Post by Amritha Varshini on Jul 15, 2016 20:40:24 GMT 5.5
அனைவருக்கும் வணக்கம்!
ஆஷாட ஏகாதசி பாண்டுரங்க பக்தர்களுக்கு ஓர் விசேஷமான நாள்.
வார்க்காரி செல்லும் பக்தர்கள் பண்டரிபுரத்தில் சங்கமிக்கும் ஓர் பொன்னாள்.
மாவுலி ஞானேஸ்வர் மஹராஜ் இந்த வார்க்காரி யாத்திரைக்கு வித்திட்டவருள் ஒருவர்.
மராட்டிய மொழியில் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் "ஞானேஸ்வரி" எனும் பக்தி நூலை அளித்துள்ளார்.
விட்டலனின் க்ருபையால் அவரைப் பற்றி ஓர் கவிதை எழுதவேண்டுமென்று ஆவல் கொண்டு ஒரு சிறு முயற்சி செய்துள்ளேன்.
ஞானேஸ்வரரின் சரிதத்தை தெரிந்தால் தான் இந்த கவிதையை நன்கு உணர முடியம் என்பதால் அவரின் சரிதத்தையும் சிறு குறிப்பாக இத்துடன் இணைத்துள்ளேன்.
இக்கவிதையை வார்க்காரி பக்தர்களுக்கு சமர்பிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
கவிதையை படித்து தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும் மற்றும் அனைவரிடமும் பகிரவும் வேண்டுகிறேன்.
தங்கள் அன்புள்ள
ஆனந்த் வாசுதேவன்
15th JUL 2016 | ஆஷாட ஏகாதசி
“தருமமிகு” சென்னை
====================
ஸந்த் ஸ்ரீ ஞானேஸ்வரர்
கோதாவரி நதிக் கரையில் அபேகாம் எனும் சிற்றூரில் வாழ்ந்த அந்தண குலத்தவரான கோவிந்த பண்டிதர், நிருபமா தம்பதிக்கு நீண்ட நாட்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. விட்டலனின் அருளால் கிடைத்ததால் குழந்தைக்கு விட்டோபா என்று பெயர் சூட்டினார்கள். சிறுவயதிலேயே ஆன்மீகத்தில் லயித்த விடோபா புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார். அப்படி ஒருமுறை அவர் ஆலந்தி நகருக்கு வந்தபோது சித்தோபந்த் எனும் அந்தணர் தன் மகள் ருக்மிணியை விட்டலனின் அருளால் அவருக்கு திருமணம் செய்தார். நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் மனைவியின் சம்மதத்துடன் காசிக்கு சென்றார். அங்கே ஸ்வாமி ராமானந்தரைச் சந்தித்தவருக்கு துறவறம் மேற்கொள்ளும் எண்ணம் எழுந்தது. தான் திருமணமானவன் என்பதை மறைத்து ராமனந்தரிடம் தீக்ஷை பெற்று துறவம் பூண்டார்.
ஒரு முறை சுவாமி ராமானந்தர் யாத்திரை மேற்கொண்டு ஆலந்தி வந்தார். அப்போது அவரை தரிசிக்க சென்ற ருக்மிணி அவர் பாதங்களில் நமஸ்கரிக்க, அவளிடம் "உனக்கு பிரம்மா, விஷ்ணு, சிவ, சக்தி அம்சங்களைக் கொண்ட குழந்தைகளைப் பெறுவாய்'' என்று ஆசீர்வதித்தார். அப்போது அவரிடம் ருக்மிணி தன் கணவன் காணமல் போன துயரத்தை கூறினாள். அவளிடம் கணவனின் முழு விபரத்தையும் அறிந்தபோது தன்னிடம் சன்யாசம் பெற்ற விட்டோபா தான் என்பதை உணர்த்து கொண்டார். மேற்கொண்டு யாத்திரையைத் தொடராமல் திரும்ப காசியை வந்தடைந்தார். விட்டோபாவை அழைத்து, கோபத்துடன், "விட்டோபா! நீ செய்த காரியம் மிகவும் பாவமான செயல். ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட ஆணுக்கு சில கடமைகள் உள்ளன. அதை முடித்தால் தான் துறவு பூணலாம். நீயும் உனது கடமைகளை முடித்துவிட்டு வா! எனது தவத்தின் பலன்களை உனக்கு அளிக்கிறேன். நீ புறப்படு. ஒரு உத்தமி கண்ணீர் விட்டால் அதற்கு பிராயச்சித்தமே கிடையாது'' என்றார்.
