ என அருணகிரி நாதர் பாடியதைப் புதுமையாய் அர்த்தம் செய்து கொண்டோமானால், இக பர சுகங்களை வாரி வழங்க இந் நிலத்திலும் மேலுலகிலும் சிறப்புற நாம் வாழ்வாங்கு வாழ ஓடி ஓடி அருள்புரிபவன் அழகன் முருகன்! அதற்கு சாட்சியாக அவன் குடி புகுந்த ஸ்தலம் மருத _ மலை!
மருதமலையில் அவனைக் காண பாதை அமைத்துப் பேருந்து வசதி செய்திருக்கிறார்கள். கோவை நகருக்கு வடமேற்கே, வயல்களையும் விவசாயப் பல்கலைக்கழகத்தையும் கடந்து செல்ல வேண்டும். மருதம் கடந்து மலையை அடைந்தால், மேற்கு தொடர்ச்சி மலைச் சாரலில் ஒரு பகுதி. ஐந்நூறு அடி உயரம் ஏறிச் சென்றால், கோயில் கட்டுவதற்கென்றே இயற்கை அமைத்ததுபோல் அழகான அளவான சமதளம். சோமாஸ்கந்த மூர்த்தம் போல், இரு மலைக் குன்றுகளுக்கிடையேயான இந்தப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது மருதமலை முருகன் கோயில். வெள்ளியங்கிரி, நீலிமலை என மிகப் பொருத்தமான பெயர்கள் இரண்டு மலைக் குன்றுகளுக்கும்.
பாதை வழியே பேருந்திலும் போகலாம். நிதானமாய்ச் சூழலை ரசித்தபடி படி ஏறியும் போகலாம். ஏற ஏற, ஒரு புறத்தில் பார்த்தால் கோவை மாநகர காட்சி விரிந்து படர்ந்திருக்கிறது. இன்னொரு புறத்தில் முடிவின்றி மலைத்தொடர் நீடிப்பதுபோன்ற கம்பீரமான காட்சி.
படியேறிப் போனால் நாம் முதலில் காண்பது மயில் வாகனத்துடன் கூடிய ஒர் அழகான மண்டபம். 1915லேயே எம்.எம்.ஏ. சின்னப்ப தேவர் கட்டியதாக அறிகிறோம். வயலூரை உலகறியச் செய்தது வாரியாரின் முயற்சி என்றால், மருதமலையை முருகன் பக்தர்கள் மனத்தில் நீங்காது இடம்பெறச் செய்தது சின்னப்ப தேவரின் முயற்சிதான். தேவரின் ‘தெய்வம்’ திரைப்படத்தையும் அதில் குன்னக்குடியின் இசையில் மதுரை சோமு பாடிய ‘மருதமலை மாமணியே’பாடலையும் நினையாமல் மருதமலை சென்று வருவது இன்று தமிழர்களுக்குச் சாத்தியமேயில்லை! பல திருப்பணிகளை இக்கோயிலுக்குச் செய்திருக்கிறார் தேவர்.
படிகளில் தொடர்ந்து ஏறி இரண்டாவது மண்டபத்தை அடைந்தால், அங்கே தான்தோன்றி வினாயகர் மிகுந்த வனப்போடு காட்சி தருகிறார். அந்த பிரகாசமும் பொலிவும் மூலஸ்தானத்து முருகனின் பிரகாசத்துக்குக் கட்டியம் கூறி வரவேற்பதாக நமக்குத் தோன்றுகிறது.
இன்னும் சில படிகள் ஏறி அருணகிரி நாதர் மண்டபத்தைக் கடக்கிறோம். சமீபத்திய (20 ஆண்டுகள் முன்பு கட்டிய) கட்டுமானம் இது. அகத்தியரின் சீடனான இடும்பன் காவடி தூக்கிய கோலத்தில் இங்கே
காட்சி தருகிறான். திருப்புகழும், கந்தரலங்காரமும் கந்தரனுபூதியும் சுவர்களில் பதித்து எழுதப்பட்டுள்ளன.
