Post by J.K. SIVAN on Aug 8, 2013 5:51:29 GMT 5.5
98. லீலா வினோதம்"
சீனியப்பா புரந்தரதாசரானார். யாத்திரைகள் சென்றார். சங்கீத ஞானம் மிளிர்ந்தது. கோடிக்கணக்காக சொத்து இருந்த நவகோடி நாராயணனாக அவர் ராஜா கிருஷ்ண தேவ ராயர் அரண்மனைக்கு நவரத்னங்களை எடுத்துக்கொண்டு போன போது அரண்மனையில்அவர் லட்சியம் செய்யாத ராஜகுரு வியாசராஜர் இப்போது அவரது குருவானார்.
" உன்னை முதலில் பார்த்தபோதே என்னுள் விட்டலன் சொன்னான். ஒருநாள் நீ என்னிடம் வருவாய் என்று. உனக்காகவே இத்தனை காலம் காத்திருந்தேன்"..குரு கடாக்ஷம் சித்தியாகியது. சமஸ்க்ரிதத்திலும் கன்னடத்திலும் நிறைய கீர்த்தனங்களை வியாசராஜர் எழுதிய சங்கீத சாகரம் வியாசராஜர் குருவானார்.புரந்தர விட்டல என்கிற பேரை சீனியப்பாவுக்குச சூட்டியவர் அவரே.
துளசி மாலை, மணி, தம்புராவுடன் தினமும் உஞ்சவ்ரித்தி. தேன் மாரி பெய்ததுபோல் நாம சங்கீரத்தனம்.
" இப்படி குடும்பம், குழந்தை, சொத்து, சுதந்திரம் எல்லாம் விட்டு நவகோடி நாராயணனாக இருந்த நீ நடுத்தெரு நாராயணனாக அலைகிறாயே, உன் மனைவி, குழந்தைகள் யார் பார்த்துக்கொள்வார்கள்? பெண்ணுக்கு எப்படி கல்யாணம் ஆகும்?" உற்றாரும் உறவும் கேட்டதற்கு அவர் பதில் "யோகக்ஷேமம் வஹாம்யஹம்" என்று விட்டலன் சொன்னபோது அவன் வேலையை நான் ஏன் பார்க்க வேண்டும்" என்றார்
"சொத்தெல்லாவற்றையும் ஏழைகளுக்கு தானம் செய்து விடலாமா?" என்று மனைவி கேட்டாள்.
"நமக்கெது சொத்து. அனைத்தும் விட்டலனது. அவன் என்ன செய்கிறானோ செய்து கொள்ளட்டு" மென்று புறப்பட்டவர் புரந்தர தாசர்.
ராஜா கிருஷ்ணதேவராயர் நவகோடி நாராயணனின் திடீர் மாற்றம் பற்றி அறிந்து அவரது ஆஸ்ரமத்துக்கு தானே வந்து அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.
குருவின் ஆசியுடன் புரந்தர தாசர் பண்டரிபுரம் சென்றார். விட்டலன் அவரை ஒரே நாளில் மாற்றினான் அல்லவா?. அவனைக்காண ஓடினார் பண்டரிபுரத்துக்கு புரந்தர தாசர். பண்டரிபுரம் அடைந்தார் சந்திரபாகாவில் ஸ்நானம் செய்தார். ஆலயத்தில் பிரவேசம் செய்தார். இதோ கருட ஸ்தம்பம் தாண்டியாயிற்றே. ரங்க ஷீலா மண்டபத்தில் நுழைந்தார். விட்டலனை அணைத்துக்கொண்டார்.
அங்கிருந்த அனைத்து பக்தர்கள் பாதங்களிலும் சராணாகதி யானார்
பக்தர்களோடு உத்சாகமாக விட்டலனைப் பாடினார் ஒரு குடிசை போட்டுக்கொண்டு குடும்பத்தோடு பண்டரிபுரத்திலேயே தங்கினார். விட்டலனே அவர் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைத்தான். பிள்ளைக்கு உபநயனம் செய்வித்தான். அவரோ குடும்ப ஸ்மரணையே இன்றி விட்டல நாம சந்கீர்த்தனத்தில் ஆழ்ந்தார்.
" விட்டலா உன் நாமாவைச் சொல்லிக்கொண்டு யாத்ரை போகவேண்டும் என்று தோன்றுகிறதே"
"போய் வா"
துரோணரைக் குருவாகக் கொண்டு அவரைக் காணாமலேயே தானே வில் வித்தை கற்றுக் கொண்ட ஏகலைவன் போல் ஒரு சிஷ்யன் புரந்தரதாசருக்கு. அவனுக்கு சங்கீதம் தெரியாது. தனக்குத் தெரிந்தவரை அவருடைய கீர்த்தனங்களை மனப்பாடம் பண்ணி பாடிக்கொண்டிருப்பான். அநேகர் அவனைக்கேலி செய்தாலும் கவலைப்படவில்லை. மானசீக குரு புரந்தர தாசரை வேண்டுவான்.
