Post by Amritha Varshini on Dec 14, 2013 6:39:53 GMT 5.5
கஷ்டம் போக்கும் நாம சங்கீர்த்தனம்!
பரம்பொருளான இறைவனை அடைய அவனிடம் பக்தி செலுத்த பல வகைகள் உண்டு. அவற்றுள் முக்கியமான வழி, இறைவனின் திருநாமத்தைச் சொல்லிப் பாடுவது. இதை "திவ்ய நாம சங்கீர்த்தனம்' என்பர். கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம் ஒன்றே மிகச்சிறந்த வழி. "நாம சங்கீர்த்தனம் பெரிய பயன்கள் அளிக்க வல்லது; நாம சங்கீர்த்தனத்தின் பெருமையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது' என்பர்.
"இறைவனிடம் மனம் ஒன்றாமல் சிதறுமானால் அதை அடக்க ஒரு வழி இருக்கிறது. அது கைகளைத் தட்டியபடி இறைவன் திருநாமங்களைப் பாடல்களாகப் பாடுவது. ஒரு மரத்தின் அடியிலிருந்து கைதட்டினால், அம்மரத்தின் கிளைகளில் அமர்ந்திருக்கும் பறவைகள் நாலாப் பக்கங்களிலும் சிதறி, சிறகடித்துப் பறந்து போவதைப் போல இறைவனின் லீலைகளையும் அவனது பெருங் கருணையையும் பாடலாகப் பாடி, கைத்தட்டியபடி நாம சங்கீர்த்தனம் செய்தால், நம் உள்மனத்திலுள்ள தீய சிந்தனைகள் எல்லாம் அகன்றோடிவிடும். கைகளால் தாளம் போட்டுக்கொண்டே இறை நாம சங்கீர்த்தனம் செய். அப்போது உனக்கு ஏகாந்த சிந்தி உண்டாகும்' என்று தன் சீடர்களிடம் கூறினாராம் ஒரு குருநாதர்.
அவரவர் மனப் பக்குவத்துக்கு ஏற்ப அந்தந்த வழிகளில் முயன்றால் ஏகாந்த சித்தி ஏற்படும். இது எந்த அளவுக்கு உண்மை என்பதை நாம சங்கீர்த்தனம் செய்வோரும் அதைக் கேட்போரும் நன்கு உணர்வர்.
ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் பீஷ்மாச்சார்யார், பகவானின் நாம ஜபமானது ""பவித்ரானாம் பவித்ரம்யோ மங்களானாஞ்ச மங்களம்'' - அதாவது, பகவத் நாம சங்கீர்த்தனம் நம்மை புனிதமாக்கி நற்பலன்களைக் கொடுக்கும் என்கிறார். ஸ்ரீஆதிசங்கரர், விஷ்ணுசஹஸ்ரநாம பாஷ்யத்தில் வினாவும் எழுப்பி, விடையும் கூறியுள்ளார்.
அர்ச்சா மார்க்கம் ஏற்றம் பெற என்ன காரணம்?
இடம், காலம், உபயோகப்படுத்தப்படும் பொருள்கள் ஆகியவற்றில் ஹிம்சைக்கோ பாவத்திற்கோ இடம் இல்லை. எனவே, ஸ்துதி மற்றும் அர்ச்சா மார்க்கம் ஏற்றம் பெற்றது'' என்கிறார்.
மேலும், பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், ""யஞ்ஞானாம் ஜப யஞ்ஞோஸ்மி'' அதாவது, அனைத்து வகை யஞ்ஞங்களிலும் நான் ஜப (நாம சங்கீர்த்தனம்) யஞ்ஞமாக இருக்கிறேன் என்கிறார்.
ஸ்ரீவிஷ்ணு புராணம், கிருத யுகத்தில் த்யான மார்க்கத்திலும், த்ரேதாயுகத்தில் யஞ்ஞங்களாலும், துவாபர யுகத்தில் அர்ச்சா வடிவை பூஜிப்பதாலும் கிடைக்கும் பலன் (அதாவது பகவத் அனுக்கிரஹம்) கலியுகத்தில் நாம சங்கீர்த்தனத்திலேயே எளிதில் கிடைத்துவிடும் என்கிறது.
"ஹரேர் நாமைவ நாமைவ நாமைவ மம ஜீவனம், கலெü நாஸ்தியேவ நாஸ்தியேவ நாஸ்தியேவ கதிர் அன்யதா'' - ஹரிநாம சங்கீர்த்தனமே, ஹரிநாம சங்கீர்த்தனமே, ஹரி நாம சங்கீர்த்தனமே எனது ஜீவனம். கலியுகத்தில் வேறு வழி கிடையாது, வேறு வழி கிடையாது என்கிறது பிருஹத் நாரதீய புராணம்.
"கெடும் இடராயவெல்லாம் கேசவாவென்ன நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்'' - பகவானின் திருநாமத்தை உச்சரிக்கும் பக்தர்களை யம தூதர்கள் நெருங்கவும் அஞ்சுவர். இதனால் நமது துயர்கள் அனைத்தும் விலகும் என்கிறார் நம்மாழ்வார். ""நலம் தரும் நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம்'' என்றுள்ளார் திருமங்கையாழ்வார். இப்படி ஸ்ரீகிருஷ்ணன் முதல், பல ஆச்சார்யார்களும், பல அருளாளர்களும் இறைவனின் திவ்ய நாம சங்கீர்த்தனத்தைப் போற்றியுள்ளனர்.