மலை உச்சியில், மென் காற்றின் சுகத்தால் சதா அர்ச்சிக்கப்பட்டு நிற்கிறார் மருதப்பரான மருதலை முருகன். தண்டாயுத பாணியான இவரை ‘மருதாசலக்கடவுள்’, ‘மருத மலையப்பன்’ என்றெல்லாம் அழைத்து வழிபடுகின்றனர்.
கீர்த்தியையும் விலாசத்தையும் மகனுக்கு அளித்துவிட்டு அர்த்த மண்டபத்தில் அம்மையப்பர்கள் அமைதியாய் இருக்கிறார்கள். மார்க்கண்டேஸ்வரர், மரகதாம்பிகை என்று ஊர்ப்பெயருடன் பொருந்தும் ஒலிநயம் அமைந்த நாமங்கள் இவர்களுக்கு! வரதராஜ பெருமாள் கூட இருக்கிறார்.
மூலஸ்தான முருகனைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் என்று தோன்றுகிறது. சன்னிதியிலிருந்து அகன்று நின்று அண்ணாந்தால் பொன் விமானம் சூரிய ஒளியில் தகதகப்பதைக் கண்கூசப் பார்க்கலாம். பழைய கோயிலில் மூலவரின் புராதனத் தோற்றம் காணக் கிடைக்கிறது. இவர் சுயம்பு மூர்த்தி என்கிறார்கள். வள்ளி, தெய்வானை சன்னிதிகள் இருக்கின்றன.
மூலஸ்தானத்திலிருந்து எங்கே சென்றாலும் முருகனின் பிரகாசம் கண்களையும் கருத்தையும் விட்டு அகலாமல் கூடவே வருகிறது.
மருதமலை யமக அந்தாதி, மருதமலை அலங்காரம், மருதமலை சந்தப் பதிகம் போன்ற படைப்புகள் இத்தலம் குறித்து எழுதப்பட்டுள்ளன. ‘ஈசன் கூறிய மருதமலைச் சிறப்பு’ என்றொரு குறிப்பு திருப்பேரூர் புராணத்தில் இடம் பெற்றிருக்கிறது. (கோவை அருகே உள்ள பேரூரில், பழம்பெரும் ஈசுவரன் கோயில் இருக்கிறது.)
‘முருகன் தன் அன்பர்களுக்கு உதவி புரியும் பொருட்டு அழகிய அம்மலையாகி நின்றான். அவன் கைவேலும் மருதமரமாகி அங்கே வளர்ந்தது. பூக்கள் நிறைந்த வனங்களிடையே வண்டுகள் மருத கீதம் இசைக்கத் தொடங்கின. அந்த திவ்ய மலையில் மருதமரம் நிற்கும் குற்றமில்லாத ஒரு காட்சியிலே அது மருதமலை எனப் பெயர் பெற்றது!
இன்றும் அந்த மருதமரத்தையும் அதன் அடிப்பாகத்தில் ஐந்து விதமான மரங்கள் தழைத்து வளர்ந்திருப்பதையும் காண்கிறோம். அந்த மரத்தினருகிலேயே அழகான சுனை ஒன்று இருக்கிறது. சிவபெருமானின் திருமுடியை அலங்கரிக்கும் கங்காதேவி, பூவுலகில் குதித்து, இந்த மருதமரத்தின் வேர் வழியே பெருகி இத்தீர்த்தத்தை உண்டாக்கியதாக புராணம். அத்தீர்த்த மகிமையைக் கேட்டவர்களே நற்கதி அடைவார்கள் என்கிறது புராணம்.
அதற்காக நாம் ஸ்தல வரலாறுகளைப் படித்து, புராணம் கேட்பதோடு நிறுத்தி விடப் போவதில்லை. மருத மலையை முழுமையாகச் சுற்றிப் பார்த்துத்தான் ஆக வேண்டும்.