விட்டோபா மறுபேச்சின்றி ஆலந்திக்கு திரும்பினார்.
ஒரு இல்லறவாசி துறவியைபோல இருந்துவிடலாம். ஆனால் ஒரு துறவி இல்லறம் நடத்துவது என்பது சிக்கலான விஷயம்தான். விட்டோபா திரும்பி வந்து குடும்பம் நடத்துவது சம்பிரதாயத்திற்கு ஒவ்வாதது எனக் கூறிய சமூகம் அவர்களை ஊரை விட்டு தள்ளி வைத்தது. காலங்கள் ஓடின. அவர்களுக்கு முன்பு ராமானந்தர் ஆசிர்வதித்து போல் மூன்று மகன்களும் ஒரு மகளும் (நிவ்ருத்திநாத், ஞானதேவ் சோபானதேவ், முக்தாபாய்) பிறந்தனர். அவர்களின் இரண்டாவது மகனாக அவதரித்தவரே ஸந்த் ஸ்ரீ ஞானேஸ்வரர்.
நான்கு குழந்தைகளும் வளர்ந்து வரலாயினர். ஊரார் வளர்ந்த குழந்தைகளையும் கேலி பேசினர். இதை அறிந்த விட்டோபாவும் ருக்மாபாயும் அந்தணர்களிடம் சென்று, "நாங்கள் செய்தது குற்றமாக இருந்தால் அதற்குப் பரிகாரம் என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்த அந்தணர்கள், "நீங்கள் உயிரை விடுவதுதான் பரிகாரம்'' என்று இரக்கமின்றிச் சொன்னார்கள். மனம் நொந்த விட்டோபாவும் ருக்மாபாயும் அங்கிருந்து புறப்பட்டு பிரயாகை சென்றனர். அங்கு புனிதமான கங்கையில் குதித்து உயிர் தியாகம் செய்தனர். பெற்றோரை இழந்த பிள்ளைகளை அந்த அந்தணர்கள் அதோடு விடவில்லை. ""நீங்கள் சமூகத்தோடு சேர்ந்து வாழ வேண்டும் என்றால், அருகிலுள்ள "பைதன்' நகரில் உள்ள பண்டிதர்களிடம் சென்று நீங்கள் புனிதமானவர்கள் என்று நற்சான்று வாங்கி வரவேண்டும்'' என்றார்கள். வேத சாஸ்திரங்களில் கரை கண்டவர்கள் பைதன் நகரத்து அந்தணர்கள். அவர்களிடம் மூன்று புதல்வர்களும் தங்களுக்கு உபநயனம் செய்விக்க அனுமதி கோரி நின்றனர். உபநயனம் செய்ய உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என வினவ ஆவேசமான மூவரும் மடமடவென வேதத்தை ஓதத் துவங்கினர். அதை கேட்கப் பெறாமல் அவ்வந்தணர்கள் உங்களுக்கு வேதம் ஓதுகிற உரிமை இல்லை எனக் கூறினர். அப்பொழுது ஞானேஸ்வரர் அங்கே நின்ற எருமை கிடாவை சுட்டிக்காட்டி வேதம் ஓதும் உரிமை உங்களுக்கு மட்டும் உரியதல்ல இந்த எருமைக்கு கூட உண்டு என்று சொல்லி அந்த எருமையை தடவிக் கொடுக்க அவர்கள் எங்கு நிறுத்தினார்களோ அந்த இடத்திலிருந்து எருமை வேத கோஷம் செய்தது. அதைக் கேட்டு வாய் அடைத்து போனது பண்டிதர் கூட்டம். பின்னர் அனைவரும் ஞானேஸ்வரரின் பெருமையை உணர்ந்து ஓடோடி வந்து ஞானேஸ்வரரின் காலில் வீழ்ந்து வணங்கினர்.
