|
Post by Amritha Varshini on Nov 24, 2014 6:12:31 GMT 5.5
தில்லை வாழ் அந்தணர்
“ தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” ------
திருத்தொண்டத் தொகையை சுந்தர மூர்த்திநாயனார் பாடத் தலைப்பட்டபோது , இறைவனே மேற்கண்ட அடியை எடுத்துக் கொடுத்து ஊக்குவித்தார் எனில் தில்லை வாழ் அந்தணர்கள் சிவபிரானால் பாராட்டப்பெற்ற சிறப்புடையோர் என்பது விளங்குகிறது.
தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேராகும் . வேதமும் , ஆகமமும் கற்ற அறிவினர்களான இவர்கள் , அந்தணர்களுக்குரிய ஒழுக்கத்தினின்றும் பிறழாமல் , ஸ்ரீ நடராசப் பெருமானை வழிபட்டுப் பூசை புரிந்தும் அவர் அணுக்கத்தொண்டு புரிவதையும் தங்கள் தவமாகவும் , வாழ்க்கைப் பயனாகவும் கருதினர். தானத்திலும் , தவத்திலும் தலை சிறந்து விளங்கிய இவர்கள் “ கோயில்’ என்றால் அது தில்லையே என்று நினைக்கும் மரபில் சிறிதும் நீங்காது, இறைவனுடைய திருமேனியைத் தீண்டி வழிபடும் பேறு பெற்றவர்கள் என்றால் தில்லைவாழ் அந்தணர் பெருமை சொல்லவும் வேண்டுமோ ! .
“ சுந்தர மூர்த்தி நாயனார் திருத்தொண்டர் தொகை பாடத் தொடங்கும்போது , ஆரூர்ப்பெருமான் தம்முடைய திருவாக்காலே கோத்த முதல் நாயனார் , கூட்டமாக இருப்பவர் என்றால் , இவர் பெருமை சொல்லி அளவிடத்தக்கதோ ! “ என்று சேக்கிழார் பாடுகிறார்.
“ இன்றிவர் பெருமை எம்மால் இயம்பலாம் எல்லைத் தாமோ? தென்றவிழ்ப் பயனா யுள்ள திருத்தொண்டத் தொகைமுன் பாட அன் றுவன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல் முந்திரு வாக்கால் கோத்த முதற்பொருள் ஆனார் என்றால்”
Article by Smt Uma Balasubramanian (uma_kbs@yahoo.com)
|
|