Post by Amritha Varshini on Mar 17, 2014 6:51:03 GMT 5.5
திருக்குறுங்குடி அழகிய புடைப்புச் சிற்பம்
பிரம்மனால் உலகைப் படைப்பதற்கு உதவி புரிவதற்காக தக்ஷன் முதலான பத்து பிரஜாபதிகள் படைக்கப்படுகிறார்கள். மகாபாரதத்தின்படி காஸ்யபர் என்னும் ரிஷி ஒரு ப்ரஜாபதி.அவருக்கு கத்ரு என்றும் வினதா என்றும் மனைவிகள். (இன்னும் தேவர்களுக்கு தாயான அதிதி என்று ஒரு மனைவியைப் பற்றியும் குறிப்பு உள்ளது) கத்ருவிற்கு அனைத்து பாம்புகளும் பிறக்கின்றன. வினதைக்கு இரு முட்டைகள் பிறக்கின்றன. காஸ்யபரின் சொற்படி வினதை அந்த முட்டைகளை பாதுகாத்து வைத்திருக்கின்றாள். வெகு நாட்கள் ஆகியும் முட்டைகளில் எந்த மாற்றமும் ஏற்படாததால் வினதை ஒரு முட்டையை உடைத்துப் பார்க்கிறாள். அதிலிருந்து தலையிலிருந்து இடுப்பு வரை வளர்ந்த ஒரு அழகிய இளைஞன் வெளி வருகிறான். அவசரப்பட்டு முட்டையை உடைத்து தன்னுடைய வளர்ச்சியைத் தடுத்த தன் தாயை சிறிது காலம் அடிமைத்தளையில் சிக்குமாறு அந்த இளஞனான அருணன் சாபம் இடுகிறான். இன்னொரு முட்டையில் இருந்து உரிய காலம் முடிந்ததும் இன்னொரு அழகிய இளைஞனான கருடன் அழகிய இறகுகளுடன் மிக வேகமாக பறக்கும் சக்தியுடன் பிறக்கிறான்.
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி பாற்கடலின் வயிறு கலக்கி கடைந்த பொழுது பல பொருட்கள் அதிலிருந்து தோன்றின. அவற்றில் ஒன்று உச்சைஸ்ரவம் என்ற முழுவதும் வெண்மையான குதிரை.
ஒரு நாள் மாலையில் கத்ருவும், வினதையும் கடற்கரையில் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது தூரத்தில் இந்த உச்சைஸ்ரவம் என்ற வெண்குதிரையைப் பார்க்கிறார்கள். வினதை அந்தக் குதிரையின் வெண்மைத் தன்மையைப் புகழும் பொழுது கத்ரு அந்தக் குதிரை முழு வெண்மையானது இல்லை என்றும் அதன் வால்புறத்தில் கருப்பு முடிகள் உள்ளன என்றும் கூறுகிறாள்.
சிறிது வாக்குவாதத்திற்குப் பிறகு யார் சொல்வது உண்மையோ அவளுக்கு மற்றவள் அடிமையாக வேண்டும் என்று இருவரும் பந்தயம் இடுகின்றனர். ஆனால் இருள் சூழ்ந்து விட்டதால் மறுநாள் காலை அந்த குதிரையை அருகில் சென்று பார்க்கலாம் என்று முடிவு செய்கின்றனர்.
அன்று இரவு கத்ரு தன் பிள்ளைகளான பாம்புகளை அழைத்து மறுநாள் தாங்கள் அந்தக் குதிரையைப் பார்க்கும் பொழுது பாம்புகள் அந்த வாலில் ஒட்டிக்கொண்டு வாலில் அங்கங்கே கருப்பு முடிகள் இருப்பது போன்று தோன்ற வைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறாள். தாயின் சாபத்திற்குப் பயந்து பாம்புகளும் மறுநாள் அவ்வாறே செய்கின்றன. வினதை தான் தோற்று விட்டதாக ஒப்புக்கொண்டு கத்ருவிற்கு அடிமையாகிறாள்.
வினதையின் மகனாகிய கருடனிடம் கத்ரு தன் மக்களாகிய பாம்புகளை வெகு தூரத்தில் இருக்கும் ஒரு தீவில் விட்டு விட்டு வரச் சொல்கிறாள். அடிமையாகிய தன் தாயின் சொற்படி அந்தப் பாம்புகளை அந்தத் தீவில் விட்டு வருகிறான் கருடன். இவ்வாறு பல வேலைகளைச் செய்யச் சொல்கிறாள் கத்ரு.
