Post by jksivan on Oct 6, 2014 4:46:55 GMT 5.5
லிங்காஷ்டகம் 6
சர்வேசா, உன்னை ஸ்வயம்பு என்கிறோமே. என்ன அர்த்தம்? தான்-தோன்றி -- அப்படியென்றால் எப்படி. உலகில் எதுவுமே ஒன்றிலிருந்து தானே மற்றொன்று உருவாகிறது. உலகமே பஞ்ச பூதங்களினால் தானே. மண்ணிலிருந்து தானே பானை. பானை மறைந்தால் மண்ணாகிறது. மண்? மற்றவற்றின் கலப்பு. இதெல்லாவற்றிற்கும் ஏதோ ஒன்று ஆதாரம் உண்டு அல்லவா. அது தான் ஸ்வயம்பு. அது எதையும் சார்ந்ததில்லை. அதைப் பிரித்தாலும் அதுவே தான். நீ அதுவே. ஸ்வயம்பு. பரம மூலமான வஸ்து. கலப்பில்லாத நிர்மலம்.
சகல தேவர்களும் பூத கணங்களும், ரிஷிகள், முனிவர்கள், நரர்கள் அனைவரும் போற்றி சேவிக்கும் மகாதேவா, பக்தி யொன்றே பிரதானமாக ஏற்கும் பரமேஸ்வரா , கோடி கோடி சூர்யன் ஒன்றாக கூடி அளித்தாலும் அந்த பிரகாசத்தை விட பல மடங்கு ஒளி மிக்க ஓங்கார நாதா. உன்னை வணங்காவிடில் பின் யாரை வணங்குவேன் என்று நாயன்மார்கள் அடியார்கள் போற்றும் மனப்பூர்வ வெளிப்பாடு நன்றாக புரிகிறது.
தேவகணார்சித ஸேவித லிங்கம்
பாவை-ர்பக்திபிரேவ ச லிங்கம் |
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 6 ||
உனது கைலாய பர்வதம் ஒரு ஓங்கார பர்வதமாக இருப்பதாக அறிந்து நேராக போக முடியாவிட்டாலும் படத்திலாவது தத்ரூபமாக கண்டு களித்தேன். இருக்கும் இடத்திலேயே சகலமும் அறியும் விஞ்ஞான வளர்ச்சியை மனிதனின் மூளை வளர்ச்சியில் வைத்து வாழவைக்கும் தெய்வமே. பலரும் என்னைப்போல் உன்னுடைய இந்த ஓங்கார பர்வத அழகைக் கண்டு களிக்கவே தந்திருக்கிறேன்.
இதற்கு முந்தைய லிங்காஷ்டக செய்தியில் சதாசிவா, உனது கைலாச பர்வதம் ஒரு லிங்கம் போல் அமைந்திருந்தது கண்டு களித்தது போதவில்லை. இன்று உனது வாஸ ஸ்தலமே ஓம் என்ற ஸமஸ்க்ரித எழுத்து போல் பனி படர்ந்து காட்சியளிப்பதை ஆச்சர்யம் என்பதா, அல்ல, இதுவும் ஸ்வயம்புதானோ !!