தனது மூத்த சகோதரரான நிவ்ருத்திநாத்தையே குருவாக ஏற்று அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார். நிவ்ருத்திநாத் கேட்டுக்கொண்டபடி ஸ்ரீமத் பகவத் கீதையின் சாரத்தை மராட்டியில் பாமரனும் எளிதில் புரியும் வண்ணம் எழுதினார். அந்நூல் “பாவார்த்த தீபிகா” என்றும் “ஞானேஸ்வரி” என்றும் அழைக்கப்பெறுகிறது. ஞானேஸ்வரர் தனது பதினைந்து வயதிலேயே பல நூல்களையும் அபங்கங்களையும் பாடினார். "ஹரிபாட்' என்ற நூலையும், "அம்ருதானுபவம்' என்ற அத்வைத சைவ வேதாந்த காவியத்தையும் இயற்றினார்.
அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். ஒரு முறை தன் சகோதரி முக்தபாய் மாண்டே எனப்படும் போளி செய்வதற்காக பாத்திரம் தேவைப்பட்டது. அதை வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்றபோது விசோபா சாடி என்பவன் அங்குள்ள கடைக்காரர்களிடம் “ஊரை விட்டு ஒதுக்கப் பட்டவர்களுக்கு யாரும் எதுவும் கொடுக்கக் கூடாது” என்றான். அழுதுகொண்டே வீடு திரும்பிய முக்தாபாய் நடந்தவற்றை ஞானேஸ்வரனிடம் கூறினாள். ஞானேஸ்வரன் அவளிடம் கவலைப்படாதே என் முதுகிலேயே போளி செய்யலாம் எனக் கூறி யோக சக்தியால் தன் உடலை அனல் போல் செய்து தன் முதுகில் போளியை சுட்டுப் பொறித்தார். இதைக் கண்ட விசோபா சாடி வெட்கி தலை குனிந்து மன்னிப்பு கோரினான்.
சித்த புருஷர் சாங்கதேவர் தனது யோக சக்தியின் மீது கர்வம் கொண்டு, புலியின் மீது அமர்ந்து, பாம்பைக் கையில் பிடித்தபடி வாதம் செய்ய வந்த போது தாம் அமர்ந்திருந்த குட்டிச் சுவரை அப்படியே நகர்த்தி தடுத்து நிறுத்தி அவருக்கு உபதேசித்து ஆட்கொண்டருளினார் ஞானேஸ்வர். இப்படி அவர் செய்த அற்புதங்கள் ஏராளம்.
சகோதர, சகோதரி மற்றும் நாமதேவருடன் இணைந்து பண்டரிபுரம், துவாரகை, அயோத்தி, மதுரா, காசி, மதுரை, ராமேஸ்வரம் முதலான தலங்களுக்குச் சென்று உபதேசங்கள் செய்து, பக்தர்களை நெறிப்படுத்தியுள்ளார். பிறகு, 1296-ஆம் வருடம், தனது 22 - வது வயதில், பிறவியெடுத்ததன் நோக்கம் நிறைவேறியதாக உணர்ந்த ஞானேஸ்வர், கார்த்திகை மாதம், ஆலந்தி நகரில், தியான நிலையில் இருந்தபடி மகாசமாதியானார்.
ஞானேஸ்வரர் எல்லா மக்கள் மனதிலும் பக்தியை விதைத்தார். வார்கரி பக்தி சம்பிரதாயத்தின் ஆத்மாவாக இருப்பது ஸந்த் ஸ்ரீ ஞானேஸ்வர் அருளிய ஹரிபாட் அபங்கங்கள். ஸ்ம்ருதி ஸ்ருதி புராணங்களின் சாரத்தை எளிய நடையில் தகுந்த உதாரணங்களுடன் பாமர ஜனங்களும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ள இந்த அபங்கங்கள் அனைத்தும் ரத்தினங்கள். தனது ஞானம் மற்றும் உபதேசத்தால் “பகவன் நாம சங்கீர்த்தனமே சிறந்தது. அதைத் தவிர வேறு தத்துவமில்லை. ஹரி கீர்த்தனம் செய்யுங்கள். எங்கும் எல்லா உயிரிலும் பகவான் இருக்கிறார். ஜாதி, இன, குல, கோத்திர, பண, சமூஹ அந்தஸ்து பாராமல் யாவரும் ஹரிகீர்தனம் செய்து நற்கதி அடையுங்கள். நாம பக்தி நமக்கு பேதபுத்தியை நீக்கி சமத்வ புத்தியை கொடுக்கும்.“ என்று மக்களுக்கு இறையுணர்வூட்டி, மராட்டிய மண்ணில் பக்தி சம்பிரதாயத்துக்கு வித்திட்ட ஞானேஸ்வர் இன்றளவும் போற்றி வணங்கப்படுகிறார்.