தன் தாயின் அடிமைத்தனத்தை போக்க எண்ணிய கருடன் கத்ருவிடம் ’என்ன கொடுத்தால் தன் தாயின் அடிமைத்தனத்தை விடுவிப்பீர்கள்?’ என்று கேட்கிறான். அதற்கு கத்ரு, தேவர் உலகில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் அமுதத்தைக் கொணர்ந்து தன்னிடம் கொடுத்தால் வினதையின் அடிமைத்தனத்தை விடுவிப்பதாக்க் கூறுகிறாள்.
அவ்வாறே, அமுதத்தைக் கொண்டு வருவதற்கு வினதையிடம் விடை பெறும் கருடன் வெகு தூரம் சென்று அமுதத்தைக் கொணர சக்தி அளிக்கும் படியான உணவு வேண்டும் என்று கேட்கிறான். வினதை இடையில் ஒரு தீவில் இருக்கும் நிஷாதர்களை உண்பாயாக என்று கூறுகிறாள். அவ்வாறே கருடனும் பல நிஷாதர்களை உண்கிறான். அப்பொழுதும் அவன் பசி அடங்காதலால் தன் தந்தையான காஸ்யபரிடம் உணவு கேட்கிறான்.
அதற்கு காஸ்யபர் இன்னும் சற்று தூரத்தில் ஒரு ஏரி இருக்கிறது. அங்கு ஒரு பெரிய யானையும் ஆமையும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும். முற்பிறவியில் சொத்துத் தகறாரில் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் யானையாகவும் ஆமையாகவும் சபித்துக் கொண்ட விபாவசு மற்றும் சுப்ப்ரிதா என்ற சகோதரர்களே இவர்கள். இப்பிறவியிலும் விடாமல் அதே சண்டையைத் தொடர்கிறார்கள். இந்த யானையையும் ஆமையையும் நீ உண்பாயாக. என்று கூறுகிறார்.
அவ்வாறே கருடன் அந்த யானையையும், ஆமையையும் இரண்டு கைகளிலும் பற்றிக் கொண்டு அருகில் உள்ள ஒரு காட்டில் ஒரு ஆலமரத்தின் கிளையில் அமர்ந்து அந்த மிருகங்களை உண்ண ஆரம்பிக்கும் பொழுது அவனது பாரம் தாங்காமல் அந்தக் கிளை முறிய ஆரம்பிக்கிறது. அந்தக் கிளையில் வாலகில்யர்கள் என்ற ஒரு கட்டை விரல் அளவே உள்ள பல ரிஷிகள் தலைகீழாக அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதை கருடன் பார்க்கிறான். கிளை கீழே விழுந்து அவர்களுக்கு எந்த இடையூறும் நேர்ந்து விடக்கூடாது என்று அந்தக் கிளையை தன்னுடைய அலகில் பற்றிக்கொண்டு வேறு இடத்தில் அவர்களை இறக்கி விட்டுவிட்டு பிறகு அந்த மிருகங்களைப் புசிக்கலாம் என்று ஒரு கையில் யானை, மறு கையில் ஆமை அலகில் முனிவர்களுடன் கூடிய ஆலமரத்தின் கிளை ஆகியவற்றோடு, தன் தந்தையின் அறிவுரைப்படி கந்தமாதனம் என்னும் மலையை அடைந்து முனிவர்களை அங்கு இறக்கிவிட்டு, அந்தக் கிளையைத் தூக்கி எறிந்து விட்டு அந்த ஆமையையும் யானையையும் உண்கிறான் கருடன்.
வாலகில்யர்கள் என்னும் கட்டை விரல் அளவே உள்ள 48000 முனிவர்கள் தினமும் சூரியனின் கதிர்களையே உணவாக உண்டு அவனது தேரிலேயே இருந்து சூரியனைத் துதித்துக்கொண்டு இருப்பவர்கள். ஒருமுறை காஸ்யபர் பிள்ளை வரம் வேண்டி ஒரு யாகம் செய்யும் பொழுது அதற்கு வேண்டிய பொருட்களை அனைவரும் சேகரித்து வந்தனர். இந்திரன் மிகவும் பலம் வாய்ந்தவனாதலால் பெரிய மரங்களை வெட்டி ஹோமத்தில் இடுவதற்கு சமித்தாக தான் ஒருவனாகவே எடுத்து வந்தான். இந்த வாலகில்யர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பலாச குச்சியை மிகவும் சிரமப்பட்டு எடுத்து வந்தனர். ஒரு பசு மாட்டின் குளம்பின் தடத்தில் நிரம்பி இருந்த நீரைத் தாண்ட முடியாமல் தவித்த இந்த முனிவர்களைப் பார்த்து இந்திரன் அவர்களை பரிகாசம் செய்தான். இதனால் கோபமடைந்த அந்த முனிவர்கள் தங்களது தவ வலிமையால் இன்னொரு இந்திரனை உருவாக்க முனைந்தனர். பிறகு காஸ்யபர் மற்றும் பிரம்மனின் தலையீட்டால் தங்கள் தவ வலிமையால் இந்திரனை வெற்றி கொள்ளும். ஒரு மகன் காஸ்யபருக்கு பிறக்குமாறு செய்தனர். அந்த மகனே கருடன். தான் பிறக்கக் காரணமானவர்களுக்கு தீங்கு நேரக்கூடாது என்றே கருடன் அந்த முனிவர்களை கந்தமாதன மலையில் பத்திரமாக இறக்கி விடுகிறான். மேலும் இந்த சாபத்தினால்தான் இப்பொழுது கருடன் இந்திரனிடமிருந்து அமுதத்தைக் கவர்ந்து செல்ல வருகிறான்.
