Post by Amritha Varshini on Oct 20, 2013 20:07:04 GMT 5.5
இன்னொரு திருஞானசம்பந்தர்?
கண்ணை மூடிக்கொண்டு அந்தப் பாடலைக் கேட்டால் நாம் படித்தும் கேள்விப்பட்டும் மட்டுமே அறிந்திருந்த திருஞானசம்பந்தரே பாடுகிறாரோ என்று தோன்றுவது, மிகையல்ல; உண்மை. அப்படி நம் கருத்தைக் கவரும் பாலகனின் பெயர் நந்திகேஸ்வரர். பதினெட்டு ஆண்டுகளாக தவமாய் தவமிருந்த சிவபாஸ்கரன்- சிவகமலாம்பாள் தம்பதியரின் புதல்வன். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலய நந்திகேஸ்வரரை 1999ம் ஆண்டு பிரதோஷத்தன்று தரிசித்து, புத்ரபாக்கியம் அருளினால் அவர் பெயரையே வைப்பதாகிய வேண்டுதலின் நற்பலன்! பிறந்த நாள் முதலே தாயார், வழக்கமான தாலாட்டிற்குப் பதில் சிவத்துதிகளை நீலாம்பரி ராகத்தில் பாடியும் நாயன்மார்கள் கதை, தேவியர் பிரபாவம் கதைகளைச் சொல்லி தூங்க வைப்பாராம்.
தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்த பின்பே சிற்றுண்டி அருந்துவார், தாய் சிவகமலாம்பாள். அப்போதெல்லாம் நந்திகேஸ்வரரும் கூடவே நின்று தாயாரின் செயல்களை உன்னிப்பாக கவனிப்பது வழக்கம். ஒருநாள், பக்கத்து வீட்டு அன்பர் ஓடி வந்து, ‘பாருங்கள் உங்கள் மகன் நந்திகேஸ்வரர் இனிமையாக பாடி, சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருக்கிறார்’ என்றாராம். ஆவலுடன் ஓடிச்சென்றார் தாயார். அங்கே, நந்திகேஸ்வரர், ‘ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்’ என்று பாடியபடி ஆனந்தக் களிப்பில் இருந்தாராம். மூன்று வயதுகூட நிரம்பாத அந்தக் குழந்தைக்கு யார் இந்தப் பாடலைக் கற்பித்தது? வ.உ.சி. நகரில் எங்கள் வீட்டின் எதிரில் இருந்த பவானீஸ்வரி அம்மன் ஆலயத்தை அவர் காண்பித்தார், சிவகமலாம்பாள் அந்த இனிய நாளை நினைவு கூர்ந்தார்.
‘‘அன்றிலிருந்து அவர் என்னிடம் எந்தக் கதையும் கேட்கவில்லை. தியான நிலையிலேயே இருந்தார். ஒருநாள், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ‘டோலாயாம்...’, ‘குறை யொன்றும் இல்லை...’ பாடல்களை ராகம், சுருதி தப்பாமல் கணீரென்று பாடியபோது அப்படியே அசந்துவிட்டேன். ‘‘அதுமட்டுமல்ல, தொடர்ந்து தினமும் இருவேளைகள் சிவனுக்கு அபிஷேகம், பூஜை என்று செய்ய ஆரம்பித்து விட்டார்! எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு ஒருமுறை சென்றபோது, ‘ஜனனீ ஜனனீ...’ எனும் பாடலைப் பாடினார். அதைக்கேட்ட எங்கள் குடும்ப நண்பர் சுந்தரசேனா, நந்திகேஸ்வரரை திருக்கடையூர் அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.
முதன்முதலில் தேவியை தரிசிக்கச் செல்வதால் பழம், வெற்றிலை-பாக்கு, மாலை என நிவேதனப் பொருட்களோடு, அங்கே வயது முதிர்ந்த சுமங்கலி பெண்மணி ஒருவர் சொன்ன யோசனைப்படி, அபிராமிக்கு நித்ய மல்லிகையும் வாங்கிக்கொண்டோம். ஆலய வாசலில் ஒரு கடையிலிருந்து அபிராமி அந்தாதி பாடல்களை ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள். ‘தாரமர் கொன்றையும், உதிக்கின்ற செங்கதிர்’ பாடலை அப்போதுதான் முதல்முறையாகக் கேட்ட நந்திகேஸ்வரர், தேவியின் சந்நதியில் கணீர்க் குரலில் ராகத்துடன் பாட ஆரம்பித்துவிட்டார். அப்போது அவருக்கு வயது மூன்றுதான்! தன் முதல் குரு அபிராமியம்மன்தான் என்பார் நந்திகேஸ்வரர். கோயிலைவிட்டுத் திரும்ப வரும்போது குழந்தையின் ஞானத்தைக் கண்டு பிரமித்த கடைக்காரர் அவருக்கு அபிராமி அந்தாதி பதிகம் புத்தகமும் அதன் ஆடியோ சி.டி.யையும் பரிசளித்தார்.
தினமும் அதைக் கேட்டுக் கேட்டு அபிராமி அந்தாதிப் பாடல்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார்...’’ஒரு தாயாக, தன் குழந்தையின் பெருமையை மனம் நிறைந்த குதூகலத்துடன் சொல்லும் சிவகமலாம்பாள், குழந்தையை திருஞானசம்பந்தராகவே பாவிப்பதால், ‘அவர், இவர்’ என்று மரியாதை விகுதியிட்டே அழைக்கிறார். தந்தையார் சிவபாஸ்கரனும் அப்படியே! ‘‘சித்திரை மாத பொங்கலன்று தண்டையார்பேட்டை அபீதகுசாம்பாள் ஆலயத்திற்குச் சென்றபோது அம்மன் திருவீதியுலா சென்றிருந்தார். நந்திகேஸ்வரர் பாட ஆரம்பித்ததும் தேவி திருவீதியுலா முடிந்து அம்மன் வரவும் சரியாக இருந்தது. அப்போது அங்கிருந்த ஓதுவார்களைப் பாடுவதை நிறுத்தச் சொன்ன அர்ச்சகர்கள் இவரைப் பாடுமாறு கேட்டுக்கொண்டார்கள்.
