Post by J.K. SIVAN on Aug 6, 2013 21:28:58 GMT 5.5
தேனான வேமனா 4
குலமுலோன நொகடு குனவந்துடுண்டின
குலமு வெலயு வானி குணமு சேத
வேலையு வுனமுலோன மலயஜம் புன்னட்ளு
விச்வதாபி ராம விநுரை வேமா
நம்முள் எத்தனையோ குலம் இருக்கிறது. அந்த ஒவ்வொரு குலத்திலும் யாராவது ஒருத்தன் நல்ல குணமுள்ளவனாக மட்டும் இருந்துவிட்டா னேயானால் அந்த குலமே அவன் ஒருத்தனின் நற்குணத்தால் சீரும் சிறப்பும் அடையுமே. எத்தனையோ காட்டு
மரங்கள் அடர்ந்த .காட்டில் ஒரே ஒரு சந்தமரம் இருந்தால் போதுமே காடு முழுதும் மணக்குமே.
கோபமுனனு கனத கொஞ்சமை போவுனு
கோபமுனனு மிகுல கோடு கலகு
கோப மடசெ னேனி கோர்கேலு ஈடேரு
விச்வதாபி ராம விநுர வேமா
ஒருத்தனுடைய பெருந்தன்மை மரியாதை கவுரவம் எல்லாமே கோபத்தால் காற்றில் பறந்து போகிறதே. அதுமட்டுமில்லை. எல்லையில்லாத துன்பமும் வந்து சேர்கிறது.
ஒரு ரகசியம் -- கோவத்தை விடு.உனக்கு எவ்வளவு நன்மை வந்துசேரும், நினைச்சதெல்லாம் நிறைவேறும். அனுபவித்து பார்.
சம்பதகினயட்டி சத்ருவு தனசேத
சிக்கெனெனி கீடு செயராது.
பொசகமேலு செசி பொம்மனுடே மேலு
விச்வதாபி ராம விநுர வேமா
யோசித்து பார். உன்னுடைய வைரி எதிரி உன்னிடம் வகையாக மாட்டிக்கொண்டான். அவனே எதிர் பார்க்காதபடி, ஒரு தீங்கும் அவனுக்கு செய்யாமல், அவனுக்கு நீ அன்போடு நன்மையே செய்து "நீ போப்பா" என்று அனுப்பிவைக்கிறாய். அடுத்த நிமிஷமே ஆள் அடியோடு மாறிவிடுவான். இது அவன் மனம் மாற சிறந்த மார்க்கம்
சிக்கியுன்ன வேளா சிம்ஹம்புனைனணு
பக்க குக்க கரசி பாத சேயு
பலிமி லேனி வேளா பந்தம்பு செல்லது
நிறைய பலம் மிக்க சிங்கமாயிருந்தாலும் அதன் சக்தி குறைந்து போய்விட்டால் கேவலம் ஒரு சொறி நாய் கூட அதைக் கடித்து துன்புறுத்த முடியும். உன்னுடைய மனோ பலம் மட்டும் குறைய விட்டு விட்டாயானால் உனக்கு உறுதியும் இருக்காது பெருமையும் சேராது. புரிந்துகொள்.
தனது நாத்மயந்து தைவம்பு கலுகங்க
தீர்த்த யாத்ரல கீல திருகு நறுடு
கந்தபு துநுகல காட்தெ மோசினயட்லு
விச்வதாபி ராம விநுர வேமா
ஒரு வேடிக்கை பார்த்தாயா? நமக்குள்ளேயே ஆண்டவன் இருக்கிறான் என்பதே தெரியவில்லை. அவனை எங்கேயோ தேடிக்கொண்டு நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்துகொண்டு தீர்த்த யாத்திரை செல்கிறோமே. தேவையா? நீயோ நானோ இப்படி செய்கிறவர்களாயிருந்தால், தான் சந்தனக்கட்டையை சுமக்கிறோம் என்பது கூட தெரியாமல் நடக்கிற கழுதைகளோ?
தல்லி தன்ருல மீத தயலேணி புத்ருண்டு
புட்டநேமி வாடு கிட்டநேமி
புட்டலோனி செதலு புட்டவா கிட்டவா
விச்வதாபி ராம விநுர வேமா
பெத்த அப்பா அம்மா மீது கொஞ்சம் கூட பாசமில்லாத ஒரு மகன் இருந்தென்ன இல்லாதென்ன? புற்றில் பிறந்து, யாருக்கும் உபயோகப்படாமல் உழன்று கடைசியில் அந்த புற்றிலேயே சாகும் கரையானுக்கும் அவனுக்கு ஒரு வித்தியாசமும் தெரியலையே!.
(வேமனாவிடம் மேலும் சில புத்திமதி பெற்று தருகிறேன்) . .