பிராகாரத்தை வலம் வருகிறபோது பின்புற வாயிலிலிருந்து பாதை செல்வது தெரிகிறது. அதில் மீண்டும் மீண்டும் ஏறியும் இறங்கியும் நடந்து போனால் ‘பாம்பாட்டிச் சித்தர் குகைக்குச் செல்லும் வழி’ என்ற அறிவிப்புப் பலகை காணப்படுகிறது.
தமிழுக்கும் தமிழ் மக்களின் ஆரோக்கியத்துக்கும் நிறைய செல்வம் அளித்து விட்டுத் தாங்கள் மட்டும் வெட்டவெளியையே மெய்யெனக் கொண்டு வாழ்ந்தவர்கள் சித்தர்கள். அவ்வாறு வாழ்ந்த பதினெட்டு சித்தர்களுள் பெரும்பாலோர் முருகன் குடிகொண்ட மலைச் சாரல்களில்தான் மெய்ஞானிகளாய்த் திரிந்தார்கள்!
பழனி முருகன் உருவத்தை, தமது யோக வன்மையினால் நவபாஷாணங்களைக் கொண்டு அமைத்தவர் போகர் என்ற சித்தர்தான். பழனி கோயிலில் தென்கிழக்கு பாகத்தில் போகருக்கு ஆலயமும் அவர் பூஜித்த விக்ரஹங்களும் அவரது சமாதியும் இருப்பதைக் காணலாம்.
பழனிக்கும் போகருக்கும் உள்ள தொடர்பு போன்றதுதான் பாம்பாட்டிச் சித்தருக்கும் மருத மலைக்குமான தொடர்பு. சட்டைமுனி என்பவரிடம் தீக்ஷை பெற்றவர் பாம்பாட்டிச் சித்தர். சமாதி நிலையில் அவர் அடங்கியிருந்தபடியே பல சித்துக்கள் செய்தார். மாண்டுபோன அரசனின் உடலுக்குள் புகுந்து உயிர்ப்பித்துக் காட்டினார்; செத்த பாம்பை எழுந்து ஆட வைத்தார். இதனால் இவருக்குப் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயராகிவிட்டது.
முருகனை நோக்கி மருதமலைச் சாரலில் தவம் செய்தார் பாம்பாட்டிச் சித்தர். தவ வலிமையினால் என்ன செய்ய முடியும் என்று உலகுக்கு உணர்த்த அவ்வப்போது சித்துக்களில் ஈடுபட்டார்கள் இவரைப் போன்ற பெரியோர்கள். ஆனால் அவர்கள் விட்டுச் சென்றுள்ள நிரந்தரச் செல்வம் வைத்திய நூல்களும் ஞானப் பாடல்களும் தான். அவருடைய இந்த ஒரு பாடலே அட்சர லட்சம் பெறும் அல்லவா!
‘‘தந்திரம் சொல்லுவார்
தம்மை யறியார்
தனிமந்திரம் சொல்லுவார்
பொருளை அறியார்
மந்திரம் செபிப்பார்கள்
வட்ட வீட்டிலுள்
மதிலினைச் சுற்றுவார்
வாயில் காணார்
அந்தரம் சென்றுமே
வேர் பிடுங்கி
அருள் எனும் ஞானத்தால்
உண்டை சேர்த்தே
இந்த மருந்தினைத்
தின்பீ ராகில்
இனிப் பிறப்பு இல்லை
என்று ஆடுபாம்பே.’’
இறைவன் தியானமும் அதன் மூலம் பெறும் அவன் அருளும் பிறவிப் பிணிக்கான உத்தரவாதமான மருந்துருண்டை என்பதை எத்தனை ஆணித்தரமாகச் சொல்கிறது இப்பாடல்!
[ நன்றி : கல்கி]