ஒருநாள் புரந்தரதாசர் அவன் இருந்த வீடு பக்கமாக சென்றபோது தன்னுடைய பாடல்களை யாரோ இவ்வளவு அபஸ்வரமாக தாளமின்றி ராகமின்றி பாடுகிறானே என்று வருத்தமடைந்தார். உள்ளே செல்லவில்லை. அருவருப்புடன் மேலே சென்றார். அந்தக்கணம் முதல் புரந்தரதாசரால் பாடவே முடியவில்லை. அவருக்குப் புரிந்துவிட்டது. . நேராக வந்த வழியே திரும்பிச்சென்றார்.. அவன் வீட்டுக் கதவைத் தட்டினார். உள்ளேயிருந்து அந்த மானசீக சிஷ்யன் வெளியே வந்தான். அவர் யாரென்று அறிந்து அவரது அடிகளில் வீழ்ந்தான். அவனது சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை. புரந்தர தாசர் அவனை அணைத்துக் கொண்டார். நீயே எனது சிஷ்யன் என்று அவனை ஏற்றுக்கொண்டார். ஆச்சர்யமாக, புரந்தர தாசருக்கு பேச்சும் பாட்டும் முன்போல் வந்தது .
புரந்தர தாசருக்கு ஒருநாள் தனது அந்திம காலம் நெருங்கிவிட்டதே என்று தோன்றியதால் யாராவது ஒரு சிஷ்யனைப் பிடித்து அவனிடம் தனது சங்கீத சக்தியெல்லாம் தந்துவிட எண்ணம் உதயமாயிற்று. யாரிடம் கொடுப்பது என்று தேடினார். பண்டரிபுரத்தில் ஒரு தாசி. அவள் விட்டல பக் பரிசுத்தமானது என அறிந்தார். அவளது குரலும் இறைவன் அருளால் இசைக்கு ஏற்றதாக இயற்கையிலேயே அமைந்திருந்தது.. நேராக அவள் வீட்டுக்கு சென்றார்.. "தினமும் காலையும் மாலையும் புரந்தர தாசர் அந்த தாசி வீடே பழி" என்று கிடக்கிறார் என்று அவரைப்பற்றி அவதூறாக பேசினார்கள் அனைவரும். அவரோ அவளுக்கு தனது சங்கீதத்தை எல்லாம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். விட்டலன் பொறுப்பானா? தனது பக்தனுக்கு அவப்பெயர் வர அனுமதிப்பானா? திட்டம் வகுத்தான்.
ஒருநாள் விட்டலன் மேல் இருந்த விலையுயர்ந்த ஆபரணம் காணாமல் போய்விட்டது. கோவில் நிர்வாகிகள் அர்ச்சகர் எல்லோரும் ராஜாவிடம் சொல்லிவிட்டனர். காவலாளிகள் வந்து கோவில் பணியாளர்களை எல்லாம் அடித்து உதைத்து விசாரித்தனர் ஒரு பணியாள் அந்த தாசி வீட்டிலும் வேலை செய்பவன். காணாமல் போன நகையை தாசி வீட்டில் தான் பார்த்ததாக சொல்லி விட்டான். தாசி வீட்டில் விசாரணை நடந்தது .ஆபரணம் கிடைத்தது. தாசி தனக்கு அது தன் வீட்டில் எப்படி வந்தது என்று தெரியாது. அடிக்கடி வரும் புரந்தரதாசர் ஒரு வேளை கொண்டு வந்திருக்கலாம். வேறு யாரும் வீட்டுக்கு வருவதில்லை என்றாள் . ரங்கஷீல் மண்டபத்தில் எல்லோர் முன்னிலையில் ஒரு காலத்தில் நவநிதியில் திளைத்த நவகோடி நாராயணன் இன்று திருடனென கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டார். சவுக்கு ரெடியானது. அவரை அடிக்க வரும்போது, அவர் அமைதியாக "எல்லாம் விட்டலனின் லீலை. நான் யார் இது பற்றி நினைப்பதற்கு" என்றார்.
ராஜாவே நேரில் வந்துவிட்டார் சவுக்கு ராஜாவின் கைக்கு போயிற்று. ராஜா சவுக்குடன் கோபத்துடன் புரந்தரதாசரை அணுகினார் " நீ ஏன் விட்டலனின் ஆபரணத்தை திருடினாய்"
புரந்தர தாசர் பதிலே சொல்லவில்லை. "கொடுப்பதைக் கொடுத்தால் தான் பதில் வருமா" கோபங் கொண்ட ராஜா சவுக்கை ஓங்கினார். யாரோ பின் நின்று சவுக்கைப் பிடுங்கினார்கள். யாருமே பின்னால் இல்லை, சவுக்கைக்காணோமே. அரசாக கர்பகிரகத்திலிருந்து ஓடி வந்து "விட்டலனின் காலின் கீழ் ஒரு சவுக்கு கிடந்தது ' என்று கொண்டு வந்து கொடுத்தார்.
ராஜாவும் மற்றவர்களும் தவறை உணர்ந்தனர். புரந்தர தாசரை விடுவித்தனர். அவர் கால்களில் விழுந்தனர். மன்னிப்புக் கேட்டனர் அனைவரும் விட்டலனிடமும் மன்னிப்பு கேட்க அவன் முன் நின்றனர்.
"விட்டலா எனக்குத் தெரியும் இது உன் விளையாட்டே" என்று தாசர் சொல்லியபோதே அனைவரும் விட்டலன் கழுத்தில் காணாமல் போயிருந்த ஆபரணம் ஜொலிப்பதையும் பார்த்தனர். அதிசயித்தனர் .