அதைக் கேட்டுப் பரவசப்பட்டவர்களில் அப்போதுதான் திருக்கடவூரில் தன் சஷ்டியப்த பூர்த்தியைக் கொண்டாடிவிட்டு வந்த பெரியவர், குறிப்பிடத்தக்கவர். கண்களில் நீர் வழிய, ‘இதோ இங்கேதான் அபிராமி எழுந்தருளியிருக்கிறாள்’ என்று கூறி தடாலென நந்திகேஸ்வரர் கால்களில் விழுந்துவிட்டார்! நாங்கள் அதிர்ந்து போனோம்’’ தகவல் சொன்னார், சிவபாஸ்கரன். அன்றிலிருந்து ஒவ்வொரு ஜனவரி 14ம் தேதியன்றும் திருக்கடவூர் சென்று தேவியை தரிசிப்பதை வழக்கமாக வைத்துள்ளாராம் நந்திகேஸ்வரர். வீட்டு வேலைகளைச் செய்துகொண்டே பெரிய புராணக் கதைகளை நந்திகேஸ்வரருக்குக் கற்றுத் தருவது தாயாரின் வழக்கமாக இருந்தது. இதன் நல் விளைவாக, 5 வயதில் பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் பெரியபுராணம் உபன்யாசம் செய்திருக்கிறார் நந்திகேஸ்வரர்.
63 நாயன்மார்கள், தொகையடியார்கள் சேர்த்து மொத்தம் 72 அடியார்களின் கதைகள் இவருக்கு அத்துப்படி. எந்தெந்த ஊரில் உபன்யாசமோ அந்தந்த ஊர் அடியாரைப் பற்றிக் கூறுவது இவர் வழக்கம். குரு ஆலவாயப்பன் எனும் சிவனடியாரை திருவாலங்காட்டில் சந்தித்தேன், நந்திகேஸ்வரர் தகவல் சொன்னார். ‘‘பட்டினத்தார், பேய்மாதிரி கோயில் கோயிலா சென்று தரிசனம் செய்யணும்; படுத்த இடத்தில் முக்தி அடையணும்னு சொன்னது போல் வாழும் அடியார் அவர். அவர் கூறியதன் பேரில் திருவையாறு ஷண்முகப்ரியா சத்திரத்தில், ‘தொண்டர்கள் பெருமை சொல்லவும் பெரிதே’ எனும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினேன். பிறகு, மதுரை வந்து அன்றைக்கு மீனாட்சியை தரிசித்த நான் அப்படியே மயங்காத குறைதான். அப்படி ஓர் ஈர்ப்பு! அதன் பின் மாதமொரு முறையாவது அன்னையை தரிசித்து வருகிறேன்.
ஒருமுறை, சுந்தரேஸ்வரர் பிட்டை வாங்கி உண்டு படுத்திருந்த திண்ணை அமைந்த இடத்திலேயே என் சொற்பொழிவுக்கு ஏற்பாடாகியிருந்தது. பந்தல் முழுதும் மக்கள் கூட்டம். என் சொற்பொழிவு முடியும் வரை பலத்த மழை. முழு சொற்பொழிவையும் கேட்பதற்காக அன்று சோமசுந்தரரே வருண பகவானுக்கு கட்டளையிட்டு மழை பொழியச் செய்தாரோ! பின் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் சென்றோம். அப்போது ஆவுடையாருக்கு அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தக் கோயில் வழக்கப்படி தண்ணீர் அபிஷேகத்தை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க முடியும். ஏனைய அபிஷேகங்கள் செய்யும்போது திரையை மூடிவிடுவது வழக்கம்.
நான் அங்கு சென்று பாடிய பதிகத்தில் ஆழ்ந்துபோன, திரையை மூடும் அடியார், திரையிடாமலேயே வியந்து நிற்க, எம்பெருமானுக்கு நடந்த பாலாபிஷேக தரிசனம் அடியேனுக்குக் கிட்டியது. அர்ச்சகர்கள் இதுகுறித்து அடியாரைக் குறை சொல்ல, ‘ஞானசம்பந்தர் போல் தோற்றமளிக்கும் பாலகனின் பதிகத்தில் மயங்கி உலகையே மறந்து விட்டேன்’ என்றார் அவர். அவர்களும் என் மீது அபிமானம் கொண்டு, சுவாமிக்கு விசேஷ அலங்காரம் செய்து எனக்கு சிறப்பு தரிசனம் செய்வித்தார்கள்.’’
பதின்மூன்று வயதிலேயே 30க்கும் மேற்பட்ட திருத்தலங்களில் பெரியபுராணம், அம்பிகையின் மகிமைகள் முதலான தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்தியிருக்கிறார், நந்திகேஸ்வரர். இவருக்கு மதுரை ஆதீனம் ‘திருஞான சம்பந்தரின் மறுபிறவி’ எனக்கூறி வாழ்த்தி சிவ தீட்சை தந்திருக்கிறார். ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்பதை நந்திகேஸ்வரரின் உபன்யாசத்தைக் கேட்கும் அனைவரும் உணர்வர்; தம் ஆன்மிக லயிப்பில் கூடுதலாகத் திளைப்பர்; இது நூற்றுக்கணக்கான அன்பர்களின் அனுபவம்.