மிகவும் உருக்கமான இந்த ஞானேஸ்வரரின் சரித்திரம் மற்றும் அவரின் ஞானேஸ்வரி, ஹரிபாட் அபங்கங்களை படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் பகவான் விட்டாலன் நாமருசியும், ஈஸ்வரனிடம் பிரேமபக்தியும் சமத்வ திருஷ்டியும் அனுபவமாகி பகவத் குண, லீலை, ரூப ஆனந்தத்தில் திளைப்பார்கள் என்பது உறுதி.
ராமக்ருஷ்ண ஹரி !! பாண்டுரங்க ஹரி !!
ஞாலம் போற்றும் ஞானேஸ்வரன்
திருமாலின் அவதாரமாம் ஞானேஸ்வரனவன்
நெருப்பென பொழிந்த ஞானநூல் - நம்மை
கருப்பையில் மீண்டும் பிறவாதிருக்க - கருத்துடன்
உருச்செய்த அருங்காவியமாம் ஞானேஸ்வரி (1)
நல்லறம் நாடிய நல்லவரை - மீண்டும்
இல்லறம் செல்ல பணித்த குருவருளால்
வல்லவராய் கிடைத்த நான்மணிகள்
நல்லோர் போற்றிடும் பொன்மணிகள் (2)
விதியென்ற பேரினால் கொடும்
சதி செய்த சமுதாயம் - அங்கோர்
கதியேதுமின்றி அந்தோ - பெரு
நதியில் கலந்தனர் தெய்வத் தம்பதியர் (3)
சிறுமையில் உழன்ற சிறார்கள் தங்கள்
பெருமை இவ்வுலகம் அறியும் வண்ணம்
எருமை வேதம் ஓதியதும் - அவர்தம்
அருமையை உணர்ந்தனர் பண்டிதர்கள் (4)
எலியெனக் கருதிய பழுமுனி - ஆங்கே
புலியில் அமர்ந்து வந்தபோது – தவ
வலிமையால் சுவர்தனை எழுப்பி - முனியின்
கலியை நீக்கிய ஞான பண்டிதன் (5)
பாத்திரம் தேடியலைந்த சகோதரியை
சாத்திரம் சொல்லி விரட்டினர் மூடர்கள்
ஆத்திரமின்றி தன்னுடலை கனலாக்கவும்
தோத்திரம் செய்தனர் அவ்வதிசயம் கண்டவர் (6)
கார்முகில் வண்ணன் விட்டலனை சேவிக்க
வார்கரி யாத்திரைக்கு வித்திட்ட புனிதன்
போரில் கண்ணன் உரைத்த கீதையை
பார் போற்றிடும் நூலாக்கிய கவிஞன் (7)
யுத்தபூமியில் கிடைத்த கீதாசாரம்
வித்தகன் எழுதிய ஞானசாரம்
முத்தென தெறிக்கும் அம்ருதசாரம்
பத்தியைப் பெருக்குமிந்த வேதசாரம் (8)
ஹரிபாட அபங்கமதை அனுதினம் படித்து
ஹரி கதையினை ஸ்ரவணம் செய்து
ஹரி ஸ்மரணையில் நம் கடமையைச் செய்து
ஹரி கீர்த்தனமதை பக்தியுடன் பாடுவோம் (9)
ஆலந்தியில் உறைந்தருளும் சித்தேஸ்வரன்
மாலவனின் அவதாரமாம் இந்த அகிலேஸ்வரன்
காலம் வெல்லும் காப்பியம் படைத்த புவனேஸ்வரன்
ஞாலமெலாம் போற்றித் தொழும் நம் ஞானேஸ்வரன் (10)
ஆனந்த் வாசுதேவன்
15th JUL 2016 | ஆஷாட ஏகாதசி
“தருமமிகு” சென்னை