|
Post by Amritha Varshini on Mar 8, 2016 18:29:36 GMT 5.5
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
புராணம்
காத்துத்தருவது நம் கடமை
கோயில்களும் அவற்றில் நடக்கிற உத்ஸவாதிகளுந்தான் நம் மதத்துக்கு ஆயிரம் பதினாயிரம் காலமாக எத்தனையோ எதிர்ப்புக்கள் வந்தபோதிலும் முட்டுக் கொடுத்து அவற்றைத் தாக்குப் பிடிக்கச் சக்தி தந்து வந்திருக்கின்றன. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு கதை உண்டு. ஒவ்வொரு உத்ஸவத்துக்கும் ஒரு ஐதிஹ்யம் (ஐதீகம்) உண்டு. இவை எல்லாம் புராண வாயிலாகவே நமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்த பெரிய மூலதனத்தை அலக்ஷ்யம் செய்வது ஜனங்களின் மத உணர்ச்சிக்கே பெரிய தீங்கு உண்டாக்கிவிடும்.
பிரிண்டிங் பிரெஸ் (அச்சுக்கூடம்) இல்லாத பூர்வகாலங்களிலும் ஓலைச் சுவடிகளாவே கண்ணெனக் காக்கப்பட்டு வழிவழியாக வந்துள்ள புராணங்களை இத்தனை புஸ்தகங்கள் அச்சுப் போட்டுக் கொண்டிருக்கிற இந்த நாளில் (அதில் பெரும்பாலானது ஆத்ம சிரேயஸுக்கு ஹானி செய்வதாகத் தான் இருக்கிறது) நாம் ஒரு பிரசாரமுமில்லாமல் மங்கும்படிச் செய்துவிட்டால் வருங்காலத்து ஜனங்களுக்கு நல்ல விஷயங்களில் ஈடுபடுத்தும் ஒரு பெரிய தூண்டுகோல் இல்லாமல் போய்விடும். இவற்றை எதிர்காலத்துக்கு ரக்ஷித்துத் தர வேண்டியது நம் கடமை.
|
|