பிறகு தேவர்களை வென்று அமுத கலசத்தை எடுத்து வந்து கத்ரு எதிரில் தர்ப்பைப் புல் பரப்பி வைத்து அதன் மேல் வைக்கிறான். அமுத கலசம் கிடைக்கப் பெற்றவுடன் கத்ரு வினதையின் அடிமைத் தனத்தை விடுவித்து விடுகிறாள். அமுத கலசத்தை கொண்டு வர வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை ஆதலால், கத்ருவும், நாகங்களும் குளித்து விட்டு வருவதற்குள் அந்த அமுத கலசத்தை தன்னுடன் நட்பாகி விட்ட இந்திரன் மூலம் திரும்ப எடுத்துச் செல்ல வைத்து விடுகிறான் கருடன். திரும்பி வந்த பாம்புகள் அமுதத்தைக் காணாமல் அந்த தர்ப்பையில் சிந்தியிருந்தால் அந்த அமுதத்தையாவது சாப்பிடலாம் என்று தர்ப்பையை நக்குகின்றன. அந்த தர்ப்பையின் கூர்மையான முனைகள் கிழித்து பாம்புகளின் நாக்கு இரண்டாக பிளந்தது. அதனால்தான் பாம்புகளுக்கு பிளவு பட்ட நாக்கு அமைந்து இருக்கிறது.
இந்த நிகழ்வுகள் மகாபாரதத்தில் முதல் பகுதியான ஆதி பர்வத்தின் உட்பிரிவான ஆஸ்தீக பர்வத்தில் இன்னும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி என்னும் ஊரில் நம்பிராயர் சன்னிதி என்னும் வைணவத் திருத்தலத்தில் கோபுரத்தின் உள் நுழைந்ததும் வலது பக்கம் இந்த - கருடன் ஆமை, யானை ஆகியவற்றை இரு கைகளிலும் முனிவர்களுடன் கூடிய மரக்கிளையை தன் அலகிலும் வைத்துக் கொண்டு கந்தமாதன மலையை நோக்கி பறப்பது போன்ற அழகிய புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. கருடனின் இடது கையில் ஆமையும் அதன் அருகில் ஆலமரம் ஒரு கிளை முறிந்த நிலையில் இருப்பதும், முறிந்த கிளையில் ஆல இலையின் வடிவம் தத்ரூபமாக கனி மற்றும் மொட்டுக்களோடு வடித்திருப்பதும், தலைகீழாகத் தவம் புரியும் முனிவர்களும், சிறகுகள் விரிந்த நிலையில் கருடன் பறப்பது போன்ற அமைப்பும், கருடனின் கால் அடியில் கடல் என்று குறிப்பிட நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மகர மீன் செதுக்கியிருப்பதும், கந்தமாதன மலை அருகில் அமைத்திருப்பதும் அந்த மலையில் ஒரு புலியின் வடிவம் அமைதிருப்பதும் இந்த அற்புதமானதும் அரியதுமான சிற்பத்தின் சிறப்புகள்.
இந்த சிற்பத்தை நன்கு புரிந்து கொள்ள இந்த விளக்கம் அவசியம் என்பதால் பதிவு பெரியதாக அமைந்து விட்டது. பொறுமையாகப் படிக்க வேண்டுகிறேன்.
ஆங்கிலத்தில் Jonathan Swift என்பவரால் ’Lilliput’ என்ற ஊரில் வசித்து வந்த 6 அங்குல உயரமே உள்ள மனிதர்களைப் பற்றிய Gulliver's Travels என்ற நூல் 18ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆனால் இந்தியாவில் மகாபாரதத்திலேயே கட்டை விரல் அளவு ரிஷிகளைப் பற்றிய குறிப்பு வருகிறது.
இந்த கோவில் ஒரு சிற்பக் களஞ்சியம்.